புதன், 2 டிசம்பர், 2009

இருப்பு

நீர்த்திரை விழிகளுடன்
தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்
காய்ந்து உதிர்ந்த இலைச்
சருகுகளை விலக்கிப்
பார்க்கிறது காற்றுடன் மழை
கல்லறை எழுத்துக்களை

நெடும்பயண ஓய்வாய்
சிலுவைக்கரங்களில்
வந்தமர்ந்த பறவை
தத்தியிறங்கி தானியமென
கொறிக்கிறது
கல்லறை எழுத்துக்களின்
ஒற்றுப்புள்ளிகளை

தோற்றம் மறைவு என்ற
சொற்களுக்கிடையில்
கறுத்த அட்டைப்பூச்சி
மெல்ல ஊர்கிறது

பெயரைப் போர்த்தியிருக்கும்
பறவையின் எச்சத்தைக் கழுவி
மனதோடு வாசிக்கிறது மேகம்

திசையறியாது மிதந்த
ஒற்றையிறகு நனைந்து
ஒட்டுகிறது சிலுவை உச்சியில்

பளிங்குச் சதுரங்க மேடையில்
மழைத்துளிகளின்
காய் நகர்த்தலுக்கெதிராக
கிளையிலை துளை வழி
சூது நிரம்பிய ஆட்டத்தை
ஆடிக்கொண்டிருக்கின்றன
சூர்யக் கிரணங்கள்

மழைத்துளிகளும் ஒளிப்புள்ளிகளும
ஆடிச் சலித்துச் செல்ல
இருளின் மடியில்
தவழ்ந்திருக்கும் சமயம் வருகிறாள்
கைக்கும் வாய்க்கும் எட்டாமல்
நீலி நிலா
ஒற்றைமுலை குலுக்கி

அதிகாலை
கல்லறை இடுப்பின்
தாழ்வாரத்தில்
மொக்கவிழ்ந்த குறியாய்
முளைத்திருக்கிறது காளான்

( உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை )

திங்கள், 30 நவம்பர், 2009

மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா





அழைப்பிதழ்

மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும்
மக்கள் கலை இலக்கிய விழா


நாள் :26 டிசம்பர் 2009

சனிக்கிழமை பிற்பகல் 3.30மணி

இடம்: ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம். 636453
தொடர்புக்கு :9894605371,9894812474,9677520060,9789779214

பஸ்ரூட்: சேலம்-டூ-மேட்டூர்
பஸ் நிறுத்தம்: பொட்டனேரி

தெருக்கூத்து ஒரு மகத்தான கலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்லாது ஒப்பற்ற நமது பண்பாட்டு அடையாளமாகும். மலிந்து பெருகி வரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, தோல்பாவை கட்ட பொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள பூர்வ கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் சமூகத்தின் கடைகோடியில் வாழ்ந்து வரும் மக்கள் கலைஞர்கள் மீள

முடியாத வறுமையில் உழன்ற போதிலும் தம் உடல் பொருள் ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்.

நம் சகோதரர்களை இனம் கண்டு பாராட்டுவதும், அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச் செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும் அங்ஙனமே மணல்வீடு சிற்றிதழும் மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சி பட்டறையும் இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா கலைஞர் பெருமக்களுக்கான பாராட்டு விழாவாக அமைக்கப் பெற்றிருக்கிறது இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி மகிழ அன்போடு அழைக்கிறேன்.

இப்படிக்கு,
மு.ஹரிகிருஷ்ணன்
ஆசிரியர், மணல்வீடு



தலைமை : ச.தமிழ்ச்செல்வன்( மாநில பொதுச் செயலாளர், த.மு.எ.ச)


முன்னிலை: ஆதவன் தீட்சண்யா(ஆசிரியர் புது விசை)


சிறப்பு விருந்தினர்: எடிட்டர். பி. லெனின்.


நிகழ்ச்சித் தொகுப்பு: வெய்யில்,நறுமுகை. இராதாகிருஷ்ணன்








அமர்வு:1 மாலை 3.30-4.00மணிவரை


களரிக் கூட்டுதல்: அம்மாபேட்டை சரஸ்வதி நாடக சபா.

வரவேற்புரை: தக்கை.வே.பாபு

துவக்கவுரை: பிரபஞ்சன்


அமர்வு.2 மாலை 4-6மணி வரை

கிராமிய தெருக்கூத்து கலைஞர்களுக்கு, தெருக்கூத்துச்செம்மல்
தோற்பாவைக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு, நிகழ்த்துக்கலைச் செம்மல்,கலைச்சுடர் விருது& பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்

வாழ்த்துவோர்:

முனைவர் கே.ஏ. குணசேகரன்,முனைவர் மு.இராமசாமி
அம்பை,கிருஷாங்கினி,நாஞ்சில் நாடன்,பொ.வேல்சாமி,இமயம், ஹேமநாதன்(உதவி இயக்குநர் மண்டல கலை பண்பாட்டு மையம். சேலம்), பெருமாள் முருகன், புதிய மாதவி, பாமரன், லிங்கம்


சிறப்புரை: எடிட்டர் பி.லெனின்

நிறைவுரை: ச.தமிழ்ச்செல்வன்

நன்றியுரை: மு.ஹரிகிருஷ்ணன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வ.சண்முகப்ரியன், இர.தனபால்

வரவேற்புக்குழு: லக்ஷ்மி சரவணக்குமார்,செல்வ புவியரசன்,கணேசகுமாரன்,அகச்சேரன்,ராஜா.


மாலை6மணி முதல் 7மணி வரை : உணவு இடை வேளை


அமர்வு3: மாலை7மணி

நல்ல தங்காள் (கட்ட பொம்மலாட்டம்)

நிகழ்த்துவோர்: ஸ்ரீ இராம விலாஸ் நாடக சபாக்குழுவினர்,பெரிய சீரகாபாடி.
மிருதங்கம்:திருமதி.லதா
முகவீணை:திரு.செல்வம்(கண்டர் குல மாணிக்கம்)






அமர்வு4- இரவு 10 மணி

மதுரை வீரன் (தெருக்கூத்து)

நிகழ்த்துவோர்: எலிமேடு கலைமகள் நாடக சபா.
கோமாளி: மாதேஸ்
காசி ராஜன் :சண்முகம்
செண்பகவள்ளி:பழனிச்சாமி
சின்னான்:செல்லமுத்து
செல்லி:பிரகாஷ்
வீரன்:சதாசிவம்
பொம்மண்ண ராஜன்:வீராசாமி
வீர பொம்மன்:பெரிய ராஜு
பொம்மி:வடிவேல்
முகவீணை:குஞ்சு கண்ணு .செல்வம்.
மிருதங்கம்:வெங்கடாச்சலம், நடராஜன்
அரங்க நிர்வாகம்:சென்ன கிருஷ்ணன், வ. பார்த்திபன்.

(இவ்விரு நிகழ்வுகளுக்கு மட்டும்(கட்ட பொம்மலாட்டம் , தெருக்கூத்து)
பார்வையாளர் நன்கொடை:ரூ.50

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,

ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,

611901517766, சண்முகப்பிரியன் என்ற ICICI வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.

திங்கள், 23 நவம்பர், 2009

இக்கணம்

தத்தளித்து
கால்துடுப்புகளசைத்து
கரையேற
எவ்வளவு முயற்சித்தும்
மூழ்கும் தருவாயிலிருக்கிறது
அத்தனை கால்களிருந்தும்
மரத்தினின்று
இடறி விழுந்த
கம்பளிப் பூச்சி
தான் மரண விளிம்பாகிவிட்ட
தவிப்பில் தன்னொரு உள்ளங்கையை
உதிர்த்தது அந்தக் கரையோரத்தரு
மழைத்துளிகள் குத்திப் புதையும்
புள்ளியினின்று
விரியும் வட்டங்கள்
ஒன்றையொன்று முத்தமிட்டு
மடிகின்றன
காற்றின் சுழிப்பில்
அவ்விலையைப் பூச்சி
பூச்சியை இலை
மாறி மாறி துரத்தியும்
எதிரெதிர்த் திசையில்
செல்ல நேர்ந்தும் என
தீராத அலைக்கழிப்பின் இறுதியில்
வெகு அருகில்
வீழ்ந்த மற்றொரு இலை
விளிம்பைப் பற்றி
ஏறியது பூச்சி
கரை
பரந்த நீர்வெளி தொடு வான்
இப்புறமிருக்கும் நீர்நடு தனிப்பாறை
என எல்லா திசைகளிலும்
சிறுசிறு தூரம்
சென்று சலித்துக் களைத்து
நிலைத்து தவழ்ந்து கொண்டிருக்கிறது
மென்னலைகளின் சீரான லயத்தில்
இலை மேல் ரயில்

திங்கள், 9 நவம்பர், 2009

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

கதவு

திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
கதவின் பின்புறம் அவ்வப்போது
உறும்
பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்
அங்கு யாருமில்லை எனக்
கருதவிடாது பார்த்துக் கொள்கின்றன
அயர்விலும் ஆற்றாமையிலும்
திரும்பச் செல்ல
எத்தனிக்கும் கணந்தோறும்
கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று
உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது
திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறாய்


ஊழியம் & கம்பெனி (பி) லிமிடெட்

நீங்கள் ஒரு ஓவியர் என்பதை நன்கு அறிவோம் அதனாலேயே
சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியை
வழங்கியிருக்கிறோம் உங்களுக்கு
அந்த இசைக் கலைஞரைப் பாருங்கள்
எவ்வளவு அமைதியாக மணியடித்துக் கொண்டிருக்கிறார்
ஏன் இப்படி உங்கள் கண்கள் கலங்கியிருக்கின்றன
நீங்கள் பயன்படுத்த வேண்டிய
சுண்ணமும் மட்டையும் காத்துக்கொண்டிருக்கின்றன
இப்போதே பணியைத் துவக்குங்கள்
இன்னும் சில தினங்களில் நமது ஆண்டு விழாவில்
கலந்து கொள்ள கடவுள் வர உள்ளார்
அதற்குள்ளாக அனைத்தும் தயாராக வேண்டும்
அதென்ன தூரிகையா
பணியிடத்திற்கு அதோடெல்லாம் வராதீர்கள்
நமது நிறுவனத்தின் விதிகளை அறிவீர்கள் தானே
பணிநேரத்தில் செல்பேசியை உபயோகிக்காதீர்கள்
சரி சீக்கிரம் வேலையைத் துவங்குங்கள்
கடவுளின் அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்
பணிகளை மேறபார்வையிட.


முல்லா

கடிகாரங்களை விற்பதற்காக பாக்தாத்தின் கடைத்தெருக்களில்
நாள் முழுதும் சுற்றிக் கொண்டிருந்த முல்லா வீடு திரும்பிக் கொண்டிருந்தார் தன் ஒட்டகத்தில். எதிர்காலத்திற்குள் நுழையவே தெரியாத அந்தக் கடிகாரங்களை யாருமே வாங்கவே இல்லை வழக்கம் போல். சென்ற முறை பழங்களை மட்டுமே நறுக்கும கத்திகளைக் கொண்டு வந்த போதும் இப்படித்தான் நடந்தது. தாகத்தில் நா உலர பாலைவனத்தை அவர் கடந்து கொண்டிருந்தபோது மாறுவேடத்தில் அங்கு வந்த கடவுள் அவரை யாரெனக் கேட்டார். என் பெயர் முல்லா நஸ்ருதின் வாங்குவதற்கு யாரும் வராத பொருட்களைத் தயாரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றவன் என, புன்னகையோடு அவரின் கரங்களைப்பற்ற கடவுள் முனைந்தபோது, இந்தக் கரங்களை நான் பார்த்திருக்கிறேன் என்றார் முல்லா. எப்படியெனக் கடவுள் புருவமுயர்த்த, நான் நடந்து செல்லும் போது என் கால்களுக்கடியில் முள் வைத்துக்கொண்டே போகும் கரங்களை நன்கறிவேன் என்றார்.


மரப்பாச்சி

வேப்பமரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மையொன்று நெடுங்காலம் என் வீட்டிலிருந்தது. மிகுந்த காதலோடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். வாசனைத்திரவியங்கள் முகப்பூச்சு என என்னென்னவோ பூசியும் அதனிடமிருந்து இறுதிவரை அகலவில்லை வேம்பின் உலர்ந்த கசப்பு வாசனை. அதனிடம் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் மெல்லிய விம்மலோசை இரவுகளில் என் அறையெங்கும் வியாபிக்கிறது பேரிரைச்சலாக. அது என்னிடம் ஏதும் கேட்கவில்லை ஆயினும் அதற்கு தவறான உதவிகளையே செய்தேன் போலும். தன்னை இரண்டாகப் பிளக்கும் ஒரு கோடாரி அல்லது சாம்பலாய்த் தூளாக்கும் கொஞ்சம் நெருப்பு என எதையாவது பரிசளித்திருக்கலாம் நான். ஒரு நாள் அது திடீரெனக் காணாமல் போய்விட்டது. அதுமுதலாய் அதனை எல்லா இடத்திலும் தேடிவருகிறேன். அதனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கவேண்டும். அவ்வளவே. திடீரெனக் காணாமல் போவது எப்படியென.

(காயசண்டிகை கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம்)

வியாழன், 22 அக்டோபர், 2009

ராஜசுந்தரராஜன் கவிதைகள்

*

குற்றுயிரும் கொலையுருமாய்க் கிடந்த
ஒரு சிகரெட்டை
முற்றாகக் கொன்றவன் நான்
அதில் எனக்குக்
குற்றபோதம் இல்லை


*

வான பரியந்தம் உயர்ந்த கோபுரத்தில் ஏறி
இல்லை என்று கைவிரித்து நிற்கிறது
சிலுவை


*

மழை இல்லெ தண்ணி இல்லெ

ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்லெ

அடைக்கலாங் குருவிக்குக்
கூடுகட்ட
என் வீடு சரிப்படலெ

நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்


*

கிறுக்குப்பிடித்த பெண்ணைக்
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி
அதற்கு முன் இவளைப்
புஷ்பவதியாக்க
இறை மனம் துணிந்ததே எப்படி


*

காக்கைகள் கொத்த
எறுமை நிற்கிறது இணங்கி
உண்ணிகள் காரணம்


சருகு

நழுவியது கிளையின் பிடி
விடுதலை.

விடுபட்ட மறுகணம்
மாட்டிக்கொண்டதோ காற்றின் கையில்.
அலைக்கழிப்பு

ஒரு குடிப் பிறந்தோம்

ஒரு கனி
ஒரு இலை
உதிர்ந்தன பழுத்து.

மண்ணோடு கலந்த வழியில்
ஒன்று மரம்
ஒன்று உரம்.


*

ஒரு சுடர்
ஒரு நிழல்
இல்லை தொல்லை

இருள் போக்க வந்ததுகள் என்று
வழி நெடுக விளக்குகள்.
ஒன்றின்மீதோன்று புரண்டு
குழப்பித் தொலைக்குதுகள் நிழலுகள்.


*

ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.


*

பின்தங்கிப் போன என்னை
உன் இகழ்ச்சி – நகும் - பார்வையின்
கீழ் நிறுத்திக் காணவா
உச்சியை எட்டி ஓடினாய்.
நடந்தது இது தான்.
இடைவழியில், சிறுதொலைவு.
வண்ணத்துப்பூச்சிகளின் பின்னோடி
போட்டிப்போட மறந்துவிட்டேன்.



*

அப்படி ஒரு நிலைமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்

வந்தது.
அப்படியும் வாழ்கிறோம்.

நம்மோடு நாம் காண
இத்தென்னைகள்
தம் மேனி வடுக்கள் தாங்கி.


*

கண்டெடுத்தோம்
அப்படியும் கவலைப்படுகிறோம்
அய்யோ யார் தொலைத்தாரோ என்று.


( முகவீதி கவிதைத்தொகுப்பு, தமிழினி பதிப்பகம் )

வியாழன், 15 அக்டோபர், 2009

எம் . யுவன் (யுவன் சந்திரசேகர்) கவிதைகள்


பங்களிப்பு

இந்த வரியை
நான் எழுதும்போது
கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.
கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.
சில பேர் சத்தியத்துக்காக
சிலபேர் காரணமறியாமல்.
கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.
சிலபேர் சாவதற்காக
சிலபேர் கொல்லப்படுவதற்காக.
மீதிப்பேர் இடைவெளியை
நிரப்பவென்று ஏதேதேதோ
செய்து விட்டார்கள்
ஒருவருமே கவனிக்காது
கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு
என்னுடைய பங்களிப்பாய்
ஒரு பதினாறு வரிகள்.


விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்
அறையப்படாத சவப்பெட்டி
என்று என் கபாலத்தைச்
சொல்லலாம் நீங்கள்.
ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி
மொழியின் புதைமணலில்
கழுத்திறுக மூழ்கும்
முட்டாள் ஜென்மம் என்றும்.
இரவின் வைரம் விடிந்
ததும் காக்காப்பொன்னாக
மறுகும் லோபியாய்
தூண்டிமுள்ளில் மாட்டி
கூடைக்குச் சேரும் மடமீனென்று.
நழுவிப்போகும்
கணத்தின் சிலிர்ப்பை
ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்
வீணைத்தந்தி என்று.
அல்லது
இரா.சு.குப்புசாமி,
23 செக்கடித்தெரு,
மேலகரம்,
காறையூர் (வழி)
என்று.


கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.


தொலைந்தது எது

தொலைந்தது எதுவென்றே
தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.
தொலைந்ததின் ரூபம்
நிறம் மனம் எதுவும்
ஞாபகமில்லை.
மழையில் நனைந்த பறவையின்
ஈரச்சிறகாய் உதறித் துடிக்கும்
மனதுக்கு
தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை.
எனக்கோ பயமாயிருக்கிறது
தேடியது கிடைத்தபின்னும்
கிடைத்தது அறியாமல்
தேடித் தொலைப்பேனோ என்று.

( முதல் 74 கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம் )

செவ்வாய், 13 அக்டோபர், 2009

ஆனந்த் கவிதைகள்



அந்த நாள்
எனக்கு நன்றாக
நினைவில் இருக்கிறது

அன்று என்ன
நடந்தது என்பதுதான்
ஞாபகமில்லை




மாடிப்படியில்
ஏறிக்கொண்டும்
இறங்கிக்கொண்டும்
இருக்கிறார்கள் அனைவரும்

ஏறிக்கொண்டும்
இறங்கிக் கொண்டும்
இருக்கிறது மாடிப்படி



படுகை

பறக்கும் பறவையில்
பறக்காமல் இருப்பது
எது

ஓடும் ரயிலில்
ஓடாது நிற்கிறது
ஜன்னல்

எங்கும் போகாமல்
எங்கும் போய்க் கொண்டிருக்கிறது
சாலை

எப்போதும் போய்க் கொண்டே
எங்கேயும் போகாமல் இருக்கும்
நதி
எங்கும் போகாமல் இருக்கும்
படுகையின்மேல்
எப்போதும் போய்க் கொண்டிருக்கிறது



சுவருக்கு வெளியில் இருந்து
சுவர்களைப் பார்த்து இருந்தேன்
உள்ளும் புறமும் தெரிந்தது

பின் சுவரானேன்
உள்ளும் புறமும்
ஒன்றெனத் தெரிந்தது

இப்போது
சுவருக்குள் என்ன இருக்கிறது
என்பதைத்தான்
பார்க்கவேண்டும்

சுவர் தன்னைப் பார்க்கும்போது
சுவர் இல்லாமல் போகிறது

( அளவில்லா மலர் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம். இவரும் தேவதச்சனும் இணைந்து அவரவர் கைமணல் எனும் தங்கள் முதல் கவிதைத் தொகுதியை கொண்டுவந்தார்கள் என அறிகிறேன். )

செவ்வாய், 6 அக்டோபர், 2009

கொஞ்சம் திரும்பிப்பார்க்கிறேன்



இப்பதிவை எழுத அழைத்த நண்பர் நர்சிம் அவர்களுக்கு நன்றி.

திரும்பிப்பார்த்தல் எப்போதுமே லயிப்பான விஷயமாக இருந்தில்லை. காரணம் இப்படியான மகிழ்ச்சியான காலங்கள் தொலைந்து போயிற்றே என்ற விசாரம் ஒரு புறம், மனதைத் துகள்துகளாகச் சிதறடித்த துர்நிகழ்வுகள் மீட்டப்படும் போதான கணங்களின் தாங்கவியலாத அவஸ்தைகள் ஒரு புறம் என முத்தம் பெற்ற இடத்தை தடவிப்பார்த்துக் கொள்வதும் தழும்புகளை குத்திக் கிளறிப்பார்ப்பதுமான செய்கைகளை கவனத்தோடே தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். நிகழின் கணங்கள் மட்டும் அவ்வளவு உணக்கையான தட்பவெப்பத்தில் இருக்கிறதாயென்ன.

எழுத்துக்கு மனப்பதிவுகள் அவசியமாகிறது, அவற்றைத் துறந்து சுதந்திரமாகி விடத் துடிப்பவன் எழுதுவது, சுயசூன்யம் வைத்துக் கொள்வது போன்றதானது. அதைத் தவிர்த்துவிட எவ்வளவோ முயன்று தோற்றிருக்கிறேன். எழுத்தின் மூலமான, மனப்பதிவுகளை சேமிப்பதை அவற்றைப் பற்றியதான அபிப்ராயங்கள் உருவாக்கிக் கொள்வதை அவைகள் என்னை வதைக்க அனுமதிப்பதை சினத்தையும் வெறுப்பையும் ஏன் அன்பையும் நெகிழ்வையும் கூட தூண்டுவதை தவிர்த்து விட வேண்டுமென்பது என் கடந்த காலம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடமாக நினைத்திருந்தேன். எந்த தப்பித்தலுக்கான முயற்சியும் எந்த விடுதலையையும் வழங்கிவிடவில்லை என்பது வேறு விஷய்ம்

ஒரு வித வெறுமையை எனக்குள் சிருஷ்டித்துக் கொள்வதே பிரதான நோக்கமாயிருந்தது, இந்த வெறுமையைத் தான் நான் ஓயாது என் எழுத்துகள் மூலமாக அடைந்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். என் எல்லா பிணைப்புகளிலிருந்தும் சப்தமில்லாமல் உதிரும் இலைபோன்று என்னை துண்டித்துக் கொள்வதே என் சகல துயரத்திலிருந்துமான விடுதலையாக இருக்க முடியும் என்பது என் எண்ணமாயிருந்தது. என் இச்செயற்பாடுகளின் காரணமாக ஓஷோவும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் இருந்திருக்கிறார்கள் என்பதை இப்போது உணரமுடிகிறது. இந்த மனநிலை ஒரு பருவம், அடுத்த பருவம் இதற்கு எதிர் நிலையிலிருக்கும். இப்படி ஒரு நிலைப்பாட்டிலும் அதற்கு எதிர்நிலையிலும் மாறி மாறி இருந்திருக்கிறது என் கடந்த பத்து வருடங்கள்.

என் நிலை ஒரு மாதிரி இரட்டைநிலை, நீரின் ஈர ஸ்பரிசத்திற்கும் ஆசை, கனமின்றி ஓட்டைக் குடமாகவும் இருக்க வேண்டும். இதை ஈடு செய்யும் வகையில் இலக்கியங்கள் இருந்தன. பத்து வருடங்கள் அவை என்னோடு கூடவே நான் அவைகளோடு கூடவே இருந்து வந்திருக்கிறோம். இவை என் புறவுலகின் பற்றற்ற தன்மைக்கும் அகத்தின் வெறுமைக்கும் அவ்வப்போது தீனியிட்டு வந்தன.

கணினி என்கிற தொழில் நுட்பம் 2006 வரை எனக்கு மிக அந்நியமாகவே இருந்து வந்திருக்கிறது. சுயமாக மின்னஞ்சல் கூட கிடையாது, முற்றிலும் பூஜ்யம். இப்போதும் ஏனென்று தெரியவில்லை பூஜ்ய நிலையின் மேல் தீராத காதல் இருந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி அந்த நிலையைத் தொட்டுவிட்டு வருவது எனக்கு பிடித்தமான செய்கையாக இருந்திருக்கிறது. பிறகான காலகட்டத்தில் பணியின் படிநிலைகளில் மேசையும் கணிணியுமாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்பொழுதும் அதை முழுமையாக பயில முடியவில்லை. கழுத்தை நெறிக்கும் தேவையின் கரங்களை விலக்குமளவிற்கு கற்றுக் கொண்டேன்.

பிறகு இணையம் பரிச்சயமானது, கூகுளில் எதையெதையோ தேடித் தேடி தொலைந்து போனேன். ஒரு சுபயோக சுபதினத்தில் வலையில் மேய்ந்து கொண்டிருக்கையில் தமிழ் தட்டுப்பட இடறி விழுந்து எழுந்து நிற்க இலக்குகளற்ற யாத்ரீகனுக்கு திறக்கப்படும் மாயக்குகைகள் போன்று திறந்தன பிளாகுகள். பிளாக் என்கிற தளங்களை அவைகள் பிளாக் என்று தெரியாமலே வாசித்திருக்கிறேன், இப்போதைய என் நண்பர்களை அப்போதே புக்மார்க் செய்யத் தெரிந்துகொண்டு, செய்து தொடர்ச்சியாக வியந்து வாசித்துவந்தேன், உடனடி கருத்துப்பரிமாற்றங்கள் பரஸ்பர நட்புகள் சர்ச்சைகள் மோதல்கள் என பல தளங்களில் விரிந்திருந்தது பதிவுலகம்.

இலக்கியப் பிரதிகளோடு வலைப்பதிவுகள் வாசிப்பதும் வழமையாகிவிட்டது. அப்பொழுதும் பிளாக் பற்றிய எந்த நுட்பங்களும் அறிந்திருக்கவில்லை. பின்னூட்டமிடக்கூடத் தெரியாது. 2009 பிப்ரவரி வரை எனக்கு ஜிமெயில் முகவரி கூட கிடையாது. தம்பி மற்றும அவனுடைய ஒரு நண்பன் உதவியோடு ஜிமெயில் முகவரி துவங்கி, அப்போதே பிளாக் என்ற சொல்லைக் காணுற பிளாகும் துவங்கியாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஜன்னலையும் திறந்து பார்த்து தளத்தைக் கட்டமைத்தாகிவிட்டது. தமிழில் எப்படி தட்டச்சுவது, Google transliteration கிடைத்தது, ஆங்கிலத்தில் தட்டச்ச தமிழில் வந்தது, இப்படி எனக்கு மிகப்பிடித்த கவிதைகளை சில பதிவுகளாக இடத்துவங்கினேன்.

அதுவரையில் நான் வாசித்து வந்த தளங்களில் பின்னூட்டமிட கற்றுக்கொண்டுவிட்டேன். வண்ணதாசன் என் ஆதர்சம், வண்ணதாசன் எழுத்துகள் என ஒரு நான்கு பக்க அளவில் Google transliteration ல் தட்டச்சிய கட்டுரை காணாமல் போனது நொடியில் ஏதோ தொழில் நுட்பப் கோளாறு காரணமாக. அந்த ஒடிந்த மனநிலையில் அப்படி காணாமல்போனதையே நான்குவரிப்பதிவாக்கி பதிவிட்டேன். அப்போது தான் NHM writer உபயோகிக்கச் சொல்லி ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்களிடமிருந்து பின்னூட்டம் வந்தது. பிறகு அவ்வப்போது எழுத்துப்பிழைகளை சுட்டியும் தன் விமர்சனங்களை மென்மையாக தெரிவித்தபடியும் இருந்தார்.

பிறகு ஆதவா, ச முத்துவேல், அனுஜன்யா, மாதவராஜ், வடகரைவேலன் அண்ணாச்சி,,,,,,,, மற்றும பலர் தொடர்ந்து வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டது மிகுந்த ஊக்கமளிப்பதாயிருந்தது. ஒரு நாள் மதியம் பதிவுப்பக்கம் வருகையில், என் சதுரங்கம் கவிதையை தன் வலைப்பப்பக்கத்தில் அறிமுகப்படுத்தி பதிவிட்டிருந்தார் ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்கள். அன்று அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

பிறகு எவ்வளவு அன்புள்ளங்கள். அந்தப்பட்டியல் மிக நீளமானது. ஒரு கைக்குழந்தையைப் போல் அவர்கள் கரங்களில் வலம் வரத்துவங்கினேன். எவ்வளவு அன்பு, நட்புகள், நல்லிதயங்கள் என இவ்வருட பிப்ரவரி முதல் இது வரையிலான ஏழு மாதங்களிலான பயணம் மிக இனிமையானது.

வலையுலகில் முதலில் தொலைபேசியது ச.முத்துவேல் அவர்களிடம் தான், முதலில் பார்த்ததும் அவரையும் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களையும். பிறகு அநேகமாக எல்லோரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்பதிவுலகம் எனக்களித்திருக்கும் நட்பு வட்டத்தை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வெறுமையை தனிமையை உறவின் பிரிவின் வலியை வாழ்வின் அலைக்கழிப்பை என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டபோது இந்த நட்பு வட்டத்திடமிருந்து ஆறுதலாகப் பெற்ற சொற்களின் கதகதப்பு இன்னும் அப்படியே இருக்கிறது.

தற்போது எதுவும் எழுதுவதில்லையே என நண்பர்கள் கேட்பதுண்டு, தற்போதைய வேலைப்பளு காரணம் எனத் தோன்றினாலும் இன்னும் ஆழ்ந்து யோசிக்க ஒரு காரணம் தென்பட்டது. எனக்கு வருடமொருமுறை பருவகாலம் மாதிரி ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்துவிடும் (உண்மை நம்புங்கள்), அந்த பைத்தியநிலை சில மாதங்கள் நீடிக்கும், பிறகு இயல்பு நிலை திரும்பிவிடும். பிறகு குறிப்பிட்ட இடைவெளி விட்டு அடுத்த வருடத்தில் அந்தப் பருவம் திரும்பவரும். அந்தக் காலகட்டத்தில் வித்தியாசமான அந்நியமான செய்கைகளை செய்து வந்திருக்கிறேன். அப்படியான செய்கைகளில் எழுதுவதும் ஒன்று.

கொஞ்சம் என்று நிறையவே திரும்பிப்பார்த்துவிட்டேன். :)

வியாழன், 1 அக்டோபர், 2009

சங்கர ராம சுப்ரமணியன் கவிதைகள்



சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை

தலைப்பிரட்டைகளை
மீன்களென்று எண்ணி
நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அள்ளி
சட்டைப்பையில்
நிரப்பிச்செல்லும் சிறுவர்கள் நீங்கள்
அவை
உங்கள் விருப்பப்படியே
உங்கள் தலைக்குள்ளும்
சில நாட்களுக்கு
அவரவர் வசதிக்கேற்ப
குப்பிகளிலும்
மீனென நீந்தும்.
மீன்களைப் பிடிப்பதற்கு தேவையான
தூண்டில்கள்
வலைகள்
காத்திருப்பின் இருள்
எதையுமே அறியாத சிறுவர்கள்
நீங்கள்.
தலைப்பிரட்டைகளை
சட்டைப்பைக்குள் நிரப்பி
எடுத்துச்செல்கிறீர்கள்.
உலகிற்கும்
காத்திருக்கும் உங்கள் அம்மாவிற்கும்
யாரும் எதிர்பார்த்திராத
அரிய உயிர்த்துடிப்புள்ள
பரிசை எடுத்துச்செல்வதில்
உங்கள் மனம் படபடக்கிறது
உங்கள் தோழி தேஜீவிடமும்
இந்தப் பரிசை
பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும்
நண்பர்களே
உங்களது இப்போதைய
சந்தோஷத்திற்கு
நான் ஒரு பெயர் இடப்போகிறேன்.
தலைப்பிரட்டை.



ஒரு இரையை
புதிரானதும், கரடுமுரடானதுமான இடங்களில்
எலி ஒன்று இழுத்துச் செல்வது போல்
கனவொன்று
நேற்றும் என்னை வழியெங்கும்
அழைத்துச் சென்றது.
என்னை பரிதவிக்க விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
அந்தக் கனவு கொறித்தது
மீதியாய் என்னை மதில்களிலிருந்து
தூக்கி எறிந்தது.
அபாயத்தில் அலறுவதும் பீதிக்குள்ளாவதுமாய்
வழியெங்கும் கனவின்
கொடூரப் பற்களிடையே
நடுங்கியபடி இருந்தேன்.
கனவில் எங்களைக் கண்டாயா என்று
நீங்கள் கேட்கிறீர்கள்
சற்று இளைப்பாறிவிட்டு
உங்களுக்கு நியாயமாகவே பதிலுரைக்கிறேன்.
நீங்கள் இல்லாமலா ?

நித்தியவனம்

தெலைபேசியில் உள்ள எண்காட்டியில்
எண்கள் நடுங்குவதை
முதல் முறையாய் பார்க்கிறீர்களா.
உங்கள் அழைப்புமணியின் ரீங்காரம்
இதவரை செல்லாத நிலவுகளின்
சுவர்களுக்குள்
ஊடுருவுவதை உணர்கிறீர்களா.
நீங்கள் அழைக்கும் நபர்
சற்றுமுன் இறந்தவராய் இருக்கக்கூடும்.



இரவு காகமென அமர்ந்திருக்கிறது
உயிர்
ஒரு கொக்கின்
வெளிச்ச உடலுடன்
ஆஸ்பத்திரி காரிடாரில் நடந்து
வெளியேறியது.
கொக்கும் காகமும்
ஒரு நித்ய வனத்திற்குள்
ஜோடியாய் பறப்பதை
நீங்கள் பார்த்தீர்கள்
நான் பர்ததேன்.


( சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை, சந்தியா பதிப்பகம். முதலில் இவரின் காகங்கள் வந்த வெயில் தொகுப்பு தான் படிக்க கிடைத்தது, அது இவரின் பிற தொகுதிகளையும் தேடும் ஆர்வத்தைத் தூண்டியது, பிறகு அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள், தற்போது இந்தத் தொகுப்பும் வாசிக்க முடிந்தது. இவரின் முதல் தொகுப்பான மிதக்கும் இருக்கைகளின் நகரம் இன்னும் வாசிக்க கிடைக்கவில்லை. வாசகனை மிரட்டாத எளிய ஆற்றொழுக்கான உரைநடையில் கவித்துவ புனைவுகளாய் இக்கவிதைகள் நிறைவான வாசிப்பனுபவத்தையும் கவிதானுபவத்தையும் நல்குகிறது. )

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

பாதசாரி கவிதைகள்


ஈக்குஞ்சு

ஈக்குஞ்சு ஒன்று கண்டேன் ஆஹா...
என்னுயிரைப் பகலில்
கலகலப்பாக்கியதொரு ஈக்குஞ்சு தான்
எவ்வளவு அற்புதம்...

இரவுகளில்கூட பெரிய ஈக்கள் மேலும்
வாஞ்சை வந்து விடுகிறது
‘குற்றமும் தண்டனையும்’ நாவலுக்குள
வந்து கண் மறைக்கையில்
வெளியில் எடுத்துவிடுவேன் பெரிய ஈயை –
முன்னொரு நாள் என் மூக்கின் மேல் சிந்தின
திருநீறை என்னவள் துடைத்த மென்மையாக.

பகல் ஒரு குல்கந்து வியாபாரி
இரவே எனக்கு ரோஜாத்தோட்டம்.

ஒரு சொம்பு சிறுவாணித் தண்ணீர்
ஒரு நண்பரின் கடிதம்

ஹோட்டலில் காஃபியைத் தன் கையால்
ஆற்றி வைத்த ஒரு புதிய சர்வர்
தவிரவும் வேறென்ன
இன்று பகலில் ........

ஆத்மார்த்தமாக செய்த செயல் என்னவோ
குண்டூசி கொண்டு
(என்) சீப்பில் அழுக்கெடுத்தது தான்.......

ஒரு குழந்தையாய்
இரவில் என் மடிமீது
மலர்ந்து சிரிக்கும்
பால் மணம் மாறாத
என் டைரி.



அழகான சாட்டை

என் இறுதி மூச்சாக நான் வெளியேறுமுன்
வந்து நிற்கிறாய் சிட்டுக்குருவியே
இதுவரை என்னிடம்
எதுவும் நீ எதிர்பார்த்ததில்லை
ஆனால் உன்னிடம் நான் தெரியத் தவறியது ஏராளம்
ஒரு பறவை இறப்பதற்கும்
ஒரு மனிதன் எனும் பெயரில் நான் இறப்பதற்கும்
உள்ள வித்தியாசமும் புரிகிறது இப்போது
புத்தகங்கள் மட்டுமே கூடி நிற்க இறப்பது
என்பது கூட வேதனையில்லை

உன் பாடல்களில்
எவ்வளவோ கேட்டிருக்கலாம்
சுடரின் இறுதிப்புள்ளி இக்கணம்
பாமரக் கண்ணின் கடைசி அசைவில்
புலப்பட வேறு உயிர் காணேன் சுற்றிலும்

கரெக்ட் டயம் பார்த்து தெரு இறங்கி
கடலை பொரிக்காரனிடம் கையேந்தும் வீட்டுநாய்
அடிக்கடி மரமேறி காக்கா முட்டை திருடும் அறைப்பூனை
புகைப்பட அப்பாவின் காலர் குடிக்கும் கறையான்கள்
புத்தகங்கள் புகுந்து அசிங்கப் படுத்திய கரப்பான்கள்
என் முன்னால் கூச்சமின்றிப் புணரும் பல்லிகள்
இரவில் உடலேறி இம்சிக்கும் பெண் கொசுக்கள்
ஒரு ஜீவனைக் காணவில்லை
நான் சொல்லிக் கொண்டு போக

புருஷனுக்குத் தெரியாமல் பலதடவை பிணங்களுக்கு
கொஞ்சம் தலைக்கு வெண்ணையும்
காட்டுக்கு வறட்டியும்
இலவசமாகத் தந்த ஒரே அக்காவும் எங்கோ
தொலைவூரில் சாணி தட்டும் ஓசை கேட்கிறது

நான் வெளியேறிய பின்னால்
சிலர் வரக்கூடும் மனித உடையில்
ஜென்மம் நீங்கின ஒரு கவிஞனைக் காண
இருதயம் நிற்கும் முன்பே இறந்து விட்ட மனிதர்களில்
நானும ஒருவன் என்பதெல்லாம்
நீ அறிந்தது தானே என் சிட்டே

இனியொரு சிறு உதவி
உன் பாடல்களின் வழிகளிலெல்லாம்
இவ்விதயத்தின் கடைசி வரிகளையும் சேர்த்துப்பாடு

மனித உடை தரித்த உயிர்களே
மன்னித்து விடுங்கள் ஒரு மனிதனை
இறுதிவரை அவனின் சாதனை
அழகான சாட்டை செய்ய முயன்றது தான்
அழகான சாட்டை. ஆமாம் அழகான............

பேசும் வாழ்க்கை

அன்று சைக்கிளின் மீதிருந்து
அந்தப் புன்னகையின் கையுயர்த்தல்
நேற்று ஸ்கூட்டரிலிருந்து புன்னகையின் கையுயர்த்தல்
(நான் என்றும் காலத்தின் மீது நடையில்)

இடையில் மாதக்கணக்கில்
இருவரும் சந்திக்காமல் ஆனாலும்
சந்திக்கும் நாளின் இதயத்திலிருந்து
அதே புன்னகையின் கையுயர்த்தல்

சுமார் எட்டு வருடங்களாக
சந்திப்பு நேராத நாட்களில்
எங்களைக் குறித்து கிஞ்சித்தும் சிந்தனையே
எனக்கிருக்காது. அவருக்கும் அப்படித் தானிக்கும்

அவர் எங்கோ பக்கத்தில் தான்
ஒரு கம்பெனியில் வேலை பார்க்கவேண்டும்
என்ன பேர் என்ன வேலை எங்கே வீடு தெரியாது
ஒரு வார்த்தை பேசிக்கொண்டதில்லை

வீட்டுப் பூந்தொட்டியில் வெங்காயப் பயிரென்றான
இன்று –

என் முகம் இறந்த தாய்
எனக்கு முகம் திருப்பும் தந்தை
எனக்கு முகம் மறுக்கும் உறவுகள்
என் முகம் புரியா நண்பர்கள்
இருந்தாலும்

நேர்தலுக்கான திட்டமோ
நேர்தலுக்கான எதிர்பார்ப்போ
நேர்தலுக்கான ஏக்கமோ
இல்லாமல்
அந்த புன்னகையின் கையுயர்த்தல்
என்றேனும்
இவ்விதந்தான்
வாழ்க்கை முகங்கொடுத்து
என்னோடு பேசுவது.

(பாதசாரியின் மீனுக்குள் கடல் தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை. இத்தொகுப்பு இரண்டு சிறுகதைகளும் சில கவிதைகளும உள்ளடக்கியது. தமிழினி வெளியீடு. இத்தொகுப்பிலுள்ள காசி சிறுகதை ஏற்படுத்திய பாதிப்பு சொல்லில் அடங்காது.)

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

ரமேஷ் பிரேம் கவிதைகள்

  • ஆழிப்பேரலை
    ஊருக்குள் புகுந்தது
    தொலைக்காட்சிப் பெட்டியருகே இருந்த
    கண்ணாடித் தொட்டி மீன்களை
    மீண்டும் கடலுக்குள் சேர்த்தது

    ஆழியின் ஆழ்படிவில்
    பனிக்குடத்துக்குள்
    நீந்திக் கொண்டிருக்கிறது
    சிசு

  • எறும்புகளுக்கு
    தற்கொலை செய்துகொள்ளத்
    தெரிவதில்லை
    எனக்குத தெரிந்த எறும்பொன்று
    மூன்று முறை தோல்வி கண்டது
    எதேச்சையாக ஒரு நாள்
    என்னைக் கடித்தபோது
    தன் இறுதி முடிவுக்கான வழியை
    அறிந்து கொண்டது

  • இரவில் படுக்கப் போவதற்கு முன்
    உறைக்கு ஊற்றிய பால் தயிராவதைக்
    காலையில் கண்டதுண்டு

    இரவெலாம் கண்விழித்து
    அது வேறொன்றாகத் திரியும்
    கூத்தைக்
    கண்டதுண்டோ நீ
    கதைசொல்லி

  • காகம்
    வழி தவறி விட்டது
    மிடறு நீருக்காக
    பாலை நிலப்பகுதியில் அலைந்தது

    பள்ளிவிட்டுச் செல்லும் குழந்தையின்
    தோள் பையிலிருந்த கதைப்புத்தகத்துள்
    ஒரு பானையையும்
    அதிலுள்ள கையகல நீரையும் கண்டது
    பரபரப்போடு கற்களைத் தேடியது
    தாகத்தை மறந்து தானும் ஒரு கதையாவதற்கு

  • புத்தகத்தின் மீது
    வட்டமாக விழுகிறது
    மேசை விளக்கின் ஒளி
    வரிவரியாக நீளும்
    எழுத்துக்களால் உருவாகும்
    கதைகளுக்குள் நிகழ்ந்தபடியிருக்கும்
    மனிதர்கள்
    தனியொருவனை ஐந்தாறு பேர்
    ஆயுதங்களோடு விரட்டுகிறார்கள்
    என்னால் எதுவும் செய்ய முடியவில்லை
    சமயோசிதமாக புத்தகத்தை மூடியிருந்தால்
    என் முகத்தில் பட்டுத் தெறித்து வழியும்
    கதகதக்கும் இக்குருதியை
    தவிர்த்திருக்கலாம்
    ஒருவேளை

  • ஒவ்வொரு தீக்குச்சிகளாக உரசி
    விரல்கள் சுடும் வரை எரியவிடுவது
    சிறுவயதிலிருந்து பழக்கம்

    அபூர்வமாக சில சமயம்
    எரியும் சுடரில்
    யாரோ பார்ப்பது தெரியும்

    முகமற்ற பார்வை


  • நெருப்பு ஏன் சுடுகிறது

    சுடக்கூடாது என்று அதற்கு யாரும்
    ஏன் சொல்லித் தரவில்லை

    கடல் உப்புக் கரிக்கிறது
    மீன் ஏன் கரிப்பதில்லை

    தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்
    சரி சாமி செய்வது தப்பில்லையா

    குழந்தைகள் பேசிப் பேசி
    பெரியவர்கள் ஆகிறார்கள்

  • கனவில் வந்த அப்பா
    நான் அதிகமாகக் குடிப்பதாகக்
    குறைபட்டுக்கொண்டார்
    தனக்கு சாராயம் வைத்துப்
    படையலிடாததையும்
    நாசூக்காகச் சொல்லிவிட்டுப் போனார்

    ( உப்பு கவிதைத் தொகுதியிலுள்ள கவிதைகள். உயிர்மை வெளியீடு )

வியாழன், 10 செப்டம்பர், 2009

அப்பாஸ் கவிதைகள்


கோடுகள்

நான் இல்லாத வேளை
நீ என்ன செய்து கொண்டிருந்தாய்
என் மகளே
வயலின் இசைத்துக் கொண்டு
தொலைபேசியில் உன் நண்பர்களோடு
அறையினுள்
அல்லது
உனது விரல்களில் வழியும்
வர்ணங்களின் கோடுகளோடு
அப்படியே தான்
நான் இல்லாத வேளையில்
என்ன செய்து கொண்டிருக்கிறாயோ
அதுவே அதுவே
உனது வேளை
என் மகளே.

நண்பகல்

என்னைக் கேட்காமலேயே
எனது அறையினுள் வந்து விடுகிறது
சப்தமற்ற
இந்த நண்பகல்.
பின் மதிய வேளையில்
வெளியேறும் போதும்
என்னிடத்தில்
சொல்லிக் கொள்வதே இல்லை
கேட்காமலும் சொல்லிக் கொள்ளாமலும்
வரும் போகும்
நண்பகலைக் காண
நீயும் ஒரு முறை
வா
எனது மகளே.


வெளியே

ஒரே புழுக்கமாய் இருக்கிறது
என் மீது எதையும் ஏற்றாதே
உனது வார்த்தைகளும் போரடிக்கிறது
நகருக்கு வெளியே கூட்டிப் போ என்னை
சுவரில் சாய்த்து வைத்த
சைக்கிள் சொல்லிற்று
இப்போது அதை அழைத்து
வெளியே போய்க் கொண்டிருக்கிறேன்.

( அப்பாஸ் அவர்களின் ஆறாவது பகல் என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை. அகம் வெளியீடு )

புதன், 9 செப்டம்பர், 2009

வாமு கோமு கவிதை

சாந்தாவின் புலம்பல் படலம் 1

லீவ் விட்டா ஐயா என்னை மறந்துடுவீங்களோ ?
ஒரு கடிதமாச்சும அனுப்ப வேண்டாம் ?
நான் ஒருத்தி இங்க தினமும் கடுதாசி வரும்
வரும்னு பாத்துட்டிருந்துட்டு ஏமாந்து போறேன்.
நிஜமாலுமே மறந்துட்டியாப்பா ?
திருப்பூரு சுத்தி அலைவீங்க.. எவடா கெடைப்பான்னு.
பேச்சுல உங்கள அடிச்சிக்க முடியுமா ?
அன்னிக்கி பஸ்சுல என்ன சொன்னீங்க ?
போனதும் முதல் வேலையா உன்னை
நெனச்சு நெனச்சு எழுதுன கவிதை
அமுட்டையும் அனுப்பறேன்னு.. நல்லாவே
இருந்துச்சு வசனம் ! இதை
படிச்ச பின்னாடி அனுப்புனீங்க..
எல்லாத்தையும் அடுப்புல போட்டு கொளுத்தீர்வேன்.
இனியும் லெட்டர் வரலைன்னா
சாப்பிடக் கூட மாட்டேன். ப்ளீஸ்டா..
ஒரே ஒரு கடுதாசி .. ப்ளீஸ்.
இங்க உங்க போட்டோவுக்கு நான் கிஸ்
பண்ணிப் பண்ணி போட்டோ நசிஞ்சு போச்சி.
அழுத்தக்கார ஆளுப்பா நீங்க.
போனா போச்சாதுன்னு பழைய டென்த்
படிச்சப்ப எடுத்த போட்டாவ குடுத்தா
என்ன சொன்னீங்க ? அப்படியே தலையில
கிரீடமும் கையில வேலையும் குடுத்திட்டா
சாமியாக்கும்னு நெனச்சு தின்னீரு
இட்டுக்கிட்டு போயிருப்பேன்னு.. லொள்ளு !
சரியாந்த லொள்ளு ! பஸ்சுனு கூட
பாக்காம போட்டோவுக்கு கிஸ்சு வேற
குடுக்கறீங்க
பதிலுக்கு உங்க போட்டாவக் கேட்டா
நீயே எம் பாக்கட்ல இருக்கு
எடுத்துககோன்னு.. சரியாந்த கொழுப்பு !
இனி என்ன எழுத ? எனக்கு எல்லாமே
நீங்க தான்.
( இந்தக் கடிதம் மிஸ்டேக் இல்லாம வர
காரணம் என் தங்கச்சி உங்க
கொழுந்தியாவின் திரு உதவி )

( சொல்லக் கூசும் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதை, உயிர்மை வெளியீடு )

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

தூண்டில் இருள்



அடர்வன இருளை முதுகில்
படர்த்திச் செல்கிறாள்
சீராய் கத்தரிக்கப்பட்டு
காற்றில் அலையும்
நீள் இருள் இழைகளின் நுனியிலிருக்கும
தூண்டிற் முட்களில்
சிக்கித் தவிக்கின்றன
என் விழிக்கோளங்கள்

அவள் காற்சுவடுகளுககு
திலகமிட்டபடி தொடர்கின்றன
செறுகப்பட்ட விழிதுவாரம் வழி பரவி
இமையோரங்களில் வழியுமென் உதிரத்துளிகள்

கேச இழை வேர்களில் கூடிய மென்வலியில்
உணர்கிறாள் அகப்பட்டதின் பாரத்தை
மகிழ்ச்சியோ மிரட்சியோ
கூடுதல் விசையுடன்
இழுத்தோடுகிறாள்

விரைதலில் பிணித்த வலியில்
நகரவியலாது ஸ்தம்பித்த கணம்
விழிகள் என் இமைகளிலிருந்து பெயர்ந்து
காலமற்ற காலத்தின் பெண்டுலங்களாய்
அவள் பிருஷ்டங்களை
உரசியுரசிச் செல்கின்றன

விட்டு விலகிச் செல்லும்
என் கண்களை
கண்களின்றி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

சி. மோகன் கவிதை



எனக்கு தூக்கம் வருகிறது – எனினும்
தூங்கும் மார்க்கமறியாது விழித்திருக்கிறேன்
எனக்கு தூக்கம்வரும் போது
ஒரு மிருகம் வாய் பிளந்து நாக்கை நீட்டும்
நான் வாயினுள் புகுந்து நாவினுள் துயின்றிருப்பேன்
பொதுவாக என் சயன அறையும்
படுக்கையும் அவை தாம்

சமயங்களில் என் கடவுளின் உள்ளங்கையிலும்
என் சாத்தானின் மடியிலும்
அயர்ந்து உறங்கியிருக்கிறேன்

இன்று அந்த மிருகத்தைக் காணவில்லை
எப்போதாவது இது நேர்வது தான்
ஏனென்று நானும் கேட்டதில்லை

கடவுளின் உள்ளங்கையைத் தேடிய போது
அவர் சுயமைதுனத்தில் லயித்திருந்தார்
சாத்தானின் மடியை நாடிய போது அவர்
கடவுளின் மனைவியோடு சுகித்திருந்தார்

இப்போது நான் என்ன செய்வது
எனக்கு தூக்கம் வருகிறது
தூங்கும் மார்க்கமறியாது விழித்திருக்கிறேன்


நன்றி - கடவு இதழ் (நாடோடிகள் விட்டுச் சென்றிருப்பது)

புதன், 26 ஆகஸ்ட், 2009

ஊர்சுலா ராகவ் கவிதை



சகிக்க முடியாத ஆண்

ஒரு கவிஞனுமான எனது தந்தை
சமூகம் விரும்பாதவனாகவும்
தன் சுதந்திரத்தை அடிமைப் படுத்தும்
பெண்களுக்கு கணவனாக இருப்பதாகவும்
தன் போதை நாட்களிடையே உளறுகிறார்
வெளியெங்கும் சொல்லாடல்களுக்கான
நபர்களைத் தேடிக் கொண்டிருக்குமவர்
மதுவோடு இறைச்சியையும்
காலி செய்தவாறு சில கவிதைகள்
கிடைத்த நாளில் மகிழ்வுடன் எங்களிலிருந்து வெளியேறுகிறார்
நள்ளிரவு விடுதிகளில் கைவிட்டுச் செல்பவரை
தனது புரவலர் என்று அறிமுகப்படுத்தும்
அவரை புரிந்து கொண்ட பெண்ணொருத்தி
மனைவியாகக் கிடைக்க வழியற்று
காலம் கடந்து போய்விட்டதாகப் புலம்பும் போது
யாராலும் சகிக்க முடியாது
இச்சைகளை கவிதையில் புணர்ந்து கொண்டும்
நமைச்சல்களை உறக்கத்தில் கீறிக் கொண்டும்
ஏறக்குறைய பரி நிர்வாணமாகி விடுகிறார்
சில சமயம் தன் கவிதைகளுக்கு சில நாணயங்களை
பரிசாகக் கொண்டு இருப்பிடம் திரும்பும் அவர்
நள்ளிரவில் என்னை எழுப்பி நடனமாடுவார்
தன்னை ஒரு தந்தை இல்லையென்றும்
உன் தாயின் தோழன் அல்லது காதலன் என்றும்
பொய் சொல்வார்
கன்றாவி தான் ஒரு கவிஞன் தந்தையாய் இருப்பது


( இந்தக் கவிதையும் படிக்கும் போது லேசான புன்முறுவலை வரவழைத்தது. இக்கவிதையை எழுதிய ராகவ்வின் தந்தை ஒரு நவீன கவிஞர். இந்தப் பின்புலம் தெரிந்த பிறகு இக்கவிதையை கூடுதலாகவே ரசிக்க முடிந்தது. )

நன்றி - புது எழுத்து சிற்றிதழ்

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

மணல் வீடு கவிதைகள்



இரு மாத இதழாக வெளிவரும் சமீபத்திய மணல் வீடு சிற்றிதழில் நண்பர்கள் முபாரக், மண்குதிரை, நிலாரசிகன், ச. முத்துவேல், சேரல் ஆகியோரின் கவிதைகளோடு என் கவிதைகளும் வெளியாகியிருக்கின்றன. நண்பர்களுக்கு வாழ்த்துகள்

வெளிவந்த சாசனம், திருவினை, மோனவெளி மற்றும் தரை கவிதைகளின் இணைப்புகள்

http://yathrigan-yathra.blogspot.com/2009/04/blog-post_21.html

http://yathrigan-yathra.blogspot.com/2009/05/blog-post_24.html

http://yathrigan-yathra.blogspot.com/2009/05/blog-post_12.html

http://yathrigan-yathra.blogspot.com/2009/06/blog-post_22.html


மணல் வீடு முந்தைய இதழ்களில் வெளிவந்த படைப்புகள் சில பின்வரும் இணைப்பிலுள்ள வலைப்பூவில் பதிவிடப்பட்டிருக்கிறது. இதழின் முகவரி மற்றும் விவரங்கள் இந்த வலைப்பூவிலிருக்கிறது

http://manalveedu.blogspot.com/

மணல் வீடு சிற்றிதழுக்கும் அதன் ஆசிரியர் மு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பிரான்சிஸ் கிருபா கவிதை



ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி

அம்மா கவலையின்றி துணி துவைப்பாள்
அப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்
அண்ணன் கடன் பட்டவன் போல் டி.வி பார்ப்பான்
அவளோ சலிப்பின்றி வகுப்பெடுப்பாள்
மாடத்துத் தொட்டிச் செடிகளில்
குட்டிப்பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்
ஜன்னல் திலைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்
வாசலில் நுழையும் வெயில்
அவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்
கைகளைத் தூக்கி தூரப் போடுவது மாதிரி விளக்குவாள்
ஆத்திரப்படும் போது காலை ஓங்கித் தரையில் உதைப்பாள்
சுட்டு விரலால் காற்றில் எழுதுவாள் அழிப்பாள்
புரிந்து கொள்ளாத மாணவ மாணவிகளிடம் பொறுமையிழப்பாள்
பொட்டு வைப்பதைவிட மெதுவாகத் தான் என்றாலும்
தன் நெற்றியில் அடிக்கடி அடித்துக் கொள்வாள்
கன்னத்தில் ஒரு பலூன் ஊதிக் கடைவாயில் கடித்தபடி
யோசனையோடு குறுக்கும் மறுக்கும் நடப்பாள்
கெட்டிக்கார குழந்தைகளைப் பாராட்ட
புன்னகை வயலில் பூவொன்று பறித்துக் கொண்டு
சந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்
ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி
திங்கட்கிழமையை தள்ளிக் கொண்டு போவாள் பள்ளிக்கு



( இந்தக் கவிதையை படித்ததிலிருந்து அவ்வப்போது தானே மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன். டீச்சர் சிறுமி அடிக்கடி தோன்றி எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள். நான் புரியாத மாதிரி நடித்து, அவள் பொறுமையிழந்து பொட்டு வைப்பது போல் மெலிதாக தலையிலடித்துக் கொள்வதை உள்ளூர ரசித்து புன்னகைத்துக் கொள்கிறேன். என் சமீபத்திய நாட்களை அழகாக்கிக் கொண்டிருக்கும் அந்த முகமறியாச் சிறுமிக்கும் கிருபாவுக்கும் என் நன்றிகள்.

நிழலன்றி ஏதுமற்றவன் என்ற தொகுப்பிலுள்ள கவிதை இது. யுனைடட் ரைட்டர்ஸ் வெளியீடு. )

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

சில பிரியங்கள்



அறுபட்ட கோழியின்
தூவலாய் மிதக்கின்றன
கைவிடப்பட்ட பிரியங்கள்
சில மிதந்து மேகங்களுக்கப்பால் சென்று
நட்சத்திரங்களாகி விடுகின்றன
சில அலைகளின் மடிப்புகளில்
மூழ்கி கடற்பாசிகளோடு நேசம் கொள்கின்றன
சில சாக்கடையில் மிதக்கும்
சூரிய வட்டில் பரிமாறப்பட்டிருக்கும்
நரகல் துண்டுகளை அலங்கரிக்கின்றன
சில
பலருக்கு கைக்கெட்டிவிடும் பாவனை காட்டி
கண்மூடியாய் பின்தொடர வைத்து
தற்கொலை முனையில்
சொர்க்கத்தின் வாயிலை
திறந்து வைக்கின்றன
சில
காதலர்களின் பார்வைக் கம்பிகளில்
பட்டாம்பூச்சியென அமர்ந்தமர்ந்து
சங்கேதமாய் எதையோ
உணர்த்த முயல்கின்றன
சில
சிலந்தி வலைகளில் சிக்கி
காற்றின் அலைக்கழிப்புகளில்
விலகும் கணத்தை எதிர்நோக்கியிருக்கின்றன
இப்படி எல்லாமும் தங்களுக்கான
இடங்களைத் தேர்ந்து கொள்ள
ஒரேயொரு இறகு மட்டும்
தனித்து மிதந்து கொண்டிருக்கிறது அந்தரத்தில்
எவ்விடம் எதனிடம் யாரிடம்
அது சென்றடையப் போகிறதென்கிற
பதற்றம் கூடிக்கொண்டே வருகிற தருவாயில்
பாலருந்த விழையும்
குழந்தையின் முனைப்போடு
தேவதையொருத்தியின் ( தேவதையோ ராட்சசியோ )
முலையிடை தஞ்சமடைகிறது
சடுதியில் பார்வைப்புலத்திலிருந்து
மறைந்துவிட்ட அவள் இதை
கவனித்தாளோ கவனிக்கவில்லையோ
தெரியவில்லை
கூ(ண்)டடைந்த பிரியத்தை
உடை களைகையில் அவள்
தூக்கியெறிந்துவிடக் கூடாதென
பிரார்த்தித்துக் கொள்வோம் சபிப்போம்

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

ஒரு பொழுதில்


வீதியில் விழுந்திருக்கும்
மின் கம்பி நிழலின்
ஒரு கோட்டில்
முன்பின்னாய் பாதம் பதித்து
தடுமாறும் தருணங்களில்
சிலுவையாய் கரம் விரித்து
சமன்குலைவை சரி செய்தபடி நடக்கிறாள்
ஒரு தாவணிப் பெண்

கவனித்தோ கவனிக்காமலோ
அமர்ந்திருந்த நிழற்ப்பறவையை
மிதித்து விட
கீச்கீச்சென காலடியிலிருந்து மீண்டு
பறந்து சென்றதோ ஓடிச்சென்றதோ
அந்தப் பறவை என
மேல் கீழாய் அவதானித்தபடியிருந்த
ஒரு அபூர்வ கணத்தில்
சிறகில் அவளை வைத்து
அலகில் என் கழுத்தைப் பற்றி
பறந்து கொண்டிருந்தது அப்பறவை

முன்பே தீர்மானித்து
வைத்திருந்தது போலும்
ஒரு மேகத்தில் விடுவித்துச் சென்றது எங்களை
கழுத்தில் பற்றிய அலகின் தடத்திலிருந்து
வழியும் குருதியைத் தடுக்க
தாவணியவிழ்த்து கட்டிடுகிறாள்
சுருக்குக் கயிறாகி இறுகுகிறது கழுத்து

பொழியக் காத்திருந்த மேகத்தில்
எங்கள் காலடிகள் நழுவுகின்றன
சறுக்கிய படியே
மழைத் தாரை பிடித்திறங்கி
சங்கமமானோம்
அலைகள் தணிந்திருக்கும்
நடுக்கடலில்

வெள்ளி, 24 ஜூலை, 2009

நாகப்பழ நாக்கு


கருநீலப்பாவாடையோரத்தில் மடித்து
எச்சிற்படாமல் கடித்துத் தரும் புளிப்பு மிட்டாய்
கடித்துக் கடித்து திறக்கும்
பென்சில் வைக்கும் பிளாஸ்டிக் பெட்டியில்
பதிந்திருக்குமுன் பற்தடம்
கணக்கு பீரியடில் விழுந்த உன் பல்லை
வானத்துக்கு காட்டாமல்
உள்ளங்கைக்குள் இறுக மூடி
மதிய உணவு இடைவேளையில்
புதைத்த அந்த இடம்
இன்டர்வலில் புதர்ச்சரிவில்
நிகழ்த்தும் சிறுநீர் ஓட்டப்பந்தயம்
முத்தமிட்ட கன்னத்தைத் துடைத்துக்கொண்டே
கழுவ ஓடி குழாய் திறக்க காற்று வர
உள்ளங்கைக்குள் எச்சில் துப்பி
என் முத்தம் அழித்தது
ரிப்பனையவிழ்த்து விட்டே சலித்துப்போன
ரெட்டைப் பின்னல் நாட்களுக்கிடையில்
உச்சியிலிருந்து துவங்குமாறு அலங்கரித்திருந்த
அந்த ஒற்றைப் பின்னல் தினத்தில்
அதை பதினெட்டாவது முறையாக பற்றியிழுத்த
அப்போது அழுது கொண்டே
போடா செந்திலு பொந்திலு குந்திலு நாயே என்றதற்கு
போடி வள்ளி கள்ளி குள்ளி பல்லி பன்னி என்றது
நாகப்பழம் தின்ற நாக்கு காட்டி
நங்கு காண்பித்தது
பாதி சாப்பிட்டிருந்த ஐய்சைப் பிடுங்கிக்
கொண்டோடிய அன்று முழுக்க என்னிடம் பேசாமலிருந்தது
நொண்டியாட்டத்தில் உன் போங்கு ஆட்டம்
பொறுக்காது ஒரு அறைவிட
சில கணங்களில் உன் கன்னத்தில் சிவந்தயென்
விரல் தடம் பார்த்ததிர்ந்து
தடவியபடியே தழுவ முயல்கையில்
காக்கா அடி அடித்து அழுது
விலக்கிக்கொண்டோடியது
விளையாட்டாய் வளையல் உடைப்பது
வழக்கம் தானெனினும்
அன்று பீரிட்ட ரத்தம் பார்த்து
சாரிடி சாரிபா சாரிபா மன்னிச்சிக்கோவென
காயத்தின் ரத்தத்தை வாயில் வைத்து உறிஞ்சியது
தவறவிட்ட ஒற்றைக் கொலுசுக்காய்
அன்று முழுதும் அழுதழுது முகம் வீங்கி
வீட்டுக்குச் செல்கையில்
ஏய் இங்க பாருடி என
கையில் ஆடவிட்டபோது
சிரிப்பும் அழுகையுமாய்
பிடிபடாது ஓடிய என்னைத் துரத்தியது
ஒருநாள் விளையாட்டு பீரியடில்
மைதானத்தில் வழிமறித்து
நான்.......நான்...... என தயங்கி நின்றது
காலத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாய்
புரட்டப் பட்டுக் கொண்டேயிருக்கிறது
இன்று காலையிலிருந்து
இவளுக்கு சுகமில்லாததால்
அம்முக்குட்டியை அழைத்துவர பள்ளிக்குச் செல்ல
அழுதபடி அப்பா தோ பாருப்பா
அந்தப் பையன் என் கையை எப்படி கடிச்சிட்டான்
என்றவள் கையை வருடிவிட்டு
அவள் சுட்டுவிரல் காட்டிய திசை பார்க்க
மிரண்டு பயந்திருக்கும்
அந்த மழலையின் கரம் பிடித்து
நின்றிருந்தாள் வள்ளி.

திங்கள், 13 ஜூலை, 2009

நிலைக்கண்ணாடி


கடந்து சென்றதும்
உன்னிலிருந்து என்னை
அழித்திருக்கிறாயோவென சந்தேகித்தேன்
அருகில் வந்து பார்க்க
உன்னில் அப்படியே நானிருந்தேன்
தவறாக புரிந்து கொண்டமைக்கு
சற்றே வருந்தி
மன்னிப்பு கேட்டுச்
சென்ற என்னையழைத்து
என்னில் தன்னை சில கணம்
பார்த்துச் செல்பவர்களுக்கிடையில்
என்னில் வசிக்க விரும்பிய இதயமே
பிரியமே உன் நம்பிக்கையும் நேசமும்
என்னை வீழ்த்திவிட்டது
என் தனிமைக்கு விமோசனமளித்து
எப்போதும் என்னை விட்டகலாதிருப்பாயாவென
இறைஞ்சி கலங்கினாய்
உன் பிரியத்தின்
கனம் தாளாமல் பரிதவித்தேன்
மெதுமெதுவாய் பின்னால் நகர்ந்து
உன்னில் என்னைச் சிறியதாக்கி
சிறு பூச்சியென
பெயர்த்துக் கொண்டோடினேன் என்னை
நீ நேசித்த என்னை
நான் விரும்பிய உன்னில்
நிரந்தரமாய் இருத்திக் கொள்ள
இயலாமல் போன
குற்றவுணர்வை அதிகரிக்கச் செய்கிறது
பிறகான தருணங்களில்
உன்னை நெருங்கி கடக்கும் போதெல்லாம்
நீ பார்க்கும் பார்வை

செவ்வாய், 7 ஜூலை, 2009

கவிஞர் இசை கவிதைகள்


3 கி. மீ

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்து கொண்டிருக்க

3 கி.மீ. 3 கி.மீ. எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்

வளர்ந்தாலும் நடந்தாலும்


என் தோட்டத்தில்
ஒரு ரோஜா பூத்திருக்கிறது
அதன் கூந்தல் வெகு தொலைவில் இருக்கிறது

ரோஜாவின் கனவில் கூந்தலும்
கூந்தலின் கனவில் ரோஜாவும்
அடிக்கடித் தோன்றி மறைகிறது

கூந்தலை எண்ணி எண்ணி
ரோஜா கறுத்து வருகிறது
கூந்தல் சிவந்து வருகிறது
ரோஜா நடந்து செல்லவோ
கூந்தல் வளர்ந்து நீளவோ
இயலாது

வளர்ந்தாலும் நடந்தாலும்
சென்று சேர இயலாது

தற்கொலைக்கு தயாராகுபவன்

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்துநிலையில்
என்னென்னவோ செய்கிறான்

அவன் கையில்
குடும்பப் படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து தனியே தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேனென்கிறது

தோழமை

எல்லா வெள்ளியின் மாலைகளிலும்
தான் விளையாடிக் கொண்டிருந்த
மைதானத்தை அப்படியே விட்டுவிட்டு
புறப்பட்டு விடுகின்றனர்
பள்ளிக்குழந்தைகள்
ஒரு நாள்
இல்லை
ஒரு நாள்
பிரிவின் வெம்மை பொறுக்காது
பேருந்தேறும் அப்பெரு மைதானமும்

சகலமும்

சகலமும் கலைந்து சரிய
அழுதழுதடங்கியவன்
தன்னருகே வந்து
குழைந்த நாய்க்குட்டியை
மெல்லமெல்ல தடவிக் கொடுத்தான்
அது அவன்
உடலாகவும் இருந்தது

பூனை

பூனை ஒரு விலங்கு
அதற்கு தெரிந்திருக்கிறது
பிரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக் கொள்வதென
ஸ்பர்சிக்கும போது
நகங்களை எவ்வாறு மழுங்கிக்கொள்வதென

சௌமி குட்டி சௌமியா ஆனது எப்போது

ஒருமுறை சௌமி குட்டிக்கு
வேடிக்கை காண்பிப்பதற்காக
அய்.. பூ! என்றேன்
அன்றிலிருந்து அய்.. பூ! அய்.. பூ!
என்றே அவள் விளிக்க
மலர்ந்ததிலிருந்து மேலும் மலர்ந்தன...

பூ என்பதற்கு முகம் திருப்பாத அவைகள்
அய்.. பூ! என்பதில் இறும்பூதெய்தின

அல்லி வட்டம் புல்லி வட்டம்
இதழ்கள் காம்பென படம் வரைந்து
பாகம் குறிக்கும்
தாவரவியல் மாணவியான
சௌமியாவுக்கு
இன்று பூக்களைப் பற்றி சகலமும் தெரியும்
அய்.. பூ! பூவான போது தான்
சௌமி குட்டி சௌமியா ஆனாள்
அல்லது
சௌமி குட்டி சௌமியா ஆனபோது
அய்.. பூ! பூவாகிப் போனது

( கவிஞர் இசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு, உறுமீன்களற்ற நதி, காலச்சுவடு பதிப்பக வெளியீடு. வாசிக்க தந்துதவிய நண்பர் முத்துவேலுக்கு நன்றிகள். )

புதன், 1 ஜூலை, 2009

எறும்பின் பயணம்


சமவெளியிலிருந்து இச்சுவரின்
காரை பெயர்ந்த பள்ளத்தாக்குகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் எறும்பாகி

நடையில் சிறு வேகம்
சிறு நிதானிப்பு
சிறு வளைவு

சக எறும்புகளோடு
விதானத்தையொட்டிய
செங்குத்துச் சுவரில் ஊர்ந்தபடி
முன் பின்னாய் திரும்பிப்பார்க்க
புலம்பெயர் அகதியாய் உணர்ந்தேன்
போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி
கவலையேதுமற்று ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
எப்படி இச்சுவரைப் பற்றி
நடந்து கொண்டிருக்கிறேனென்பது
எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது
யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்
பார்ப்போம்

ஒரேயொரு ஆசை மட்டும்
பருகுவதற்கு யாருமற்று
யுகயுகமாய் தனித்திருக்கும்
மது நிரம்பிய குவளையின்
விளிம்பில் சுற்றியபடியிருக்க வேண்டும்
ஆயுள் முழுக்க

ஊழிக் காலத்தில்
அப்படியே அதிலிறங்கி
ஜலசமாதியடைந்து விட வேண்டும்

ஜன்னல் வரை சென்று
கதவு மூடப்பட்டிருக்க
வட்டமடித்து திரும்பிக்கொண்டிருந்தனர் முன்னோர்

என்ன நினைத்தேனோ
கதவைத் திறந்து விட்டு
நானும் என் சக எறும்புகளும
ஜன்னல் விளிம்பு வழி
வெளியேறிக் கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்

பிறகு எவ்வளவு காத்திருந்தும்
என்னை வந்தடையவேயில்லை
எறும்பாகிப் போன நான்

ஒருவேளை அதற்கு
அந்த மதுக்குவளை
கிடைத்திருக்கலாம்

செவ்வாய், 23 ஜூன், 2009

எங்களின் ஒரு மாலைப்பொழுது


காற்று அளைந்து விட்டுக்
கொண்டிருந்ததவள் குழலை
மடியில் கிடந்து
மார்பில் புரளும் கற்றைகளை
விரல்நுனியில் சுருட்டி விட்டுக் கொண்டிருக்க
ஓயாத அலைகளை இமைக்காது
வெறித்துக் கொண்டிருந்தாள்
அவள் விரல் நக
விளிம்புகளையும் ரேகைகளையுமென்
நகத்தால் வரைந்தும்
புறங்கை ரோமக்கால்களை
லேசாய் ப்ற்றியிழுத்தும்
கைக்கடிகாரத்தையும் வளையல்களையும்
முன் பின்னாயிழுத்து விட்டும்
தாவணி நுனியில் முடிச்சிட்டும் அவிழ்த்தும்
நீள கழுத்துச்செயின் டாலரை
லேசாய் ஊஞ்சலாட்டிக் கொண்டும்
நகக்கணு சேகரங்களையகற்றியபடியும்
விரல்களுக்கு சொடுக்கெடுத்தும்
நெயில் பாலிஷை சுரண்டி விட்டுக் கொண்டுமிருந்தேன்
எதற்கும் எச்சலனமுமில்லை
சற்றே மறந்திருந்த காரணம் நினைவு வர
மெல்ல எழுந்து இடைவெளி விட்டமர்ந்தேன்
மௌனத்திற்கு
இசையமைத்துக் கொண்டிருந்தன அலைகள்
மணலில் அழித்தழித்து எழுதிக் கொண்டிருக்க
இமையோரத்திலிருந்து ஒற்று முற்றுப்புள்ளிகள்
விழுந்து கொண்டிருந்தன
இறுக்கமான மௌனம் வதைத்துக் கொண்டிருக்க
வழக்கமான விடைபெறுதலின்றி
புதைகுழியாய் கால்களிழுக்க
திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தேன்
இன்னும் கடலையே வெறித்துக் கொண்டிருக்கிறாள்

திங்கள், 22 ஜூன், 2009

தரை


கழுவி விடப்பட்டிருக்கும்
இந்தச் சிமெண்டுத் தரையின் ஈரம்
கொஞ்சம் கொஞ்சமாக
உலர்ந்து கொண்டேயிருக்கிறது காற்றில்
உலர உலர
நீர்ச்சித்திரங்கள்
மாறியபடியிருக்கின்றன
ஈரம் முழுதும் உலர்ந்த இப்பொழுது
காட்சிகள் முடிந்த திரையானது
மனதும் தரையும்
மீண்டும் ஈர
ஸ்பரிசத்திற்க்காய் காத்திருக்கிறோம்
இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்.

வியாழன், 18 ஜூன், 2009

இன்றைய நாட்குறிப்பு


நேற்று கண்ட காட்சியும்
கொண்ட கோலமும்
பரிமாறல்களும்
பொய்யெனவும் மாயையெனவும்
தோற்றப்பிழையெனவுமானது இன்று

இக்கரைக்கு
அக்கரை பச்சை
அக்கரைக்கு
இக்கரை பச்சை
எக்கரைக்கு
எக்கரை பச்சை
பச்சை நிறம் எப்படியிருக்கும்
நிறம் நிஜமா
கற்பனையா
ஒட்டகத்திற்கு
பச்சை பிடிக்குமா
இவைகளெல்லாம்
கானலின் நீரோ காட்சிப்பிழை தானோ
அற்ப மாயைகளோ இவற்றுள்
ஆழ்ந்த பொருளில்லையோ
பார தீ,,,,,,,,,,,,,,,,,

புதன், 17 ஜூன், 2009

ஒரு சந்திப்பு


சமீப காலமாய் அடிக்கடி
அரூப ரூபமாய் தோன்றிக்கொண்டு
எவளென்றறியாத எவளோவாக
இருந்த அவள்
இன்று பிரசன்னமாகிவிட்டாள்
எத்தனை யுகங்களாக
இந்தச் சந்திப்பிற்க்காய்
காத்திருந்தோமென
இருவர் கண்களும்
பேசிக்கொண்டன

ஞாயிறு, 14 ஜூன், 2009

என் அறை


வெறுமையானதொரு பின்மதியப்பொழுதில்
ஜெமினி ஒயின்ஸில்
தனியாவர்த்தனம் முடித்து
என்னோடு உரையாடிக்கொண்டே
தனிமை வசிக்குமென்
அறையடைந்து பூட்டைத் திறந்து
உள்ளே நுழைய
யன்னல் விளிம்பிலிருந்து
வாசலுக்கு ஓடிவரும் அணில்
குளியலறையிலிருந்து தேரை
குழல்விளக்கு சட்டகத்திலிருந்து பல்லி
வந்தவை அதது அதனதன் இடத்தில்
சில கணங்கள் ஸ்தம்பித்து
என்னையே உற்று நோக்க
வாசல்வரை வந்து வரவேற்கும்
எவளென்றறியாத எவளோ
அரூப ரூபமாய் தோன்ற
வெயிலும் தூறலுமானதாயிருந்தது
பருவநிலை
பாப்கேசம் கழுத்துரச
நெற்றி வரவேற்புத் தோரணமாயசைய
குட்டைப்பாவாடையில் கொலுசொலிக்க
ஓட்டைப்பல்வரிசை தெரியச் சிரித்து
ஓடிவந்து வாசலிலேயே
சட்டையையும் கைகளையும்
மழலையன்பொழுகப் பற்றிக்கொள்ளும்
என் இந்திரியத்தில் ஒளிந்திருக்கும் பிஞ்சுகள்
தோன்றி மறைந்தார்கள் இமைப்பதற்குள்
கானல் தோற்றப்பிழைகளிலிருந்து தெளிவுற்று
உடை களைந்து கைலிக்கு மாறி
சாம்பல் கிண்ணம் சிகரெட் சகிதம்
யன்னலோர மேசையருகான நாற்காலி மீதமர
அணிலும் தேரையும் பல்லியும்
ஏதோ சொல்ல விழைவதாய்
ஓடியும் தாவியுமருகே வர
அவைகளுக்குப் புரிகிற மொழியில்
பகிர்ந்து கொண்டவை
உங்களுக்கு நான்
எனக்கு நீங்கள்
வேறு யார் இருக்கிறார்கள்
நம்மை விட்டால்
இந்த அறைக்கும்.................

வியாழன், 11 ஜூன், 2009

தவிப்பு


யாருமற்ற வெளியில் சுவர்களமைத்து
மின்வேலியிட்டு சிறைப்படுத்தியிருக்கிறேன்
சுவர்களெங்கும் கிறுக்கல்கள்
பிரக்ஞையின்றி என்னாலேயே எழுதப்பட்டு
அழிக்க அழிக்க நீண்டபடியிருக்கும் சொல்வெளி
பட்சி பூச்சி தாவரங்களிடம்
சொற்குப்பையோடு உரையாடியதில் என்
உறவை முறித்துக்கொண்டன அவை
மொழியை மழுங்கச் சவரம் செய்யினும்
நரையுடன் பல்லிளிக்கிறது
வெளிப்படும் குரல்களை
பரிகசிக்கிறது இவ்வெளி
கேவலம் மொழியன்றி வேறில்லையோ நான்
புலன்களைக் கொல்ல திட்டமிடுகிறேன்
அகத்தின் அப்புறப்படுத்தவியலாத
சேகரங்கள் அழுகி நாறுகிறது
உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதில்
தொடர்ந்த தோல்வி இயலாமை கழிவிரக்கம்
புறப்பிணைப்பறுக்க அகவிழுது
பிடித்தாடுகிறது குரங்கு
என்னை என்ன
செய்வதென்றறியாது தத்தளிக்கிறேன்


ஞாயிறு, 7 ஜூன், 2009

கவிஞர் திறனாய்வாளர் ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு அஞ்சலி


திரு ஹரன் பிரசன்னா அவர்கள், தன் வலைப்பதிவில் ( தமிழ் இந்து.காம் ) கவிஞர் ராஜமார்த்தாண்டன் குறித்தும், அவர் கவிதைகள் சிலவற்றைத் தொகுத்தும் பதிவிட்டிருக்கிறார். நண்பர்கள் வாசிக்க

http://nizhalkal.blogspot.com/

http://www.tamilhindu.com/2009/06/kavi-rajamarthandan-anjali/

கவிஞர் ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு நம் அஞ்சலிகள்.

செவ்வாய், 2 ஜூன், 2009

தவம்


தவத்திலிருக்குமென்
விழிகளுக்கு பாலூட்டும்
கனத்து பருத்து மதர்த்து
திமிர்ந்த முலைகள்
தவப் பயண
இளைப்பாறலாய் மடிகிடத்தி
அனல் பறக்க
ஆவி பிடிப்பதாய்
கூந்தலைப் படர்த்தி போர்த்தும்
ஒளி புக முடியாமல் முழுதுமாய்
அடர் கானக இருள் வெளியில்
நாவின் கால்தடம் சரசரக்க
இலக்கற்று கிடந்தலைகிறேன்
யாத்ரீகனாய் வன மேனியெங்கும்
காற்றாய் விரல்களூர மெய் சிலிர்க்க
நரம்புகள் புடைத்து
கூடும் உதிர வேகம்
கரங்களில் இருமலை பிசைந்து
கசிந்து பாயும்
பால்நதியிடை கவிழ்ந்து
மூச்சடைகிறேன் மூழ்கி
மயிர்க்கால்களின் வேர்களை
மென்மையாய் வருடும்
நகத்துணுக்குகள்
திடீர்க் காற்றில் சட்டெனப்
புரளும் சருகுகளானோம்
எழுதியெழுதி தீராத
பிரபஞ்ச காவியத்தை
உழுதுழுது எழுதி
சற்றே ஓய்வெடுக்கையில்
ஓயாது படபடக்கும் தாள்
எழுதுகோலை மறுபடியும் ஊர்தலுக்கழைத்து
சற்றே பொறு
எழுதுகோல் விறைக்கட்டும்
உயிர்மை திரளட்டும்
அவிழ்த்தவிழ்த்து வாசித்து
ரசிக்கும் மற்றுமொரு
கவிதையை எழுதுகிறேன்.

வியாழன், 28 மே, 2009

நினைக்கையில்...........................


பணி நிமித்தமான
இந்த நெடுந்தூர
இரவு இரயில் பயணத்தில்
கட்டிடங்கள்
மரங்கள்
குகைகள் மலைகளென
மாறி மாறி
பார்வை தடைபட
மறைத்துக் கொண்டிருக்க
திரைகளணைத்தும் நீங்கிய தருணம்
பெருமேகப் பொதியொன்று
கடக்கிறது கிரகணமாய்
ஊரும் மேகம் விலகக் காத்திருக்கையில்
பூத்த விழிகளைப்
போர்த்தியது இமைகள்
இரவெலாம் இந்த
யன்னல் கம்பி பிடித்து
மூச்சிறைக்க
ஓடி வந்திருக்கும்
ஊமை நிலவு
என்பதை
இந்த அதிகாலையில்
நினைக்கையில்...................

ஞாயிறு, 24 மே, 2009

திருவினை


திருவினையாகாத முயற்சிகளை நொந்து
கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன்
கடைசியாக
அதற்கு முன்பாக
மலங்கழித்து விடலாமென
கழிவறை போக
பீங்கானில் தேரைகளிருக்க
கழிக்காது திரும்பி
வரும் வழியில்
எறும்புகளின் ஊர்வலத்திற்கு
இடையூறின்றி கவனமாக
கடந்து வந்தேன் அறைக்குள்
கரிசனங்கள் பிறந்து விடுகிற
கடைசி தருணங்களின்
வினோதத்தில் புன்சிரித்தேன்
என்றுமில்லாமல் அதிகமாய் வியர்க்க
பொத்தானையழுத்தப் போகையில்
சிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை
பார்வையில் இடறியது
40000 உயிர்கள் மாண்டுபோன
செய்தி தாங்கிய
தினசரி அருகிருந்தது
விசிறயேதேனும் அகப்படுமாவெனத் தேடுகையில்
சாம்பல் கிண்ணத்தில்
பிணங்களென்றிருக்கும்
துண்டுக் குவியல்களைக் கண்டு
கடைசி சிகரெட் பிடிக்கும்
ஆசையையும் கைவிட வேண்டியதாயிற்று
சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு
காத்திருக்கும் கயிற்றிற்க்கிரையாக
கதவைச் சாற்ற
கதவிடுக்கில் நசுங்கியிரண்டான
பல்லியின் வாயிலிருந்து
தப்பிப் பறந்ததொரு பூச்சி

புதன், 20 மே, 2009

பிரசன்னம்



நாலுகால் பாய்ச்சலில் வந்தது
அருகருகில் ஆசுவாசமாய்
வெளிச்சமற்ற வேலிச்சுவர் ஓரத்தில்
முகர்தலுக்குப்பின் கடித்து
முத்த வேகம் மும்முரமாகி
வெறியோடு பாய்ந்து
யுத்தத்தையொத்திருந்த
முன்விளையாட்டுகள்
இடையில் இன்னொன்று வர
அதை விரட்டியது இவ்விரண்டில் ஒன்று
ஒன்று கிடந்தவாக்கிலிருக்க மற்றொன்று
நாவால் நக்கியபடி
பிணைந்த உருளுதலுக்குப் பின்
நின்றவாக்கில ஒன்று மற்றொன்றின் மேல்
அந்த கணத்தில் பிரசன்னமானார் கடவுள்
உச்சத் தருணத்தில் விசையுடன்
கல் பாய்ந்து விழ
தவம் கலைந்த அழுகுரலுடன் ஒன்றும்
உருவிய விறைப்படங்காத குறியுடன் மற்றொன்றும்
திசைக்கொன்றாய் சிதறியோட
கல்லெறியப்பட்ட திக்கில்
அனுமனவதாரமாய்
ஒரேயொரு குரங்கு மட்டுமிருந்தது.

சனி, 16 மே, 2009

நேசம்



ஜன்னலில் நீளும் பசுவின் வாயில்
இட்லி ஊட்டுவாள் அம்மா
பாலுண்ண மறுக்கும் கன்றிற்கு
புட்டிப்பாலூட்டுவார் அப்பா
அம்மு படித்துறை மீன்களுக்கு
பொரி போடுவாள்
பொட்டிப்பாம்பிற்கு பாலூற்றுவார்கள் தெருவில்
மதியம் காகத்திற்கு சோறு
தினம் வரும் குரங்கு
கடைக்காரரிடம் பழம் வாங்கிச்செல்லும்
பக்கத்து வீட்டு அக்கா
பூனையை மடியிலேயே வைத்திருப்பாள்
இணையமையத்தில் அவர் தோளைவிட்டு
இறங்கவேயிறங்காது கிளி
பிஸ்கட்டின் ஒரு முனையை வாயில் வைத்து
மறுமுனையை நாயுடன் பகிர்ந்துகொள்வாள்
எதிர்வீட்டு யுவதி
இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன்
அந்த நாயை

வெள்ளி, 15 மே, 2009

பரவசம்



மெதுவாய் ஊர்ந்து செல்ல
பிடியிலிருந்து நழுவி
அகப்பட்டும் படாமலும்
போக்குக்காட்டி
தவணையில் ஆடைவிலக்கி
மெல்ல மர்மங்கள் அவிழ்த்து
திரைவிலக்கி
தழுவி
ஒன்றாய் கலந்து
மல்லுக்கட்டி
உணர்வெழுச்சியில்
கணமொரு அனுபவமாய்
மின்னற்கீற்றுப் பொழுதில்
தாவும் நிச்சயமற்ற அர்த்தங்களில்
தரிசனமாகும் கவிதை தருணம்
புணர்ச்சியின் உச்சம்.

செவ்வாய், 12 மே, 2009

மோனவெளி



நின்ற மழை நினைவுகளாய்
திட்டுத் திட்டு தேக்கங்கள்
அலையுமென்னுருவம்
காத்திருந்தேன் அசைவடங்க
சலனம் மட்டுப்பட
கூடிவரும் பொழுதில்
கல்லெறிந்ததாய்
விழுந்ததொரு மழைத்துளி
தாரைகள் கூட
குட்டித்தேக்கத்திற்கு
குடை விரித்து
அமர்ந்திருக்கிறேன்
அசைவற்றயென் பிம்பம் தரிசிக்க

ஞாயிறு, 10 மே, 2009

நண்பர்களே தோழிகளே



அப்படியென்ன குற்றமிழைத்துவிட்டேன்
பழைய நேசமில்லை விழிகளில்
நண்பா நீ முகம் பார்த்துப் பேசி
எவ்வளவு நாளாயிற்று
தோழி மதிய உணவைப் பகிர
ஏன் அழைப்பதில்லை இப்பொழுதெல்லாம்
தோழி பார்வையிலேயே என்னை
பொறுக்கியென உணரச்செய்கிறாய்
மதுவருந்தவும் அழைப்பதில்லை
நண்பா நீ இப்பொழுதெல்லாம்
அரட்டைப்பெட்டியில் என்
நூறு offline செய்திகளுக்கும்
ஒரு மறுமொழியுமில்லை தோழிகளே
ஒரு குறுஞ்செய்தியில்லை
எப்போதும் நிராகரிக்கப்படுகிறது
என் அலைபேசி அழைப்புகள்
மின்மடல்களுக்கு பதிலுமில்லை
சந்திக்க வருவதாய் சொன்னபோது
வீட்டிலிருந்தே இல்லையென்றீர்
நரகலைக் கண்டதாய்
முகம் திருப்பிக் கடந்துவிடுகிறீர்
ஒரு கோப்பைத் தேனீரோடு
தனியாய் பேசி புகைத்து
சில நேரங்களில் இப்படியெழுதிக்கொண்டு
கைவிடுதலுக்கும் விலகலுக்கும்
குறைந்தபட்சம் காரணங்கள்
தெரிந்தாலாவது,,,,,,,,,,,,,,,,,
தொந்தரவு செய்யவில்லை இனி
மனத்தாங்கல்களுமில்லை
என்றேனும் என் மீதான
வெறுப்பும் கோபமும் விலகுமாயின்
குற்றவுணர்வின்றி தயங்காமல்
ஒரேயொரு குறுஞ்செய்தியனுப்புங்கள்
அடுத்த கணம் உங்கள்
அலைபேசியொலிக்கும்

புதன், 6 மே, 2009

எழுத்தாளர், மணல் வீடு சிற்றிதழ் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை



குண்டாம்புலக்காயனின் இங்கிலீஷ் பைட்
மு.ஹரிகிருஷ்ணன்


நானு, குண்டாம்புலக்காயன், ராக்கியூட்டு தம்பிராசு மூணுபேருந்தான் கூட்டாளிங்க. மாரியாநோம்பிக்கி பஞ்சாயத்துப்போர்டு ரேடியோச்செட்ல அம்மணப்படமோட்டி ஊருக்கவுண்டங்கிட்ட மாட்னதுக்கப்புறம் பெருஞ்செட்லயிருந்து நாங்க பிரிஞ்சிகிட்டம். எங்களுது சிறுஞ்செட்டு. தங்கறது,உங்கறது,படுக்கறது ஏம் பேழ்றதுக்கூட ஒரெ எடம். மூணுப்பேரும் ஒருத்தரவுட்டு ஒருத்தருப் பிரிஞ்சி இருக்கமாண்டம். எனக்கு கம்பிக்கட்ற சென்ரிங் வேல,தம்பிராசு போலிசிக்கு செலக்சனு ஆவியிருந்தான். குண்டாம்புலக்காயங்
கட்டட மேஸ்திரி. ஆளுதாங் கட்டையே ஒழிய மன்னந் தடிதாண்டவராயன். ஆளயே உருக்கி அவனோட ஆயுதத்துல கொண்டி வெச்சிருந்தான் ஆண்டவன்.
ஒரேவொரு சித்தாள வுடமாட்டான். அவனுக்கு வயசு-கியசு வித்தியாசங்கெடயாது. வத்தலு
தொத்தலுன்னுகூட பாக்கமாட்டான். ஆராயிருந்தாயென்ன? எவராயிருந்தாயென்ன? அவ பச்ச வாழமட்டையில அடுப்புப் பத்தவைக்கிற பத்தினித் தங்கமாயிருந்தாலுஞ்சேரிச் சிரிச்சிச் சிரிச்சிப் பேசியே சீலய அவுத்துப்புடுவான்.
சிறுவயசிலிருந்தே பையஞ் செரியான துண்ட்ரிகம். எங்கூர்ல அன்னிக்கியிருந்தது ஒரேவொரு பஞ்சாயத்து பள்ளியோடம். ஒண்ணாவதுக்கு பாவாய டீசரு. ரெண்டாவதுக்கும், நாலாவதுக்கும் நாமசாமி வாத்தியாரு. மூணுக்கும் அஞ்சிக்கும் பெரிய வாத்தியாரு. நாமசாமிக்கி ஆரியங், கம்புச், சோளம்னு பலப்பட்ற வேவாரம். ஏழுச்சாமத்துல எந்திரிச்சிப் போனாருன்னா மனுசன், எல்லகுட்டையூரு, கணக்குப்பட்டி, ஒருக்கோடியா வனவாசி முட்டும் சீமயச் சுத்தி தவிசி அளந்துவுட்டுட்டு அப்பிடியே கந்து வசூலும் பாத்துக்கிட்டு புதூரு நாலுரோட்டுக்கு வாரத்துக்குள்ள ஒம்போது மணி பெல்லு அடிச்சிப்புடும்.
ஓட்டமா, ஒடியாந்த வெசயில வாயிலிருக்கற பல்லுக்குச்சிய எடுத்தெறிஙஞ்சிப்புட்டு நேராப்போயி சேருமேல குக்க வெச்சிக் குந்திக்கிவான். வாயுங் கழுவமாண்டான், பொச்ச்ங் கழுவமாண்டான் சூர. அழிஞ்சிக்கண்ணன் ஆலிவாயன், மூணுத்தலயன், குண்டாம்புலக்காயங், கூலுச்சட்டி, பீச்சுத்தி, மொட்டப்பெருக்கான், கீரிப்பிள்ள, கிழிஞ்சஒதடி, வவுறின்னு புள்ளைங்க பேரக்கூப்புட்டானோ இல்லியோ பொய்தவம் தன்னப்பாலபோயி ஒருக்கடயில கெடப்புல வுழுந்துரும். அப்புறம் பாத்துக்க சண்டாளன் வுடுற கொறட்ட மொகுட்டோட பிரிச்சிக்கிட்டு மானத்துல காத்தா பறக்கும்.
பெரிய்ய வாத்தியா எட்டிப்பார்த்துட்டு கண்றோவி, கண்றோவி ன்னு தலத்தலயா அடிச்சிக்குவாரு. பாக்கற வரைக்கும் பார்த்துட்டு பசங்க அதுங்க பாட்டுக்கு,
“எம்பேத்தி ஒண்ண, எம்பேத்தி ரெண்டே’’ன்னு ஒண்ணு ரெண்டு எழுதிக்கிட்டு குந்தியிருக்கணும். ஏதாவொரு நாளைக்கி தப்படியா முழிச்சிருந்தா புள்ளைங்களுக்கு ஒரெழுத்து, ரெண்டெழுத்து படுப்புச்சொல்லிக்குடுப்பானா மவராசன் ஊ-கூம்.. பனங்காட்டு காமாண்டாருக்கு கும்மியடிக்கிறாப்ல பசங்கள கூப்ட்டு சுத்தியும் நிக்கவெச்சுருவான். சோத்தாங்கைவசம் ஆம்பள பசங்க, ஒரட்டாங் கைவசம் பொட்டப்புள்ளைங்க. மொள்ள ஒவ்வொருப்புள்ளயா கிட்டக்க கூப்புட்டு நிறுத்தி பாவாட நாடாவ அவுத்து கைப்பிடிச்சட்டத்துல அந்தண்ட இந்தண்ட நவரவொட்டாம வரிஞ்சிக்கட்டி மூங்கப்பெரம்ப தலவமாத்தி முத்துன அடிய புள்ளைங்க தொப்புள்ளுக்குள்ள வுட்டு ‘தொளுக்கு, தொளுக்கு’ன்னு இடிக்கிறது.
ங்சேரி அந்த வெளயாட்டு சலிச்சிப்போச்சா பசங்க டவுசருப்பொத்தான அவுத்துவுட்டுட்டு தலவுச்சுன்னியப் புடிச்சி பால் பீச்சறாப்ல இழுத்து இழுத்து நிமுட்டறது. வலசுப்பசங்களாயிந்தாலுந் தேவல வாட்டமாயிருக்கும். ஊமக்கருக்குஞ்சப்பிடிச்சி நசுக்கறதுல அந்தாளுக்கென்ன ருசனயோ! நொட்டுக்கைய வெச்சிருக்கமாண்டாம ஒருநாளு குண்டாம்புலக்காயங்குஞ்சயும் புடிச்சி கசக்க, பொறுக்கறமுட்டும் பொறுத்திருந்துட்டு வாத்தியாரு கையோட பையஞ் சிர்ர்ருனு ஒருப்பிடி முத்ரத்த வுட்டாட்டிப்புட்டான். இந்தாளு கோவந் தாங்காம அவன ரெண்டு குப்பாலு வெக்க அவம்போயி அவிங்க அப்பாயிக்கிட்ட நாயஞ்சொல்ல கெழவி பள்ளியோடத்து வாசல்ல வந்து நின்னுக்கிட்டு பேசுன பேச்சு காது குடுத்துக் கேட்க முடியல, ஒரே அமர்க்களம்.
இந்த வெவகாரம் நடந்தப்பொறவு வாத்தியாரு ஒரு கொஞ்ச நாளு கொலாய மூடிக்கிட்டிருந்தாங் கப்புனு. அதும்பொறவு மூணு நாலு மாசத்துக்கெல்லாம் மறுக்க பழய குருடி கதவ தொறடின்னு இன்னொரு புதுநாயம் போட ஆரம்பிச்சுட்டான். ஒவ்வொருத்தனயா பக்கம் கூப்புட்டு நிறுத்தி வெச்சுக்கிட்டு “ டேய் டேய் பையா பையா நேத்து நாத்திரி ங்கொப்பனும் ங்கோயாளும் எவுத்திக்காலிடா படுத்திருந்தங்க? என்னென்றா பண்டிக்கிட்டிருந்தாங்க’ன்னு கேட்கறது. இந்த அலப்பநாயி பொந்தியில கவடு வெச்சிருக்கிறத அதுங்க பாவம் என்னத்த கண்டுச்சிங்க சூது தெரியாயதுதுங்க. நோனி வாய கம்முனு வெச்சிருக்க மாண்டாம இந்த நாயத்த நாமசாமி குண்டாம்புலக்காயங்கிட்டயுங் கேட்க, அந்தக் கொலவாரி ஓடி அவங்காயாக்காரிக்கிட்ட கேட்க அவ, “கண்ணு கண்ணு நாளைக்கி மறுக்க உங்க வாத்தியாரு அந்த மாதர கேட்டா , நீ சாரு, சாரு உங்க மவளும், நொனயமூட்டு போடுவாசியும் எங்க படுத்திருந்தாங்களோ அங்க படுத்திருந்தாங்க, அவிங்க என்ன பண்டுனாங்களோ அதத்தாம் பண்டுனாங்கன்னு சொல்றா கண்ணு"ன்னு மவங்காரனுக்குச் சொல்லிக்குடுத்திட்டா.
சொன்னதத்தானச் சொல்லும் கிளிப்புள்ள. மக்யாநாளு நாமசாமி மானங் கப்பலேறிப்போச்சி.
அதுப்பொறவு குண்டாம்புலக்காயன் பெரிய்ய வாத்தியாரிண்ட படிக்ககுள்ள ஒருத்தக்கம், மேலுத்தெரு இச்சி மரத்தடிய ரட்சிமியூட்டு வேணம்பையன், கமலாயாவூட்டு சீனிப்பையன், பாக்கியமூட்டு சுந்தரம்பையன், பஞ்சவருணத்தூட்டு சூராம்பையன் இன்னும் ரெண்டு பசங்களோட ‘தண்ணிப்பட்ட’ வெளயாடிக்கிட்டிருந்தாம்பா.
அந்நேரம் அவுத்த இவங்கூட படிக்கிற கலாப்பிள்ளயும் அவிங்கச் சொந்தமோ, எரவலோ தெரியல ரெண்டு பொம்பளைங்க அண்டாவ எடுத்துக்கிட்டு தண்ணி மோக்க நல்லதண்னி கெணத்துக்கு போயிக்கிட்டிருந்தாங்க. அன்னிக்கிங்கிறப்பெட்டுக்கு இந்த கலாப்பிள்ள பள்ளியோடத்துக்கு வரல. குண்டாம்புலக்காயனிருந்துக்கிட்டு “ஏப்பிள்ள கலா! ஏப்பிள்ள இன்னிக்கி பள்ளியோடம் வரலைன்னு கேட்க அவளதுக்கு, “பையா, பையா, ஊருலந்து எங்க அப்பிச்சியும் அம்மாயியும் வந்திருக்காங்கடா, எங்கூட்ல உளுந்தவடச் சுட்டம். நானு வாழப்பழத்தையும் வடயயும் போட்டு நெய்யூத்தி பெசஞ்சி திண்னண்டாப்பையா’ன்னு அவப்பாவம் என்னம்மோ வூட்டுக்கு ஒரம்பற வந்த பெருமய பீத்திக்க இந்த திருட்டுக்கொறவமூட்டுது “ஓகோ வாழப்பழமும், உளுந்த வடயும் வேலப்பண்டிதான் உன்னப் பள்ளியோடத்துக்கு வர்ரத்துக்கில்லாமச் செஞ்சிப்புடுச்சா”ங்க, அவச்சொன்னாளோ, அதாருஞ்சொன்னாங்களோ தெரியல அந்த ஈனப்பானங்கெட்டதுங்க போயி அவிங்க அம்மாயிக்காரியிண்ட குசலஞ்சொல்ல, வெளயாடறமுட்டும் வெளயாண்டுப்புட்டு ஓடி வூட்டுக்கு அந்திப்பாலு வாங்க செம்மலையூட்டுக்கு போனவன வளைச்சிப்புடிச்சிக்கிட்டு அந்த வம்பேறிமுண்ட கள்ளுப்போதயில,
“ டேய் எவண்டா எம்பேத்தி வடயில வேல‌வுடுறனின்னது – அது சித்துவடடா, என்னுது இருக்கு வாடா எருமாமுட்டையாட்டமின்னு, சீலைக்குள்ள பையன வுட்டு அமுக்குறாளே சண்டாளி! பிதுமாருங்கெட்டு பையன் வர்ருவர்ருனு கத்த செம்மலப்பொண்டாட்டி பாக்கியந்தான் குறுக்கப்பூந்து
“அறியாப்பையன போட்டு இப்டி வாதிக்கிறியே ,ஏண்டி கெழுடி நீயி பொம்பளயா பேயாடி”ன்னு ரெண்டுப்பேசி விங்கிணிச்சியுட்டா பாவம்.
அதும்பொறவு ஒரு ஏழெட்டு வருசங்கழிச்சி பூமாத்தா கோயிலுக்கு பொங்க கொண்டுகிட்டு போன கலாப்பிள்ளய சாத்ரீகத்துல திருத்தாட்டமா தூக்கிக்கிட்டு போயி அழிங்சிப்பொதையில வுட்டு ரெண்டு ஈடு போட்டெறிங்சி ஹூக்குமின்னு முக்கனவக்கிட்ட பொறவுச் சொன்னானங் குண்டாம்புலக்காயன் “போடி ங்கோயா, ஒங்க பாட்டி கோயிலுட்டையேப் பாத்தவண்டி நானு”ன்னு. இப்பிடித்தான் சித்துராசு மவ ரட்சிமி, அவப்பொறந்தவ சரோசா ரெண்டுப்பேத்தயும் ஒருத்திக்கி தெரியாம இன்னோருத்திய வூடு பூந்து போனவாரந்தான் போட்டுத்தாட்டிப் பூசப்பண்டிப்புட்டு வந்தான்.
முந்தாநேத்தோ என்னமோ குட்டப்பட்டி அலமேல கூட்டிக்கிட்டுப்போயி, மலையாமூட்டுக் காட்டுல கம்பரசருக்கு பெட்டு கொட்டாயிக் கட்டிக்கிட்டிருந்திருகிறான். இந்த ரத்தனம் பிருசன் ஐயண்ணன் மாட்டுத்தாழிக்கி தண்ணி ஊத்த கெடாரத்த எடுத்து தோளுமேல வெச்சிக்கிட்டு பொடு பொடு’ன்னு அந்த கெணத்தாண்ட போயி, வெசவெசயா தோண்டிக்கவுத்த தொலக்குழ மேல நின்னு வீசுனானாம்பா.அந்நேரம்பார்த்து இந்த ரெண்டு கொலவாரிங்களும் நெற அம்மணமா நின்ன வாக்குலச் செஞ்சிக்கிட்டிருந்தாங்களாம். பாம்பு பொணயலப் பாத்தவனாட்டம் ஐயண்ணனும் பயந்து நடுங்கி உள்ற போட்ட தோண்டிக்கவுத்த “என்னமோ பொன்னு காலங்கெட்டு கெடக்கு’ன்னு வெளிய இழுத்துப்போட்டுட்டு, ‘தலயெழுத்துடா ஆண்டவனேன்னு வெறுங்கெடாரத்த எடுத்துக்கிட்டு திலும்ப போயிட்டானாம்.
அவன் ராவடி தாங்க முடியாம மயிலியுங் குருசாமியும் இந்த பையன் எலவ எத்தன நாளைக்கி எடுக்கறது? இப்பிடி தோளுமேல புடுக்க போட்டுக்கிட்டு எந்நேரமுந் சென்யேற அலையிறானே இனிமேட்டுஞ் சும்மாயிருந்தா மானம் மருவாதிய தொச்சம்வுடாம தொலைச்சிப் புடுவான்னு ஊரு ஊராப் பொண்ணு தேடனாங்க. அவங்கோளாறக் கண்டுக்கிட்டு ஒருத்தரும் பொண்ணு குடுக்க மாட்டேன்னுப்புட்டாங்க. கடைசியில அவங்கத்தயொருத்தி ஆந்தராவுல இருந்தா. அவ மவ சங்குபதிய பாத்து பேசி முடிச்சாங்க. ஊருமேஞ்ச மாட்ட மூக்கணாங்கவுறுப் போட்டு மொளக்குச்சி அடிச்சி அவுத்தயிவத்த நவறதுக்கில்லாம ஒருத்தாவுலக் கட்டி வெச்சாச்சி.
கண்ணால வேலைக்கி அலைஞ்சி பையங்காஞ்சி கருவாடாப் போயிட்டான். அவனோட சேந்து எங்களுக்குத்தான் அலைச்சலு சாஸ்தி.பொதங்கெழம நாளு கண்ணாலம். எப்பவுமே முகூர்த்தத்து அன்னிக்கி ராத்திரியே பையனையும், பிள்ளயயும் ஒரூட்ல வுடறதுதான் வாமுலு. ஆனா அவனிக்கிருந்த ரொணம் நேரஞ்செரியில்லைன்னுப்புட்டு மக்யாநாளு வெசால கெழ்மயன்னிக்கி சமாச்சாரத்த தள்ளி வெச்சுட்டாங்க. குண்டாம்புலக்காயன் பொசுக்குனுப் போயிட்டான். போன நாயம் வந்த நாயம் பேசிக்கிட்டு அவங்கவூட்ல ஓட்டமூட்ல ஓநாயி பூந்தாப்பிடி பேசிக்கிட்டு ஒரே ரவுசு.
ச்சேரி கூட்டத்துல ஏண்டாத் தடுமாறிக்கிட்டுக் கெடக்கறன்னு நானும், தம்பிராசும் அவன எங்கெயடத்துக்கு கூட்டியாந்துட்டம். வந்தவஞ் சும்மாயிருக்கனுமா வேண்டாமா? “டேய், டேய், தம்பிராசு கண்ணாலத்துக்கு எடுத்துக்கிட்டு வந்த டெக்கும், டி.வியுஞ் சும்மாதாண்டாக் கெடக்குது! ரெண்டு கேசட்டு பலானப்படம் போட்டு பாக்கலாம்டா’ன்னு ஆட்ட்ங்கட்னான். ச்சேரி புதுமாப்ள ஆசப்படறானேன்னுப்புட்டு அந்தக் கண்றோவிய விடிய,விடிய ஒக்காந்து மூணுபேரும் பாத்தம். மாப்ளைக்கி அதப் பாக்க பாக்க ஒண்ணுந்தாக்குப் பிடிக்க முடியல. அப்பிடியேச் சும்மா நெண்டறான், நெளியறான். காலுமேலக் காலத் தூக்கிப் போடறான், கட்டிப்பிடிக்கிறான் அடேயெங்கப்பா அவஞ்செஞ்ச சேட்டைக்கி அளவேயில்ல‌....
ஓங்கி ஒரு அப்பட்டக் குடுத்து “ மூடிக்கிட்டுத் தூங்குடா”ன்னு தம்பிராசு மெரட்டன அப்புறந்தான் நிம்மதியா கண்ணசர முடிஞ்சிது. விடிஞ்சி எந்திரிச்சி மாப்ளச் சீரு வாங்க சேலம் போயி பீரோ கட்லுன்னு ராரியில அள்ளிப்போட்டாந்து, எறக்கி அதது எடஞ்சேத்தி பையனச் சிங்காரிச்சி ஊட்டுக்குள்ள தள்ளிவுட்டம் ராவு மணிப்பத்து. நானும் தம்பிராசும் மானத்த பாத்து மல்லாந்துப் படுத்துக்கிட்டு குண்டாம்புலக்காயன் இன்னேரம் அத அவுத்துருப்பான் இதப் பண்டியிருப்பான்னு வெக்கங்கெட்டு போயி கோழி கூப்டற வரைக்கும் பேசிக்கிட்டிருந்துப்புட்டு எப்பத் தூங்கினமோ பொச்சியில வெயிலடிச்சப்பறந்தான் முழிச்சம். எழுந்திரிச்சி பல்லுவெளக்கிக்கிட்டே ஆயிருக்க கூள முருகனையுங் கூட்டிக்கிட்டு போலாம்னு அவங்கூட்டுக்கு போனா...........கருமாந்தரம் புடிச்ச எலவு அது கண்ணால ஊடா எலவு ஊடான்னு சந்தேவம் வந்திரிச்சி. “எம்மவளக் கொன்னுப்புட்டானே சண்டாளப் பாவி”ன்னு பொண்ணப் பெத்த ஆத்தாக்காரி ஊளைக்கரிச்சிக்கிட்டிருந்தா.
‘மாப்ளயும் பொண்ணும் எங்க’ன்னு கேட்டதுக்கு கீழ்மேட்டூரு பூமா ஆசுபத்திரிக்கி கொண்டுகிட்டுப் போயிட்டாங்கன்னு சொல்லும்பிடி எங்களுக்கு பகீர்னு ஆயிப்போச்சி. அரக்கபரக்க ரெண்டு பேருங்கெளம்பி பூமா ஆசுபத்திரிக்கி போனா வாசக்கால்ல குண்டாம்புலக்காயன் குனிஞ்சி நின்னுக்கிட்டிருந்தான். அந்த டாக்டரம்மா “ஏய்யா நீ மனுசனா மிருகமான்னு” ஏசிக்கிட்டிருந்திச்சி. எங்களப் பாத்ததும் பல்ல இளிச்சிக்கிட்டு வந்தாம் பையன். “என்றா ஆச்சி முடிச்சவிக்கி”ன்னு கேட்டா “மச்சான் இங்கிலீஸ் பைட்டுப்போட்டு மொதலுக்கு மோசம் வந்துட்டுதுடா, இப்ப பதனஞ்சாயிரம் பணமும் மூணுப்பாட்லு ரத்தமுங் கேட்கறாங்கடா”ன்னான். நாங்க தொறந்த வாய் மூடல.

செவ்வாய், 5 மே, 2009

இதுவும் கடந்து போகும்



அணிந்திருந்த புதுச்சுரிதார்
புருவச் செதுக்கல்கள்
கத்தரித்த கன்டிஷனர் சிகையலங்காரம்
அழகு நிலையத்திற்குப் பின்னான முகப்பொலிவு
தழையத் தழையச் சூடிவரும் மல்லிகைச்சரம்
கொலுசொலியுடன் கூடிய புடவைச் சரசரப்பு
குதிகாலுயர்ந்த பாதுகை
அலைபேசி சினுங்கல்களின் அழகு
ஓவியக் கையெழுத்து
மின்மடலின் சொற்பிரயோகங்கள்
புன்னகைகளின் அர்த்த அகராதி
உடல்மொழி புரிதல்கள்
மூன்று நாள் காலங்கள்
காதல் நட்பு உறவுகள்
கவிதை ஓவியம் இலக்கியம் தத்துவம்
விருப்பப் பட்டியல்கள்
Intellectual hypocrite pervert isms
இன்னும் பிற எழவுகளைப் பற்றியெல்லாம்
உரையாடிய ஒரு தருணத்திலாவது
பாவனையாகவேணும் அசௌகர்யமாக
உணர்வதாக அபிநயித்திருக்கிலாம்
புன்னகை தவிர்த்து
குறைந்தபட்சம் என்
பிறந்த நாள் பரிசுகளையாவது
நிராகரித்திருக்கலாம்
வசதியாக குற்றங்களையெல்லாம்
உன்மீதே நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
வாங்கித்தரச் சொன்ன மாத்திரைகளுக்காக
மருந்தகத்தில் நின்றிருக்கையில்

திங்கள், 4 மே, 2009

அறியாமை



அறியாமல் எய்திவிடுகிறீர்கள்
அம்புகளை
காகிதக்கத்தியென
விளையாட்டாய் செருகிவிடுகிறீர்கள்
தாகத்திற்கு குளிர்பானமாய்
அமிலம் அருந்தக்கொடுக்கிறீர்கள்
பீங்கான் வட்டில் கழிவறை பீங்கானென
மலம் பறிமாறுகிறீர்கள்
அறிவேன் அனைத்தும்
அறியாமையில் செய்யப்பட்டவைகளே
என் அறியாமையை மட்டுமேன்
அறிய மறுக்கிறீர்கள்.

வியாழன், 30 ஏப்ரல், 2009

ஓட்டை



ஊற்றப்படுவது நின்றதும்
வடிந்து வெற்றிடமாகிறது
மிச்சமாய் ஈரம்
சில கணங்கள்
ஒப்புக்கொள்கிறேன் குறையை
ஓட்டையை அடைக்காது
புலம்புவதில் அர்த்தமில்லை
துளையெங்கேயெனத் தெரியவில்லை
அடைக்கவும் விருப்பில்லையோ
தேங்கியிருப்பதை விடவும்
வந்து கடந்து போகட்டுமே நீர்
என இருக்கிறேனோ
நீரின்றி போனாலும்
நிரப்புவதற்கு என்றென்றைக்குமாய்
வெறுமை இருக்கிறதென்கிற
திமிரோ.

புதன், 29 ஏப்ரல், 2009

வைதீஸ்வரன் கவிதைகள்



கண்ணாடியை துடைக்கத் துடைக்க
என் முகத்தின் அழுக்கு
மேலும் தெளிவாகத் தெரிகிறது

தன் கூட்டுக்கும்
வானுக்கும்
பாலம் தெரிகிறது
பறவைகளுக்கு மட்டும்

எழுத நினைக்காத தருணம்
எழுத நேருகிறது
மிகத்தெரிந்தது போல்
தெரியாததை எழுதிக்
கொண்டிருக்கிறேன்
எழுதி முடித்தவுடன் தான்
எனக்கு வெளிச்சமாகிறது
இதைத்தான் நான்
தெரிந்து கொள்ள வேண்டிக்
காத்திருந்தேனென்று



புதிர்

இருட்டை வரைந்திருக்கிறேன்
பார் என்கிறான்
தெரியவில்லையே என்கிறேன்
அது தான் இருட்டு என்கிறான்
இன்னும் தெரியவில்லை என்கிறேன்
மேலும் உற்றுப் பார்த்து
அதுவே அதனால் இருட்டு என்கிறான்
இவன் இருட்டு
எனக்கு எப்போது
வெளிச்சமாகும்

மேலே

வெள்ளைச் சுவரில்
மெல்லிய நிழல்கள்
சிலந்தியின் கலைக்கு
செலவற்ற விளம்பரங்கள்


உபதேசம் நமக்கு

அடுத்த வீட்டுக் காரனிடம்
அன்பாய் இருந்து தொலைத்து விடு
வம்பில்லை

பல்தேய்த்துக் கொண்டிருக்கும் போது
பக்கத்து வீட்டுக் காரனிடம்
வெள்ளையாய் சிரித்துவிடு
தொல்லையில்லை

என்றாவது
உன்வீட்டில்
மழை பெய்யும் போது
அவன் வீட்டில்
குடை இருக்கும்
என்றாவது உன் செடியை
ஆடு கடிக்கும் போது
அவன் கையில் ஆளுயரக்
கம்பு இருக்கும்
உன் வீட்டுக் குழந்தைகள்
ஓடியாட
அவன் வீட்டுத் தாழ்வாரம்
நீளமாயிருக்கும்

எதற்கும்
ஒரு விதமான தவமாக
தினந்தினம்
வேலியோரம் சற்றே
கால் சொறிந்து நில்லு

உளுந்தூரில் அவன் பாட்டி செத்ததால்
உனக்குப் போன தூக்கம்
ஊருக்குள் திருட்டு கற்பழிப்பு
உணவுத்தட்டு கருப்பு மார்க்கெட்டு
யாருக்கோ தவறிவிட்ட
லாட்டரிச் சீட்டு
எவனுக்கோ பிறந்து விட்ட
இரண்டு தலைப் பிள்ளை
இன்னும்
கிரஸின் விலை ஊசி விலை
கழுதை விலை காக்காய் விலை
எல்லா நிலையும் பந்தமுடன்
பல் திறந்து பேசிவிட்டு
வாய்க் கொப்பளித்து வந்துவிடு
தொந்தரவில்லை

என்றாவது நின்று போகும்
உன் சுவர் கடிகாரம் கூட
அவன் வீட்டில் அடிக்கும் மணியை
ஒட்டுக் கேட்கட்டும்

ஏசுவும் புத்தனும்
எதற்கு சொன்னான் பின்னே
அடுத்தவனை நேசி என்று
அவனால் உபகாரம்
ஆயிரங்கள் உனக்கு இருக்கும்

அதை மட்டும் யோசி
நீ ஒரு நகரவாசி.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

இன்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் குரல்



மொழியற்ற பிராந்தியத்தில்
அர்த்தமற்ற புனிதச் சிரிப்புடன்
வெற்றுவெளியில் காலுதைத்து
காற்றில் கரங்களைத் துழாவி
முலையென விரல் சுப்பி
தவழ்தலின் முன்வைப்பாய் கவிழ்ந்து
என்னைப் பார்த்து சிரித்தபடியிருக்கும்
இப்பிஞ்சை அள்ளியெடுத்து
உச்சிமுகர்ந்து முத்தி கொஞ்சவே ஆசை
முன்பொரு கால ரயில் பயணத்தில்
மூன்று மணி நேர அன்னியோன்ய
சகவாசத்தின் இறுதியில்
என் சுட்டுவிரல் அழுந்தப் பற்றிய அந்தக்
குட்டிக்கடவுளின் தளிர்க்கரம் விலக்கி
அவர்கள் இறங்க வேண்டிய
நிறுத்தத்தில் அதன் தாய்
அழ அழ அழைத்துச் சென்ற குரல்
இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது
தளிர்க்கரத் தடம் இன்னமும்
என் சுட்டு விரலில்...........


( மாதவராஜ் சார் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, சந்தோஷக் கவிதை எழுத முயற்சித்தேன். இது சந்தோஷக் கவிதையா என்பது தான் தெரியவில்லை.)

திங்கள், 27 ஏப்ரல், 2009

நிறைவேறாத ஆசைகள்



நிறைவேறாத ஆசைகளுடன்
மரித்த ஆத்மா இது
சுருக்குக் கயிற்றில் சங்கிறுக
விழிவெறிக்க நாத்தள்ள
குறிவிறைத்து உயிர்த்துளி கசிய
பூச்சி மருந்தருந்தி நுரைத்தள்ளி
குடல் வெளிவரும் அனுபவமாகி
நீரில் மூழ்கி வெகு ஆழத்தில்
கடைசி ஸ்வாசமற்றுப்
போகும் கணத்தை தரிசித்து
தண்டவாளத்தில் தலை கொடுத்துப் படுத்து
சக்கரத்தின் ஏறுவதற்கு முந்தைய
கணத்தின் ஓசையை உற்றுக்கேட்டு
தலை துண்டிக்கப்பட்டபின்
விழி எதைப்பார்க்கிறது
வாய் என்ன முணுமுணுக்கிறது
கை கால்களின் செய்கையென்ன
என்பதறிந்து இறக்கவுமே ஆசைப்பட்டேன்
இது எதுவுமே நிறைவேறாது
மரணம் சம்பவித்தது துரதிஷ்டவசமானது
சில உடல்களைத் தேர்ந்திருக்கிறேன்
ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள
தன்னிறைவடையாவிடில்
மேலும் சில உடல்களையும்,,,,,,,,,
தயவுசெய்து தாங்கள்
மறுப்பின்றி சம்மதிக்கவேண்டும்
சங்கடப்படாதீர்கள்
நீங்களும் சில உடல்களில் புகுந்து
தீர்த்துக்கொள்ளலாம் உங்கள்
நிறைவேறாத ஆசைகளையும்...

சனி, 25 ஏப்ரல், 2009

கலைந்த உறக்கம்



விட்ட மின் விசிறியில்
காயமுற்று
சரிவிகித உதிர உயிர்த்துளி
வெள்ளத்தில் உடல் மிதக்க
கான்கிரீட் விதானம்
துளைத்து விறைத்து
நிலவைப் புணர்கிறது
திடுக்கிட்டு விழித்து
யாருமற்ற அறையை
உற்று நோக்கி
பால்கனி வந்து
வெறுமை வானம்
வெறித்துப் புகைத்து
கதவடைத்து உறங்கப்போனேன்
கனவையும் விழிப்பையும் சபித்தபடி.

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்



ஸ்ரீநேசன் கவிதை

கொலை விண்ணப்பம்


நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்
முதலில் என்னைத் திட்டுங்கள் மோசமான
காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளால்
தவறாமல் அம்மாவுடனான எனது உறவை
அதில் கொச்சைப் படுத்துங்கள்
எதிர்வினையே புரியாத என்னைக்
கண்டு இப்போது எரிச்சலடையுங்கள்
அதன் நிமித்தமாக என்னைச் சபியுங்கள்
நான் லாரியில் மாட்டிக்கொண்டு சாக வேண்டுமென்று
இல்லையெனில் நள்ளிரவில் நான் வந்து திறக்கும்
என் வீட்டுப் பூட்டில் மின்சாரத்தைப் பாய்த்து வையுங்கள்
அல்லது நான் பருகும் மதுவில் விஷம் கலந்து கொடுங்கள்
முடியாத பட்சத்தில் மலையுச்சியை நேசிக்கும் என் சபலமறிந்து
அழைத்துச் சென்று அங்கிருந்து தள்ளி விடுங்கள்
அது அநாவசியமான வேலை என நினைத்தால்
என் முதுகிலேனும் பிச்சிவா கத்தியால் குத்துங்கள்
நீங்கள் தைரியம் கொஞ்சம் குறைவானவரெனில்
ஆள் வைத்துச் செய்யுங்கள்
தடயமே தெரிய வரக்கூடாது என்றால்
பில்லி சூன்யமாவது வையுங்கள்
இதுவெதுவும் பொருந்தவில்லையெனில்
ஆற்றில் மூழ்கடிக்கலாம்......
தூக்கேற்றிக் கொல்லலாம்.....
பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தலாம்......
இவற்றையெல்லாம் முயற்சித்துப் பாருங்கள்
ஒன்றினாலும் பலனில்லாத பட்சத்தில்
என் மனைவியை வன்புணர்ச்சி செய்யுங்கள்
அல்லது என் குழந்தைகள் தூங்கும் போது
பாறாங்கல்லால் தலை நசுக்குங்கள்
அப்படியும் நான் உயிரோடு தொடர்ந்திருந்தால்
தயவுசெய்து இறுதியிலும் இறுதியாக
அன்பையாவது செலுத்துங்கள்.

( ஸ்ரீநேசன் அவர்களுக்கும் தக்கை காலாண்டிதழுக்கும் நன்றி )

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

சாசனம்



கிடத்தி கிடந்து புலம்பியழாதீர்கள்
ஊதுபத்திக்கு பதில் சிகரெட்
இன்னும் கஞ்சா உசிதம்
பன்னீருக்கு மாற்றாக பிராந்தி
பயம் பூக்களின் மென்மையில்
தவிர்த்திடுங்கள் மாலைகளை
குளிர் நீரில் முற்றிலும்
நிர்வாணமாய் குளிப்பதே வழமை
பரவாயில்லை
ஆடைகளோடே குளிப்பாட்டுங்கள்
மீரா ஷிக்காய் அமாம் சோப்
சாவுக்கூத்தும் பறையோசையும் கொண்டாட்டம்
நண்பர்கள் ஆடினால் ம்கிழ்வேன்
மரணகானா விஜியை எப்பாடுபட்டாவது
அழைத்து வந்துவிடுங்கள்
சங்கு மணி அவசியம்
வெள்ளை தவிர்த்து கறுப்புத்துணி போர்த்துங்கள்
மூங்கில் கொம்பு தென்னையோலை சணல் இதுபோதும்
உடல் மட்டுமே இது
கொள்கைகள் சிலதில் சமரசம் செய்கிறேன்
தங்கள் விருப்பச் சடங்குகளில் குறுக்கிடவில்லை
ஆடுபவர் அடிப்பவர் அடக்கம் செய்பவர்
போதைக்கு மறக்காமல் கவனியுங்கள்
மனிதனை மனிதன் சுமப்பதில்
உடன்பாடில்லை ஊர்தி அவசியம்
விதிவிலக்களித்து தாய்க்குலங்கள்
இடுகாட்டில் வாய்க்கரிசியிட அனுமதியளிக்குமாறு
தாழ்மையுட்ன் வேண்டுகிறேன்
விருப்பப்பட்டால் முகத்தில்
விழிக்கவேண்டாமென்றவர்களும்
முகம் பார்த்துக்கொள்ளலாம் கடைசியாய்
இரக்கமற்ற மின்தகனம் வேண்டாமே
இவள் வந்து கொள்ளி வைக்க அனுமதிக்கவும்
விருந்தினர் சிரமம் கருதி
உடன் பால் நல்லது
அஸ்தியை சாக்கடையில் கரைக்கவும்
3 5 8 10 15 30 ல்லாம் எதற்கு சிரமம்
திதி ஞாபகமிருந்தால் பார்த்துக்கொள்ளலாம்
நினைவு பொல்லாதது
எதையும் வைக்காதீர்கள் நினைவில்

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

பொய்யாய் பழங்கனவாய்

நெடுங்காலமாய் பாதுகாத்திருந்த
மைதீர்ந்த எழுதுகோல்
கண்மையும் நீரும் உதட்டுச்சாயமும் ஒட்டிய
துவைக்காத கைக்குட்டை
முத்தங்களுடன் முடியும் கடிதங்கள்
சிரிக்கும் சாவிக்கொத்து பொம்மை
உடைந்த வளையல் துண்டுகள்
உதிர்ந்த மோதிர ஒற்றைக்கல்
பரிசளித்த புத்தக பக்கங்களுக்கிடையில் சேமித்த
நீள ஒற்றைக்கற்றை அருகே
அழுந்தியபடியிருக்கும் ஒற்றைப்பூ
மேலே ஒரு பொட்டு
உணவகத்தில் இதழ் துடைத்த தாள்
குறுஞ்செய்திகள் நிரம்பிய அலைபேசி
கொலுசின் உதிர்ந்த ஒற்றைப்பரல்
அறியாது அபகரித்த
மாதவிடாய்க் கறை படிந்த துணி
மலக்கழிவென எஞ்சியிருக்கும் நினைவுகள்
இன்னும் இன்னபிற என
சூன்யக்காரனின் மூலப்பொருட்களையொத்த
சேகரங்களனைத்தையும்
கீழ் உள்ளாடைக்குள் மூட்டைக்கட்டி
வீசிவிட்டு வந்தேன் கடலுக்குள்
வந்ததாகவே நினைவு
எங்ஙனம் உறுதிபடுத்திக்கொள்ள
என் இருப்பை
இந்தச் சூன்யவெளியில்.

புதன், 15 ஏப்ரல், 2009

சில நாட்குறிப்புகள்

காதல்
கடிதத்தில்
காற்றாடி

இலட்சியம் என்ன
என்னவாகப்
போகிறாய்
சாகப்போகிறேன்

நீயின்றி நானும்
நானின்றி நீயும்
சத்தியங்கள்
வாழ்க
ஒழிக

தனியாய் உணர்வதாகவும்
தன்னுடனிருக்கச் சொல்லியும் தனிமை
நெருங்கிப் பழகியதில்
தனிமையுடனான உறவில்
விரிசல்

தண்ணீர் போத்தலின்
அடியாழத்திலிருக்க
வெறுமை
வலியறிந்து
தாகமடக்கினேன்

காமாட்சியம்மன் விளக்கின்
தீநாக்கு பசியில் தவிக்க
தின்னக்கொடுக்கிறேன்
விரலை

உன் திருமண நிழற்படம்
ஒன்றில் புன்னகை
ஒன்றில் தவிப்பு
எது நிஜம்
எது பாவனை
எது எதுவாகவிருக்க
விரும்புகிறேன்

பார்க்க நேர்கையில்
பார்த்துச்செல்லவா
பார்த்தும்
பார்க்காதது போல் செல்லவா

( எது உன் விருப்பம் )

பார்த்தாய்
பார்த்தேன்
பார்த்தோம்
சென்றாய்
சென்றேன்
திரும்பிப் பார்த்தாய்
திரும்பிப் பார்த்தேன்
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒருவேளை
நீயும்,,,,,,,,,,,,,,,

பொட்டு வைக்கவில்லையா என்றேன்
மலர்ந்த இதழுடன்
நெற்றியை என் இதழருகே
காட்டி நிற்கிறாள்

காசியென்று
நினைத்திருக்கும்
நின்மேனியை கொசு
நடக்குமா
ஜீவகாருண்யளாயிற்றே நீ

நன்றாக தூங்குகிறாள்
அருகில் படுத்தபடி
வாசித்துக்கொண்டு
நெகிழும் வரிகளில்
அவளறியாமல்
தலைநீவி முத்தமிடுகிறேன்

கோழி மிதித்து குஞ்சுக்கும்
குஞ்சு மிதித்து கோழிக்கும்
ஒன்றும் ஆகாது
மத்தீசமென வந்து
கறியாக்காதீர்கள் எங்களை

புணரும் தருணத்தில்
நிழலாடும்
பிரசவ வலி

கண்ணீரில்
காகிதக்கப்பல் விடும் நீ
மழலையா

நேசிக்கப்படுகிறேன்
மூடநம்பிக்கை

காகம் அறிந்திருக்குமோ
தேர்ந்திருக்கிறது
எச்சமிட

கட்டணம் வசூலிக்காத காற்று
உழைக்காமல் பிழைத்திருக்கும் தாவரம்
பாழாய்ப்போகும் நான்

வசிக்கும் உடலிற்கு
வாடகை வசூலிக்க
வருவார் எவர்

பாதை
பயணம்
எது இருப்பதால்
எது நீள்கிறது

நிலைக்கண்ணாடியில்
எங்கேயென் பிம்பம்
பார்வையிழந்து விட்டேனோ
இறந்து விட்டேனோ

கும்பிடப் போன இடத்து
கொடுமையாய்
ஆலோசனை கேட்கும்
கடவுளர்கள்
நாத்தீகர்களாவதற்கு

எது
இருக்கையில் இருப்பது
இறக்கையில் இறப்பது

மரண வாக்குமூலம்
நேசம் நேசமன்றி
வேறொன்றுமில்லை

அலங்கார வசீகரங்களுடன்
புணர அழைக்கும்
வேசியாய்
மரணம்


இரக்கமும் கருணையும்
அதிகம்
மரணத்திற்கு

சுட்டும் விழிச்சுடர்
சுடுகாட்டில் வைத்தது
கொள்ளி

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

காலத்தால்,,,,,,,,,,,



வாதைகளிலிருந்து விடுபட
காயங்களில் மருந்திட
உள்ளிழுக்கும் புதைகுழியிலிருந்து
மீள புதைய
அரிப்புகளை சொரிந்து புண்ணாக்கிக் கொள்ள
குலைத்துக் கொண்டிருக்கும்
குற்றவுணர்வின் நாக்கையறுக்க
ரகசியமாய் எதிரிகளை
வஞ்சம் தீர்த்துக் கொள்ள
புழுக்கத்திற்கு சாமரமாக
துரோகிகளோடு கைக்குலுக்க
கண்ணாடிக் குவளையென
உடைந்த உறவை ஒட்ட வைக்க
அவளின் புகைப்படத்தை
இவளறியாமல் பார்த்துக் கொள்வதாய்
நாசூக்காய் குற்றங்களை நியாயப்படுத்த
பிறழ்வடைந்தவன் அற்றவனென உறுதிபடுத்த
ஆசை பிம்பத்தை வரித்து சுயபோகிப்பதாய்
என்னிலிருந்து என்னை தற்காத்துக்கொள்ள
தனிமையை நிரப்ப
நிரப்பியதை வெறுமையாக்க
இருக்க இல்லாமலிருக்க
ஒவ்வொரு முறையும் நான்
கொலை செய்யப்படுவதின் நேரலையாய்
இவைகளைப் போல்
இவைகளின் மாயை போலிருக்கும்
இந்த எழுத்தும் இதன் உள்ளீடுகளும்
காலத்தால் அழியுமெனினும்
எழுதிக்கொண்டிருக்கிறேன்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

கட வுளே



எதுவுமே
ஏதோவொன்றாய் தெரிந்தது
அதது அததுவாகயில்லாமல்
வேறெதுவாகவோ தெரிவதை
எழுதிப்பார்த்தேன்
ஒவ்வொரு மாதிரி
தெரிவதாகச் சொன்னார்கள்
ஒவ்வொருத்தரும்
நல்ல மருத்துவரை அணுக வேண்டும்
முற்றிவிட்டதென முடிவு செய்தேன்

எல்லாவற்றிலும்
ஒன்றே தெரியவாரம்பித்தது
பார்வையையும் பரிசோதனை
செய்ய வேண்டிய நிர்பந்தம்

அந்ததந்த கணத்திலிருக்கும் படி
பணித்தார் ஒருவர்
அகத்திலிருந்த ஒளிப்பதிவுக்கருவி
நிலைக்கண்ணாடி
உடைத்தேன் அனைத்தையும்
ஒன்று பலவாக
பல பலப்பலவாகத் தெரிந்தது
தொடர்ந்த கணங்களால் பிணைக்கப்பட்டு
சபிக்கப்பட்டிருப்பதை
அப்போது தான் உணர்ந்தேன்

சூழ்வான பூமியில்
எது எல்லையற்ற வெளி
வலைப்பின்னல்கள் தெரிகிறது
என் இருப்பு
வலைக்குள்ளிருக்கிறதா வெளியிலிருக்கிறதா
எது உள் எது வெளி
வலை உண்மையா மாயையா

இருப்பது மாயை
இன்மை சாஸ்வதம் என்பவர்களே
இருப்பதை இல்லையென்பது
பிரமையன்றி வேறென்ன

எதுவுமே இல்லாமலிருப்பதெப்படி
எதையுமே ஏன்
புரிய முயற்சிக்கிறேன் என்கிறீர்களே
அறிவைக்கடந்ததென்கிறீர்கள்
அறிவற்ற வெளியில் சஞ்சரிப்பதென்கிறீர்கள்
அறிவற்ற வெளியெனில் அறியாமையிலா
அறிவென்பது அறியாமையா

இருப்பு இன்மை மாயை
இதெல்லாம்
இருப்பதா
இருப்பது போலிருப்பதா
கட வுளே காப்பாற்று,,,,,,,,,,,,,,

சனி, 11 ஏப்ரல், 2009

புகைப்படக் கவிதை




எதிர்முனையில்

எவருமில்லையென்பதறியாது

அந்த ஒற்றைச் செருப்பு

அலைபேசியின் காதில்

தன் எஜமானன் கேளாத

மெல்லிய குரலில்

புலம்பியபடியிருக்கிறது

காலமெலாம்

நடந்து நடந்து

தேய்ந்த கதையை

(அகநாழிகை அவர்களின் வலைப்பக்கத்தில்,அவர் சமீபமாய் நடந்த பதிவர் சந்திப்பில் எடுத்து வெளியிட்டிருந்த புகைப்படங்களில் ஒன்று இது, எனக்கு இந்தப் புகைப்படம் மிகவும் பிடித்திருந்தது, பலரும் இதற்கு பொருத்தமாக ஏதாவது எழுதினால் நன்றாயிருக்குமென குறிப்பிட்டிருந்தார்கள் பின்னூட்டத்தில். இநத புகைப்படத்திற்குள் இன்னும் நிறைய ஒளிந்திருக்கிறது, அதில் சிறுதுளி இது,) அகநாழிகை அவர்களின் புகைப்படத்திற்கு மிக்க நன்றி.

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மு. சுயம்புலிங்கம் கவிதைகள்



சரிசெய்

நீ கவனிக்கறதே இல்லை
உன்னுடைய சாட்டையில்
வார் இல்லை
முள் இல்லை
சரி செய் பிரயோகம் பண்ணு
அப்போது தான்
வசத்துக்கு வரும்
அதுகள்
உன் வசத்துக்கு வரும்.


சுய வேலைவாய்ப்பு

காலையில் எழும்ப வேண்டியது
ஒரு கோணியோடு
ஒரு தெருவு நடந்தால் போதும்
கோணி நிறைந்து விடும்
காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன
தலை நிமிர்ந்து வாழலாம்.


பஞ்சனை

எதுக்கு
நாக்கத் துருத்திக்கிட்டு வாரிய.......
அடிக்கிற சோலியெல்லாம
வச்சிக்கிடாதிங்க.........

ஏங்கிட்ட
என்ன குத்தம் கண்டுட்டிய.......
ஒங்களுக்கு
நான் என்ன பணிவிட செய்யல
சொல்லுங்க.........

நீங்க தேடுன சம்பாத்யத்த
தின்னு அழிச்சிட்டனா..........
ஒங்களுக்கு தெரியாம்
எவனையும் கூட்டி வச்சிக்கிட்டு
வீட்டுக்குள்ள ஒறங்குதனா.........

ஒங்களுக்கு வாக்கப்பட்டு
ரொம்பத்தான்
நான் சொகத்த கண்டுட்டேன்...........
பஞ்சனைல
உக்கார வெச்சித்தான
எனக்கு நீங்க
சோறு போடுதிய.........

எஞ்சதுரத்த
சாறாப் பிழிஞ்சிதான
ஒரு வா தண்ணி குடிக்கறேன்...........
ஒங்க மருவாதிய
நீங்களாக் கெடுத்துக்கிடாதீக..........
எடுங்க கைய
மயித்த விடுதியளா என்ன......

அவள் வார்த்தைகளில்
ஆவேசம் பொங்கி
கரை புரண்டு வந்தது
அவள் வார்த்தைகளில்
நேர்மையும் சத்தியமும் இருந்தது

அவன் பிடி தளர்ந்தது
திருணைல கெடக்கான் அவன்
குடிச்சது
தின்னது
எல்லாத்தையும் கக்கிக்கிடடுக் கெடக்கான்

அவா
புருசனக் கழுவி
வீட்டக் கழுவி
எல்லாத்தையும்
சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்



முந்தித்தவம்

நீ ஒரு ஆம்பள
உனக்கு ஒரு பொண்டாட்டி......

புள்ளைகளுக்கு
கலைக்டர் வேல வேண்டாம்.......
ஒரு எடுபிடி வேல
வாங்கிக் கொடுக்க முடியாது
உன்னால.......

வீடு வித்து
வாயில போட்டாச்சி.......
தாலிநூல் வித்துத் தின்னாச்சி......
கம்மல் இருக்கா.....
மூக்குத்தி இருக்கா.....

வீட்டு வாடகைக்கு
பொம்பள ஜவாப் சொல்லணும்

விடிஞ்சாப் போற
அடஞ்சா வாற

மண்ணெண்ண அடுப்பில் சமச்சி
வீடு பூராவும் கரி

ஒரு பாவாடைக்கு
மாத்துப் பாவாட கெடையாது
முகத்துக்குப் பூச
செத்தியங்காணு
மஞ்சத்துண்டு இல்ல
நல்லாப் பொழைக்கறவா
சிரிக்கறா

ஒனக்கு
ஆக்கி அவிச்சி
ருசியா கொட்டணும்

கால் பெருவிரலை நீட்டி
ஒத்தச் செருப்பை
மெள்ள இழுத்தேன்
பாழாய்ப் போன ரப்பர்
வார் அறுந்திருக்கிறது

அவள் பின்கழுத்தில்
என் கண்கள்
செல்லமாய் விழுந்தன

அந்த மஞ்சக்கயிற்றில்
ஒரு ஊக்கு இருக்கு
கேக்கலாம்
கேளாமலேகூட
தென்னி எடுக்கலாம்

அவள் அழுவதைப் பார்க்க
இஷ்டம் இல்லை
செருப்பை விட்டுவிட்டு
நடக்கிறேன்.

தளபதி

என் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா
எங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி

மக்கள் கடல்

தூண்டில் போட்டும் கொல்கிறார்கள்
வலை போட்டும் பிடிக்கிறார்கள்

( உயிர்மை வெளியீட்டில் நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள் தொகுப்பிலிருந்து )

வியாழன், 9 ஏப்ரல், 2009

என். டி. ராஜ்குமார் கவிதைகள்



லேட்டி பொன்னுமக்கா
முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ...
அயித்தம் பாப்பாங்க
நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ.
ஏமாத்திம்மா..... அடியேன் வந்திருக்கேன்
கும்பிகாந்துகு ஏதெங்கிலும் தரக்கூடாதா
கஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும்
கிட்டியாலே போதும்
மனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி
கொண்டு தட்டுவா
விரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ
கிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம்.
சட்டிப்பான கழுவணுமெங்கிலும்
எல்லாத்துக்கும் வாற வழியதுதான்
ஏமான் வீட்டிலயிருந்தாரெங்கி
ஏமாத்தியோ பெண்டுபிள்ளையோ
சத்தமிட்டு சிரிக்கப்பிடாது.
ஏமான தொடப்பிடாது
தண்ணிகொண்டு கொடுக்கணுமெங்கிகூட
கொடுத்துட்டு ஓடிப்போய் சொவரு பக்கம் மறஞ்சி நிக்கணும்
அன்யோன்யமா நெருங்கி நின்னு பேசக்கூட வரப்பிடாது
எப்படி இந்த ஏமாத்திமாரெல்லாம் ஏமாம்மார
கெட்டி ஆளுதோன்னு தோணும்.
செலச் சமயம் காட்டுக்கு ஆனமேய்க்க போறயேமான்
வெளுப்பிலபோய் அந்தியில வரும்
இத அறிஞ்சி வச்சிகிட்டுதான்
ஏமாத்திக ஆசைய தீத்துவைக்க
ஆரங்கிலும் வருவானுக.
நம்ம பௌப்பு
பிச்சயெடுத்திட்டு கண்டும் காணாம போறது
நமக்கு அறியாதுண்ணு ஏமாத்தி நெனப்பா.
நம்மளும் உரியாடாத போய்கிட்டு
நாலஞ்சி தெவசம் கழிச்சி பிச்சயெடுக்க வாறப்ப
ஏமாத்திய பாத்து மொகக்குறி சொல்லுறது
அம்மையிட மொகத்துல ஒரு கலக்கம் தெரியுதல்லோ
மனசின்ற அகத்து ஒரு வல்லாத்த சலனம் ஒண்டல்லோ
ஏமான் அறியாத அம்மைக்கும் வேறொருத்தனுக்கும் ஒரு
தொடர்பு ஒண்டல்லோ
பாவமல்லா எந்நாலுமிதொரு பாவமாணு
தொஸமில்லா எந்நாலுமிதொரு தொஸமாணு
அம்மைக்கு பகவதி தொணையொண்டு
கொளவி குறி சொல்லி முடிக்க
ஆருட்டையும் இதப்பத்தி மிண்டப்பிடாது
என்று சொல்லிவிட்டு
சூடுசோறும் கறியும் கொடுத்து
புதுத்துணியும் கொடுத்தனுப்புவா ஏமாத்தி
இப்படியே ஆறும் இருவர் பசியும்.




தம்பிய பெத்தெடுத்த பச்ச ஒடம்போடு கெடக்க
வயிறு நெறய கள்ளும் மோந்திக்கிட்டு
வாய் நெறய விளித்துக்கொண்டே
நல்லமொளகு, கொடமஞ்ச, நால்பா மரப்பட்ட.
ராமச்சம்வேரு,
ஒணங்கிபோன காட்டு நெல்லிக்காயிட்டு
கொதிக்க வைத்த வென்னீரில் துணியை முக்கி
அடிவயிற்றில் ஒத்தடமிட்டுக் கொடுத்துவிட்டு
ஒடக்கு எடுக்கும் அப்பா
அம்மாவின் கூந்தலுக்கு

( எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் தொகுத்த ராஜ்குமார் அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு ( கல் விளக்குகள் ). காலச்சுவடு பதிப்பக வெளியீடு.)

புதன், 8 ஏப்ரல், 2009

ஞானக்கூத்தன் கவிதைகள்



பார்க்கப் படுதலின்றி வாழ்க்கை பிறிதென்ன ?

யார் யார் என்னை பார்க்கிறார்கள் ?
பார்க்கிறார்கள் என்ற உயர்திணை
முடிவு கூடத் தவறு தான்.

எது எவரால் பார்க்கப் படுகிறேன் என்பதே சரி.
வீதியில் நடந்தால் கல்லாப் பெட்டிக்
கிண்ணத்து வழவழப்பைத் துழாவிக்கொண்டு
கடைக்காரர் என்னைப் பார்க்கிறார்.

தெருமாறிச் செல்லும் நாய் பார்க்கிறது
அதைத் தொடரும் மற்றொரு நாயும் பார்க்கிறது
ஒரு சிறுவன் ஒரு சிறுமி அவர்களிடம் நானொரு
காதல் கடிதத்தை இன்னாளிடம்
கொடுக்கச் சொல்வேனோ என்று பார்க்கின்றனர்.

பெருமாள் மாட்டுடன் எதிரில் வந்தவன்
ஒன்றும் கேட்காமல் என்னைப் பார்க்கிறான்.
அவனது மாடும் என்னைப் பார்க்கிறது.
வெள்ளைப் புள்ளிகள் மேவிய ஆடுகள்
கிளுவை இலைகளைப் புசித்துக் கொண்டு
என்னைப் பார்க்கின்றன.
தபால்காரர் கையில் அடுக்கிக் கொண்ட
கடிதக் கடடுகளை விரல்களால் பிரித்து
எனக்கு கடிதம் இல்லை என்று
சொல்லாமலே என்னைப் பார்க்கிறார்.

குட்டிகள் பின்பற்ற தெருவின் ஓரத்தில்
குறுங்கால்களோடு நடக்கும்
பெரிய பன்றி என்னைப் பார்த்தது.
ஆனால் குட்டிகள் என்னைப் பார்க்கவில்லை
தாயைத் தவிர யாரையும் பார்க்கத்
தெரியாதவை. மேலும் இன்னும் வயதாகவில்லை

வரிசையாய் மின்சாரக் கம்பிமேல்
உட்கார்ந்திருக்கும் காக்கைக் கூட்டத்தில்
ஒன்றாவதென்னைப் பார்க்காமலா இருந்திருக்கும் ?

எல்லாம் எல்லோரும் என்னைப் பார்ப்பது
போலப் பிரமை எனக்கேன் வந்தது
ஞானாட்சரி நீ சொல்வாயா
எப்போதும் என்னை விமர்சிக்கும் உன் வாயால் ?


ஒரு பையன் சொன்ன கதை

ஓட்டுக் கூரைமேல் ஒரு காக்கை தனது
கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு
எதையோ தின்றதாம் ஆர்வமாகவும்
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும்

தெருவெல்லாம் பசியோடு பறந்து
எங்கே என்ன கிடைத்ததோ
இப்போது தின்கிறது காக்கையென்று
நினைத்துக் கொண்டனாம்
ஒரு வேளை தன் வீட்டுக் கொல்லையில்
உலர்த்தி வைத்ததாய் இருக்குமோ
என்று நினைப்பு வரவே
விட்டானாம் ஒரு கல் காக்கை மேலே
என்னவோ கவலையில் நான் இருந்த போது
ஒரு பையன் சொன்னான் இந்தக் கதையை எனக்கு

களத்திரம்

சொன்னார். சொன்னார். முச்சுவிடாமல்
சொன்னார். அப்புறம் கேட்கிறேன் என்றேன்.
இன்னும் கொஞ்சம் கேளென்று சொன்னார்
உறங்குவது போல பாவனை செய்யலாம். ஆனால்
எவ்வளவு கஷ்டம் கேட்பது போல
நீண்ட நேரம் பாவனை செய்வது ?
கோட்டுவாய் விட்டேன். அவரோ இன்னமும்
சொன்னார். முக்கியமான கட்டத்தை
அடையவில்லை இன்னமும் என்றார்.
ஓயாமல் சொன்னார். மூன்றாம் மனிதன்
ஒருவன் வந்தென்னை மீட்க
மாட்டானா என்று நான் ஏங்கும் சமயம்
அவரே ஓய்ந்து போய் அடுத்த சந்திப்பில்
மீதியைச் சொல்வதாய் என்னை நீங்கினார்.
அவர் சொன்ன கதைகளை எல்லாம்
உம்மிடம் சொன்னால் நீரும் என்போல்
ஆகிவிடுவீர்.
மனைவியைக் கனவில் காணும்
வாழ்க்கை போல் கொடுமை உண்டோ ?


(விருட்சம் வெளியீட்டில் ஞானக்கூத்தன் அவர்களின் பென்சில் படங்கள் தொகுப்பிலிருந்து)

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

அவிழ்க்கவியலாத முடிச்சுகள்



கொசுவர்த்திச்சுருள் தீரப்போகிறது
நாவரள பிரக்ஞையின்றி
தேக்கிய எச்சிலை விழுங்கியிருக்கிறேன்
கழுத்து வலிக்க சற்று நிமிர்ந்து படுத்திருக்கிறேன்
மூத்திரம் அடக்கவியலாது கழித்து வந்தேன்
வேர்க்கடலையும் தீரப்போகிறது
இவனின் வருகை ஒவ்வாததோ
சாளர நிழல் வரையறுத்திருந்த
இடத்தையும் தாண்டி நகரப்போகிறது
இவ்விளம்பரம் வரக்கூடாதென நினைத்திருந்தேன்
இந்த வர்ணனையாளரும் கூட
பதட்டமாயிருக்கிறது
சேவாக் ஆட்டமிழந்துவிடுவாரென

திங்கள், 6 ஏப்ரல், 2009

ஏழாம் உலகம்



அம்மா தாயே
அய்யா பிச்சை போடுங்க
உங்க காலைப் பிடிச்சி கேக்கறேன்
தர்மம் தலைகாக்கும்
நீங்க நல்லாயிருப்பீங்க
காக்குமென்று நினைத்த தர்மமெல்லாம்
காலை வாறிவிட்டது
நல்லாயிருப்பீங்களாம்
என்னமோ
இவனுக்கு பிச்சையிட்டால்
ஈழத்தில் அமைதி நிலவும்
பொருளாதாரச் சரிவு சீராகும்
சுனாமி வராது
விலைவாசி குறையும்
காவிரித்தண்ணீர் வரும்
பப்பில் மதுவருந்தும்
எம் குலப்பெண்கள் தாக்கப்படமாட்டார்கள்
ஐடி யில் மறுபடியும்
பணிக்கு அழைத்துவிடுவார்கள்
என்பது போல
வந்துவிட்டான்(ள்)கள்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

நிழல்கள்

மின்தடை
சாளர விளிம்பிலிருந்த
மெழுகேற்றி படுக்க
மெழுகின் நிழல் கரைகிறது
அறை விதானத்தில் நிழல்கள்
உறைந்த மின்விசிறி
கொடில் கயிறின் உள்ளாடை
மின்கம்பி பறவையாய்
குழல்விளக்கின் விறைத்த குறி
குண்டுபல்ப்பின் பருத்த முலை
ஊஞ்சல் கம்பியின் நிழல்
தொங்கும் தூக்குக்கயிறாய்
பரண்பொருள் நிழலில்
கணமொரு உருவம்
சுவரில்
என் நிழலை உற்று நோக்கினேன்
வராமலிருந்திருக்கலாம் மின்சாரம்
தடங்கலுக்கு வருந்துகிறேன்

புதன், 1 ஏப்ரல், 2009

எதுவுமே நினைவிலிருப்பதில்லை எல்லாமே நினைவிலிருக்கிறது



எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே நினைவிலிருக்கிறது
எதுவும் செய்வதற்கில்லை
மறப்பதற்கும்
நினைவிலிருத்துவதற்கும்
பிரயத்தனங்களேதுமில்லை
புனித நதிக்கும்
நரகல் மிதக்கும் சாக்கடைக்கும்
கிளிக்கும் கழுகிற்கும்
நாய்க்கும் நரிக்கும்
திறந்தே கிடக்கிறது
உணர்கொம்புகளை வெட்டி
எரியூட்டியாகிவிட்டது
புலன்களை மழுங்க
காயடித்தாகிவிட்டது
நிகழ்வுகள் சொற்களாய் பதிவதற்குள்
துரத்தி விழுங்குகிறது சர்ப்பம்
நீங்கள் காறி உமிழலாம்
சங்கிலியில் பிணைத்து
சாட்டையில் விளாசலாம்
முகத்தில் சிறுநீர் கழிக்கலாம்
மலம் பூசலாம்
எதிர்ப்பேதுமில்லை
எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே தேவையாயிருக்கிறது
எதற்கும் தகுதியுடையவனே
ஏனெனில்
எல்லாமே நினைவிலிருக்கிறது

செவ்வாய், 31 மார்ச், 2009

இந்த வார உயிரோசை இணைய இதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதைகள்



பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம்.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1152


உயிரோசை இதழுக்கு நன்றிகள்.


பின்வருவது இந்தப் பதிவிற்கான கவிதை



இது இன்னொரு இவள்

அழும் குழந்தையை
தூக்கி கொஞ்சி
ஓயப்படுத்தியபடி
அது தான் நான் வந்துவிட்டேன்
அல்லவா அழக்கூடாது என
வாசலுக்கு வருகிறாள்
நின்றது மழை.

திங்கள், 30 மார்ச், 2009

ஐயாயிரம் மைல்கள்



தினமும் பேசவேண்டும்
இவளுக்கு எதையாவது
இவங்க வந்தாங்க
அவங்க போனாங்க
இதைச்சொன்னாங்க
புலம்பல் அழுகை கோபம்
ஐயாயிரம் மைல்களுக்கு
அப்பாலிருந்து இம்சிக்கிறாள்
குட்டிப்பொண்ணு அப்பாவென
பேசும் மழலையில் மனம் நிறையும்
பின்னரவில் நிலைகுலைந்த நிலையில்
மறுபடியும் அழைப்பாள்
அந்த நெடுநேர உரையாடல்
முடியும் சுயபோகத்தில்