செவ்வாய், 31 மார்ச், 2009

இந்த வார உயிரோசை இணைய இதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதைகள்



பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம்.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1152


உயிரோசை இதழுக்கு நன்றிகள்.


பின்வருவது இந்தப் பதிவிற்கான கவிதை



இது இன்னொரு இவள்

அழும் குழந்தையை
தூக்கி கொஞ்சி
ஓயப்படுத்தியபடி
அது தான் நான் வந்துவிட்டேன்
அல்லவா அழக்கூடாது என
வாசலுக்கு வருகிறாள்
நின்றது மழை.

திங்கள், 30 மார்ச், 2009

ஐயாயிரம் மைல்கள்



தினமும் பேசவேண்டும்
இவளுக்கு எதையாவது
இவங்க வந்தாங்க
அவங்க போனாங்க
இதைச்சொன்னாங்க
புலம்பல் அழுகை கோபம்
ஐயாயிரம் மைல்களுக்கு
அப்பாலிருந்து இம்சிக்கிறாள்
குட்டிப்பொண்ணு அப்பாவென
பேசும் மழலையில் மனம் நிறையும்
பின்னரவில் நிலைகுலைந்த நிலையில்
மறுபடியும் அழைப்பாள்
அந்த நெடுநேர உரையாடல்
முடியும் சுயபோகத்தில்

சனி, 28 மார்ச், 2009

பெரிய குழந்தையும் சிறிய குழந்தையும்

மழையில் முளைத்த
தற்காலிக வீதி நதியில் விட
கப்பல் வேண்டி கெஞ்சுவாள்
என் கவிதைப் பக்கம் கிழித்து வந்து
டீச்சர் வேடம் அவளுக்கு மிகப்பிடித்தம்
அகரம் தவறாய்ச் சொல்லி பாடம் கற்பேன்
சமயங்களில் நான் தான் தலைசீவி
ரெட்டைக்குடுமியிட வேண்டுமென அடம்
குளிப்பாட்டிட துடைக்க
உள்ளாடை சட்டைப்பாவாடை
பொட்டிட மையிட முகப்பவுடர்
சாக்ஸ் ஷீ அனைத்திற்கும் நான்தான் வேணும்
ஒருநாள் கழுவிவிடவும்
நான் வரவேண்டுமென அழுகை
சதா குற்றப்பத்திரிகை வாசிப்பாள் இவள்
ஒருநாள் என் செல்லம் பொறுக்காது
உச்சக்குரலில்
ஒருநாள் உன்னத்தான் கட்டிக்குவேன்னு நிக்கப்போறா
விஷம் கக்கினாள் சண்டாளி
பொறம்போக்கு பீத்தின்னப்போகுது பார் புத்தி
உங்கப்பன்கிட்ட நீ அப்படித்தான் கேட்டயா
விஷத்திற்கு விஷம்

,,,,,,………///? ? ? ? /; ; ;” ;;;;;;;;;[[[
---- _____ \\\\ \ &&&& ^^^^^6$$4444
2222 *** ((9))0 &7777%%%%%
+++++ ==== ^^^6 ^6666 ^^^66 ###33
Gsdjgfjh nvbsd பாபநாபாஎ
கேதனேகதபோ65,ஹ,,,ஹஇ,,ட்ஹ
$$$$$$$$$$$$$ Yuyuyu @@@@@@2
@#$%^*(&:>?”{} ggeg gefg s d d rgy g g
((( 00000 _------ ))))000 0008888 ^^^^^6666^^^^
)))))) &&& ^^^ 6 4444$$$$ #####!!!!!!! 3@$! %^*+_)(
¨ >>>>>>>:::”’<<””’’>>>>.. bhvj jn hh n
¨ 0000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாளடைவில் முற்றிலும் பிறழ்ந்துவிட்டாள்
அவளுக்கு செய்ததெல்லாம்
இவளுக்கு செய்துகொண்டு நான்
செல்லக்குட்டி தற்போது விடுதியில் தங்கி
படித்துக்கொண்டிருக்கிறாள்.

வெள்ளி, 27 மார்ச், 2009

புழுதி படியும் வாசல்



தேனீர் நுரை
உதட்டு விளிம்பில் இருந்ததும்
சோற்றுப்பருக்கை நாசி நுனியில் இருந்ததும்
உதிர்ந்த சருகு கேசத்தில் செருகியிருந்ததும்
தோளில் எறும்பு ஊர்ந்ததும்
உதிர்ந்த இமைமுடி
விழியருகே ஒட்டியிருந்ததும்,,,,,,,,,,,,,,
பின்னான கணங்களின்
உறைந்த நிகழ்வுகளும்
எரிந்த பாம்புக்குளிகையின்
திக்கில்லாமல் காற்றிலலையும்
சாம்பலாய்
கூட்டி விட விட
படியும் புழுதியாய்
வாசல் கோலத்தின் பின்
அழிந்தும் அழியாத
நேற்றைய கோலமாய்

வியாழன், 26 மார்ச், 2009

சூழ்ந்திருக்கும் புனிதர்கள்



கரப்பான் காதில் சென்று
மூக்கில் வந்து மலக்கிடங்கைவிட
நாற்றமென
பல்லி உள்நாக்கை
துடிப்படங்கும்வரை உள்ளுக்கிழுக்க
நண்டு தேர்ந்தது விழி
எழவு டப்டப்பென்று
உறங்கவிடாது என
இதயத்தின் அருகிருந்து நரி
சர்ப்பத்தின் தலை வாயிலிருந்து
வால் ஆசனவாயில்
மண்புழுவென நரம்புகளைத்
தின்னும் பெயரறியாப் பட்சி
சாளரவிளிம்பில் அணில்
தாழ்ந்த மரக்கிளையில் காகம்
நெடுக குரூரம் பழகிய மூளையை
விரைவாய் செல்லரித்தது
சுவை கொஞ்சம் குறைவென
புழுக்கள்.

புதன், 25 மார்ச், 2009

எதுவுமே நிகழவில்லை இன்று



புன்னகை ஒட்டிய முகங்கள்
நெகிழ வைத்த மேலாளர் நண்பர்கள்
காத்திருக்க வைக்காமல்
வந்துவிட்ட இவள்
காலியாயிருந்த பேருந்து
ஆழ்ந்து யோசிக்கிறேன்
ஒரு அவமானம்
ஓரேயொரு ஏமாற்றம்
வன்சொல்
எதிர்ப்பட்ட லாரிக்காரனும்
சாவுகிராக்கியெனவில்லை
இது ஒரு நாளா
மன்னிக்கவும்
இன்றைக்கு
கவிதையேதுமில்லை
உங்களை வெறுமனேயனுப்புவதில்
துயரம் மெல்ல கவிகிறது.



( ஏதோ ஒரு ஓரமாய் எழுதிக்கொண்டிருக்கலாமென வந்து, நண்பர்கள் உசுப்பி ரணகளமாக்கியதில், இதழ்களுக்கு அனுப்ப அனுப்பியதையெல்லாம் அவ்விதழ்களும் வெளியிட்டுவிட, சட்டென்று என் எழுத்திற்கான கச்சாப்பொருட்களனைத்தும் (துயரம்) தீர்ந்துபோனதாய் உணர்ந்த கையறுநிலையில் இப்படித்தான் எழுதத்தோன்றியது )

செவ்வாய், 24 மார்ச், 2009

இந்த வார உயிரோசை இணைய இதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதைகள்


அழைக்கும் பிம்பம், தலைப்பூச் சூடாத கவிதா நவீனவிருட்சம், உயிரோசை என இரண்டிலும் வெளிவந்திருப்பது மகிழ்ச்சி, சதுரங்கம் கவிதையும் வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி. பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம்


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1123


உயிரோசை இதழுக்கு அனேக நன்றிகள்.

திங்கள், 23 மார்ச், 2009

அண்மையில் மறைந்த கவிஞர் அப்பாஸ் நினைவாக



ஆத்மாநாமை
ரோஜாப்பதியன்கள் தேடிக்கொண்டிருக்கிறது

கோபிகிருஷ்ணனின்
டேபிள் டென்னிஸ் சத்தமும்
உள்ளேயிருந்து சில குரல்களும
கேட்டுக்கொண்டேயிருக்கிறது

இப்படியிருக்க இருவரும்
சுயஅழிப்பில் மீட்சியடைந்தனர்


ப சிங்காரம்
எல்லோரும் தனியாகவே
இருக்கிறோமெனச் சென்றார்

நகுலன்
சூரல் நாற்காலியையும்
கோட் ஸ்டாண்டையும்
கால்சுற்றும் பூனையையும் விட்டு
சுசிலாவை அடைந்தார்

ஆதவனை அருவி
தாகம் தீர்த்துக்கொண்டது

வாழ்வைக் கொண்டாடிய
ஜி நாகராஜனை
சாவு துணைக்கழைத்துக்கொண்டது

ஸ்டெல்லா புரூஸ்
துணையிழந்து
வாழமுடியாமல் போனார்

சுந்தர ராமசாமி
ஒரு வேடந்தாங்கல்
புலம் பெயர்ந்து மறைந்தது

கற்றதையும் பெற்றதையும்
கற்பித்த சுஜாதா
காலம் ஆனார்

இருத்தலியம் பேசிய
அப்பாஸ்
நகுலன் சொன்னது போல
இல்லாமல் போய்விட்டார்

வர வர குறைகிறது
இருப்பின் மீதான ஈர்ப்பு

(எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் இச்செய்தியை வாசிக்கையில் சூழ்ந்த வெறுமையில் மனம் தத்தளித்தது. அப்பாஸ் அவர்களின் கவிதைகளும், பாவண்ணனின் உரையும் அத்தளத்தின் சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் கடற்கரய் அப்பாஸ் அவர்களின் புகைப்படத்தை தன் வலைப்பூவில் வெளியிட்டிருந்தார், நன்றி. முகவரி http://thesanthri.blogspot.com/ )

சனி, 21 மார்ச், 2009

நவீன விருட்சம் வலைப்பூவில் அழகியசிங்கர் அவர்களால் தொகுக்கப்பட்ட என் கவிதைகள் ( நான்கு கவிதைகள் – செ. செந்தில்வேல் )

எஸ்.வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன், ஆத்மாநாம்,,,,,, என எப்பேர்ப்பட்ட படைப்பாளிகள் புழங்கிய இலக்கியப் பாரம்பர்யமிக்க சிற்றிதழ் நவீனவிருட்சம். http://navinavirutcham.blogspot.com/

இதழ்களுக்கு அனுப்ப வேண்டுமா கவிதைகளை என்பது கூட தெரியாமலிருந்த எனக்கு, ச.முத்துவேல், அனுஜன்யா ( இவர்கள் கவிதைளும் நவீனவிருட்சத்தில் வெளிவந்திருக்கிறது ) மற்றும் ஆதவா அவர்கள் (மிக்க நன்றி) நினைவுறுத்தி அனுப்பச்சொல்லினர்.( நான் மிகவும் நேசிப்பவர்கள் )
நானும் அனுப்ப மதிப்பிற்குரிய எழுத்தாளர், நவீனவிருட்சம் ஆசிரியர் அழசியசிங்கர் அவர்கள் தன் வலைப்பூவில் வெளியிட்டு நெகிழ்விலாழ்த்திவிட்டார். மிக்க நன்றி,,,,,,,

என் அழைக்கும் பிம்பத்தையும், தலைப்பு சூடாத கவிதாவையும் என் இம்மாத வலைப்பதிவு காப்பபகத்திலும்,
பின்வரும் முகவரியிலும் சுட்டி வாசிக்கலாம்.

. http://navinavirutcham.blogspot.com/

என்னுடைய இயற்பெயரில் வெளியிட்டு விட்டார், ( செ.செந்தில்வேல் ) , என் இணைய நண்பர்கள் என் இயற்பெயரை அறியும்படி ஆகிவிட்டது. இதுநாள் வரை காத்துவந்த மர்மம் உடைபட்டுவிட்டது.

நேற்று நான் மிகவும் நேசிக்கும் மதிக்கும் படைப்பாளிகளுள் ஒருவர் ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் என்னை அறிமுகப்படுத்தி நெகிழவைத்தார். அதற்கான நன்றிக்கடிதத்தையும் பின்னூட்டத்தில் காணலாம்.

http://jyovramsundar.blogspot.com/

நெகிழ்ச்சியில் என்னை உறைய வைக்கும் பெருமதிப்பிற்கும் அன்பிற்குமுரிய எழுத்தாளர் மாதவராஜ் ஐயா அவர்கள் தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் சொல்லி உற்சாகப்படுத்திவருகிறார்.

மற்றும் பலர் வாசித்து வாழ்த்தி குறைகளைச் சுட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்கள் (எல்லோர் பெயரையும் குறிப்பிடவேண்டும்). எட்டு மாதகாலமாக வலைப்பூ எப்படி துவங்குவதென்றும் ( அப்போ தான் தெரியும் இப்படியொன்னு இருப்பதே ) பின்னூட்டம் எப்படியிடுவதென்றும் தெரியாமல் வாசித்து வந்திருக்கிறேன். கணிணியும் தட்டச்சும் (அறைகுறை) ஒரு வருடமாகத் தான் தெரியும் ( கற்றுக்கொடுத்தவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் )

இதுவரை வாசித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டமிட்டு உற்சாகப்படுத்தியவர்களுக்கும், இனி என் வலைப்பூவிற்கு வரப்போகிறவர்களுக்கும்

மிக்க நன்றி,,,,,,,,,,,,,,,,,,

ஆற்றாமையின் புலம்பல்



விரல்களில் வருடி பற்றி
முத்தங்களிட்டு
கடைசியில் மிதி
வாழ்ந்த கணங்களின் எச்சமாய்
மிதிபட்டுக்கொண்டிருக்கிறோம்
கைவிடப்படல் வழமையே
சுகிக்க சுகிக்க
கரைந்தோம்
பின்பு வேறொன்று
தேவையுணர்கையிலெல்லாம்
ஒவ்வொன்று
கசந்தால்
இன்னொன்று
ஏகபத்தினி விரதன்
வேடம் தான் உறுத்துகிறது
புனிதபிம்பம்
கூறுபடுவது பொறுக்காது
பிரம்மச்சர்யம் பூணுவதாயும்
பொய்யுரைக்கிறாய்
அழிக்கும் பிரயத்தனங்கள் கடந்து
சில கணமேனும்
மறைந்ததன் தடயமாய்
வாழும் வாசம் புலப்படுத்திவிடும்
எங்களுடனான
சகவாசத்தை
இப்படிக்கு
உனக்காக
சுவாசித்தே உயிர்நீத்த
சிகரெட்.....................

வெள்ளி, 20 மார்ச், 2009

வெளியில் நல்ல மழை

தாயம் சீக்கிரத்தில் விழாது
அஞ்சாங்காயில் போய்விடும்
பல்லாங்குழி கொப்பரை வராது
ஒற்றையா ரெட்டையா
யூகம் தவறாகவேயிருக்கும்
சிவப்பிற்கு துணை விழாத கேரம்
எப்போதும் கறுப்புக் காய்கள் தானெனக்கு
சதுரங்கத்திற்கு தந்திரம் பற்றாது
சீட்டுக்கும் அதுவே
புலம் பெயர்ந்த
சக ஆட்டக்காரிகளின்
பட்டப்பெயர்கள் நிழலாட
அனிச்சையாய் இதழ் மலர
சூடான தேனீருடன்
சாய்வு நாற்காலியில்,,,,,,,,,,,

வெளியில் நல்ல மழை

வியாழன், 19 மார்ச், 2009

பாதை


இந்தப் பாதையில் தான்
வழக்கமாய் புகைக்கும் தேனீரருந்தும் கடை
புளியமர நிழலில்
சற்றே நீளம்
இதைவிட குறுக்கு வழிகள் அனேகம்
ஒரு ஒட்டுதல்
அப்பக்கம் செல்லாத
அசந்தர்ப்ப நாட்களின்
இரவுகளை உறக்கமிழக்கச் செய்யும்
பிரிவுத்துயர் நிரம்பிய கண்ணீர் திரண்ட முகம்
எவ்விதம் இந்நெருக்கம்
வாகன பயண நாட்களை விட
பாதயாத்திரையில்
அதீத புத்துணர்வுடன் தென்படும்
பிரிவின் துயரமிகு கணங்களை யூகித்தே
நெருக்கத்திலிருந்து சாமர்த்தியமாய் நழுவிச்சென்றும்
சிலரிடம் சிலதிடம் இப்படியாகி,,,,,,,,,,,,,,,,,,




காலப்போக்கில் இன்னதென்றறியாத
மனவிலகலில்
தொடர்பறுந்து போனது
மயானத்திற்கு வேறு குறுக்கு வழிகள் இல்லை
ரோஜா இதழ்களும் சம்பங்கிகளும்
பூக்கள் உதிர்ந்த ஆரமும்
பாதை நெடுக உதிர்த்து
இவ்வழி தான்
போக வேண்டியதாயிற்று
நெடுநாள் பாராதிருந்து
இந்தக் கோலத்தில் பார்க்கவா
என அரற்றியது பாதை,

புதன், 18 மார்ச், 2009

யூமா வாசுகியின் கண்ணீரைப் பின்தொடர்ந்து


தொலைவான ஓரிரவு

என் அம்மா...
உன் ஒரு முலையிலிருந்து மறுமுலைக்கு
என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது
பிரிவென்று கருதாதே.
என் தமக்கையே நெடுவழியில் நான்
உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல்
பற்றிக்கொள்ளும் பொழுது இது.
தீண்டலற்ற இடைநொடி
தனிமையோ என்று திகைக்காதே
என் தங்கையே உன்னைத் தியானிக்கும்
என் மனம் இமைக்கும் தருணமிது.
அச்சமய இருட்டில் நீ மிரளாதிரு.
உறங்கு என் மகளே
தோள் மாற்றிச் சுமக்கவே உன்னை
என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன்.
ஐயோ இது விலகலோ என்று
திடுக்கிட்டு விழித்துவிடாதே.
சகலமுமான என் பிரியமே
இன்று நாளெல்லாம் உன் நினைவால்
எத்தனை முறை மனம் ததும்பி
கண்ணீர் வரப் பார்த்தது...


( என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர் என்ற யூமா வாசுகியின் கவிதைத் தொகுப்பிலிருந்து )


கென் தன்னுடைய வலைப்பதிவில் மஞ்சள் வெயில் வாசிப்பனுபவத்தை எழுதியிருக்கக் கண்டேன், எங்களூர் நூலகத்தில் தேட கிடைத்தது. அந்நாட்களில் நானும் ஜீவிதா ஜீவிதாவென்று பிதற்றியபடியிருந்தேன். மொழிநடை, இளகிய மனம், கசிந்துகொண்டேயிருக்கும் இதயம், தாங்கொணாத் துயரளிக்கும் பிரியம், நிராகரிப்பின் புறக்கணிப்பின் மறுப்பின் வலி நிரம்பிய உணர்வுகளின் சிதறல் என எல்லாமும் யூமா வாசுகியை இன்னும் கண்டடைதலுக்கான தேடலைத் தூண்டியது,

இவ்வருட புத்தகக் கண்காட்சியில் அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு, என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர் கவிதைத்தொகுதிகளும், உயிர்த்திருத்தல் சிறுகதைத் தொகுப்பும், ரத்த உறவு நாவலும் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ந்தேன்.
துயரத்தை ரசிப்பதில் அப்படியென்ன குரூர ஈடுபாடோ தெரியவில்லை. நெஞ்சை கனக்க வைப்பதும் கசியச்செய்வதுமான கலை இலக்கியங்களின் மீதான நாட்டமே அதிகமிருக்கிறது. எனக்கு ஏதோ ஆழ்மனப்பிறழ்விருப்பதாகக்கூடச் சந்தேகமெழும் சில சமயங்களில். மிகவும் உலர்ந்த இவ்வாழ்வில் எதன் பொருட்டாவது அழுவதிலும் நெகிழ்வதிலும் தான் வாழ்தலுக்கான கணங்கள் இருப்பதாகவும் எந்நேரமும் மனதை அரித்துக்கொண்டிருப்பவற்றின் தற்காலிக மீட்சியாகவும் மனம் நிறுவிக்கொள்ள முயல்கிறது, புனைவே வாழ்வாய், வாழ்வே புனைவாய். புனைபவர்களின் வாழ்வு அதிபுனைவாய் இலக்கிய உலகம் எண்ணிலடங்கா ரகசியங்களை உள்ளடக்கியதாயிருக்கிறது.

செவ்வாய், 17 மார்ச், 2009

அழைக்கும் பிம்பம்

அழைக்கும் பிம்பம்

தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா
(ஆத்மாநாம் நினைவாக)

இரக்கப்படாதீர்கள்

தனிமையிலேயே விட்டுவிடுங்கள்
என் பேரன்பும்
மரக்கிளையினின்று
சுழன்றபடி உதிரும்
பழுப்பு இலை போன்ற
என் பிரிவும்
கொன்றுவிடக்கூடும்
உங்களை.

விட்டுச்சென்றபின்

தத்தித் தத்தி
வல இட உள்ளங்கால்களால்
அழைத்து வந்த
கூழாங்கல்லை தாட்சண்யமின்றி
விட்டுச்சென்றதும்
திருப்பத்தில் மறையும் வரை
பார்த்திருந்தது
ரயில் மறையும் வரை
கையசைக்கும்
வழியனுப்ப வந்தவளைப்போல.

இவள்

காரில் இவளுடன்
சென்றிருந்தேன்
ஐயோவென இவளின் அலறல்
வேகத்தைக் குறைத்து
இவளைப் பார்க்கிறேன்
ஆசுவாசமாய்
இவள் வாகனத்தின் முன்னால்
பார்த்த திசையில்
தும்பி
கடந்து சென்றது.

திங்கள், 16 மார்ச், 2009

சூன்யப்பாதை

சூன்யப்பாதை

களவானியாய் பார்வைகளுக்கிடையில்
கண்டும் காணாமல் மென்னகை படரவிட்டு
நடையில் வலிந்து வரவழைக்கப்பட்ட கவனத்துடன்
காற்றைச் செல்லமாய்ச் சினந்து
கன்னச்சிகையை காதோரம் செருகி
இழுத்துவிட்டுக்கொள்ள தோள் ரவிக்கை விளிம்பும்
சரிசெய்ய முந்தானையும்
விரல்களின் வெறுமைக்கு துணையாக
கொலுசொலிக்கும் பரவும் சுகந்தத்திற்கும்
உன்னை உன் நிழல் பின்தொடர்வதில்
கர்வமுனக்கு
யட்சியின் சகல அறிகுறிகள்
சூன்யத்தின் பாதையில்
திரும்பிப்பார்த்தலின் கணங்களுக்காய்
நின் தடத்தை மிதிக்காது பின்தொடர்கிறேன்
வந்த வழியும்
திரும்பும் வழியும்
தெளிவற்றிருக்க
நீயுமில்லை
நின் பாதச்சுவடுமில்லை.

சனி, 14 மார்ச், 2009

சதுரங்கம்

சதுரங்கம்

சிப்பாய்களின் உயிர் மலிவு
உங்கள் ஒரு மந்திரியை பணயம் வைத்து
என் இரண்டு யானைகளை வீழ்த்தினீர்கள்
ஒரு தட்டில் உங்கள் இன்னொரு மந்திரி யானை
மற்றொன்றில் என் இரண்டு குதிரை மந்திரி
உங்கள் குரூர சமண்பாடு இது
ராஜ்யத்தைக் காக்கும்
நிர்க்கதி நிலைக்குத்தள்ளி
என் ராணியைக் கவர்ந்தீர்கள்
உங்கள் சூட்சுமங்கள்
அறிந்திருக்கவில்லை
வெற்றி இதற்கு
உங்கள் விசுவாசிகள்
எவரையும் காவு கொடுக்க தயாராயிருந்தீர்கள்
அவர்களோ
நான் உட்பட
உங்கள் தந்திரம் மெச்சினோம்
துரோகம்
அறியாது.

வெள்ளி, 13 மார்ச், 2009

நெற்றிப்பொட்டில் ஆணியறையும் பட்டினத்தாரின் வரிகள்

நெற்றிப்பொட்டில் ஆணியறையும் பட்டினத்தாரின் வரிகள்

வீடிருக்க தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளுந் தாமிருக்க
மாடிருக்க கன்றிருக்க வைத்த பொருளிருக்க
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமோ

சீயுங்குருதிச் செழுநீர் வழம்புஞ் செறிந்தெழுந்து
பாயும் புடவையொன்றில்லாத போது பகலிரவாய்
ஈயுமெறும்பும் புகுகின்ற யோனிக் கிரவுபகன்
மாயுமனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையோ

அன்னை யெத்தனை யெத்தனை யன்னையோ
அப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ
பின்னை யெத்தனை யெத்தனை பெண்டிரோ
பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ
முன்னை யெத்தனை யெத்தனை சென்மமோ
மூடனாயடி யேனு மறிந்திலேன்
இன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ
என் செய்வேன் கச்சியேகம்ப நாதனே

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னை
கண்ணால் வெருட்டி முலையான் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங்குழியிடைத் தள்ளியென் போதப்பொருள் பறிக்க

பீளையும் நீரும் புறப்படு மொருபொறி
மீளும் குறுமபி வெளிப்படு மொருபொறி
சளியும் நீருந் தவழு மொருபொறி
உமிழ்நீர் கோழை யொழுகு மொருபொறி
வளியும் மலமும் வழங்கு மொருவழி
சலமும் சீழும் சரியு மொருவழி
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டக முடிவிற் சுட்டெலும்பாகும
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து

வெட்டுண்ட புண்போல் விரித்தவற் குல்பைதனிலே
தட்டுண்டு நிற்றல் தவிர்ப்பதுவு மெக்காலம்




பட்டினத்தார் பத்திரகிரியார் ஆண்டாள் இவர்களின்பால் தனித்த ஈர்ப்பு உண்டு. உடலைப் பற்றியும் பற்றியெறியும் காமம் பற்றியும் அதனினின்று விடுவித்துக் கொள்ளும் ஆன்மீகப் பிரயத்தனங்கள் பற்றியும் பாடியவர்கள். முலை, அல்குல், யோனி இதுபோன்ற சொற்களையெல்லாம் ஆன்மீகப்பாடலில் எவ்வளவு அனாயசமாகப் பயன்படுத்தியிருக்கிறார் பாருங்கள். உருவ வழிபாட்டில் ஈடுபாடில்லாதயெனக்கு கச்சியேகம்பநாதன் மீது அளப்பரிய பற்றே உண்டாகி விட்டது. இன்னும் ஆண்டாள் பாசுரங்களையும் கம்பனையும் வாசிக்க ஆசை. வாசிப்பு இட்டுச் செல்லும் பாதையின் வசீகரங்களை உள்வாங்கியபடியே தீராது திரிந்து கொண்டிருக்கிறேன் புத்தகப்பக்கங்களில்,,,,,,,,,,,

வியாழன், 12 மார்ச், 2009

தலைப்பூ சூடாத கவிதா

தலைப்பூ சூடாத கவிதா

புத்தரின் போதனைகள்
புத்தகத்தை வாசித்து மூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
ஒரு எறும்பு.

வாசலில்
சொற்களின் யாசகம்
கவிதையில் இடம் கேட்டு
பார்க்காதது மாதிரி
கடந்துவிடுகிறேன்.

எட்டிப்பிடிக்க முயல
ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த
முயல உயர்த்த முயல
எவ்வளவு குரூரம்
நாயாயிருக்கவே சும்மா விட்டது.

மாமரக்கிளையில்
அளவளாவியபடியிருந்த சிட்டுக்குருவி
கிளம்புகிறேன் என்பதாய் தலையசைக்க
எப்போது பார்க்கலாம் என்றதற்கு
தெரியாதென தலையசைத்து பறந்தது.

விழி எழு
கழி போ வா
வாழ்வெனும் புனைவு பழகு
புணர் வளர்
பொருளற்ற பொருளீட்டு
மாண்டுபோ

புதன், 11 மார்ச், 2009

நடுநிசி

நடுநிசி

பலன் பார்க்கும் பழக்கமுண்டாவென
தலையில் விழும் பல்லி
பூனையின் இருப்பை
பரிசோதித்துச் செல்லும் எலி
புணர்ச்சி நிமித்தம் அலையும்
நடுநிசி நாய்கள்
உறக்கம் தொலைத்த இரவில்
இன்னும் என்னவெல்லாமோ நடந்தது
அப்பா
அம்மாவின் புருஷன்
இத்துனை காலமாய்
இதுகூட
தெரியாமலிருந்திருக்கிறது.

செவ்வாய், 10 மார்ச், 2009

பாசாங்கு

பாசாங்கு

என்ன பேசுவதென்றே தெரியவில்லை
நெடுநேரம் மௌனப்பிடியுள்
தொடங்கிய உரையாடல்களையும்
ஒரு சொல்லில் கடக்க
என்ன நினைத்தானோ
சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டான்
புன்னகைகள் கைக்குலுக்கல்கள்
நலம் விசாரிப்புகள் முகஸ்துதிகள்
விவாதங்கள்
நினைவைத்தோண்டுதல் கிளறுதல்
புல்லரிக்கச்செய்தல்
புளகாங்கிதமடையச்செய்தல்
கொஞ்சமேனும் பழகியிருந்திருக்கலாம்
பாசாங்குகளை

திங்கள், 9 மார்ச், 2009

ஆத்மாநாமின் ரோஜாப் பதியன்கள்

என் ரோஜாப் பதியன்கள்

என்னுடைய இரண்டு ரோஜாப் பதியன்களை
இன்று மாலை சந்திக்கப்போகிறேன்
நான் வருவது அவற்றிற்குத் தெரியும்
மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்
பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது
எனக்குப் புரிகிறது
நான் மெல்ல படியேறி வருகிறேன்
தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன
புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்
செருப்பைக் கழற்றி முகம் கழுவி
பூத்தூவாலையால் துடைத்துக்கொண்டு
கண்ணாடியில் எனைப் பார்த்து
வெளிவருகிறேன்
ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி
என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்
நான் ஊற்றும் நீரைவிட
நான் தான் முக்கியமதற்கு
மெல்ல என்னைக் கேட்கின்றன
என்ன செய்தாய் இன்று என
உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என
பொய் சொல்ல மனமின்றி
செய்த காரியங்களைச் சொன்னேன்
அதனை நினைத்துக்கொண்ட கணத்தைச் சொன்னேன்
சிரித்தபடி காலை பார்ப்போம்
போய்த்தூங்கு என்றன
மீண்டும் ஒரு முறை அவற்றைப் பார்த்தேன்
கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்
காலை வருவதை எண்ணியபடி,

ஆத்மாநாம், இந்தப் பெயரிலேயே ஒரு ஈர்ப்பு இருக்கிறது பாருங்கள். இவரை அடைந்த கணம் முதல் கவிதை குறித்த என் அத்துனை பிம்பங்களும் மறுநிர்மாணம் செய்யப்பட்டது.

கிணற்றுத் தண்ணீரின் தன் பிம்பம் இவரை தழுவிக்கொள்ள அழைத்திருக்கிறது, எப்படி இந்த மனப்பிறழ்வு, 34 வயதில் தானே தனக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்ட நிகழ்வு வாழ்வெனும் பெரும்புதிர் குறித்து என்னை அலைக்கழியச்செய்திருக்கிறது.

48 வயதில் மணமுடித்து தன் 67 வயதில் மனைவியை இழக்க நேரிட்ட துயரில் தன்னை மீளா உறக்கத்தில் ஆழ்த்திக்கொண்ட ராம் மோகனாகிய காளிதாஸ் என்கிற ஸ்டெல்லா புரூஸின் என் நண்பர் ஆத்மாநாம் என்ற தொகுப்பின் இரட்டை பாதிப்பு வேறு எனக்குள்,

என் பிறந்த தினத்தில் (ஜீலை 6) தான், தான் செல்லும் நாளை தேர்ந்திருக்கிறார். ஆத்மாநாம் பெயர் வேறு, ஆத்மா நாமா நானா, தீராத மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறேன். நான் மட்டுமா, அவர் ஊற்றிய நீரை விட அவரை முக்கியமாக கருதிய அந்த ரோஜாப் பதியன்கள் அவரின் இழப்பை எப்படி எதிர்கொண்டிருக்கும், எதிர்ப்படும் ரோஜாப்பதியன்களில் எல்லாம் இழப்பின் மென்சோகம்.

புதன், 4 மார்ச், 2009

போடா மயிரு

போடா மயிரு

போகிற வருகிற பயணிக்கிற பிரதேசமெங்கும்
பள்ளிச்சீருடையில் ரிப்பன் ரெட்டைப்பின்னல்
தட்டச்சுப்பயிலகத்தில் புட்டமுரசும் ஒற்றைப்பின்னல்
இரவு அங்கி ஏற்றியகொண்டை குடம் தெருக்குழாய்
தலைகுளித்த தூவாலைமுடிப்பு
தாவணி தலைகுளித்து முடியாதகுழல் கோயில்
திரையரங்கு அட்டைககுழாய் தேனீர்ச்சட்டை பாப்கத்தரிப்பு
வீட்டுவாசல் சிக்கலெடுத்து குழலுலர்த்தியபடி
மதிய சோத்துமூட்டை தயிர்சாதம் மயிரு
பூசாத சுவர் பொந்தில் நரைத்தும் நரைக்காத சுருள்கள்
இணையமையம் தட்டச்சுவிசைப்பலகையில
உதிர்ந்திருக்கும் நீண்ட ஒற்றைக்கற்றை
பாஞ்சாலி கூந்தல் இடைவரை
திரும்பிப்பார்ப்பதற்குள் திருப்பதி காணிக்கை
மாவிலைத்தோரணமாய் கத்தரித்த நெற்றிமுடி
வல இட நடு வகிடு வகிடின்றி
தோள்வரை முதுகுகீழ் இடை புட்டம் அதற்கும் கீழ்
தார்ச்சாலையாய் மலைப்பாதையாய்
வண்ணம்பூசிய கண்டிஷனர் பளபளப்பு
முடியாத குழலை அளையும் காற்றின் கரங்கள்
சுதந்திர கொடி சே மயிர்
பிரெஞ்சுப்புரட்சி மன்னிக்கவும் பின்னமைப்பு
குதிரைவால் பக்கக்கொண்டை
நாய் கன்று ஆடு பூனைக்குட்டியை நீவிவிடுவது போலன்றி
கூந்தல் வருடல் எளிய சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டிருக்கிறது
பின்னாமல் கிளிப் போட்டிருந்த இருசக்கர வாகனம்
சமீபமாய் வாகனத்தைச் செலுத்தி
கவனியுங்கள் மரியாதையுடன்
உங்க முடி அழகா இருக்குங்க என்றதற்கு
போடா மயிரு
செருப்பு பிஞ்சிரும்

செவ்வாய், 3 மார்ச், 2009

பூர்வீக ஊர்

பூர்வீக ஊர்

பூர்வீக ஊருக்கு சென்றிருந்தேன்
சுற்றுக்கட்டு வீடுகள்
நவீன மோஸ்தரில் மாற்றியமைக்கப்பட்டு
வயல் பம்புசெட்டு வெறுமையாய்
கழிந்து கழுவும் குளம் நீரற்று
கிரிக்கெட் மைதானம் காணாமல் போய்
கோலி பம்பரம் கில்லி கள்ளன்போலிஸ்
விளையாடும் பிள்ளைகள் தொலைந்து
ஊர்பெருசுகள் தர்மகர்த்தா உட்பட போய்சேர்ந்து
கல்பனா இளவரசுவையும்
பானு இளங்கோவையும்
காதலித்து மணமுடித்து
பாபு சத்யா கோகிலா மருந்து குடித்து இறந்து
அஞ்சலி மட்டும் பிழைத்து
அந்த பாட்டி இறந்தபிறகு
கணபதி தாத்தா மறுமணம் முடித்து
எதிர்வீட்டு தேவசேனா அக்காவுக்கு விவாகரத்தாகி
சகுந்தலை அக்கா பாண்டியனோடு ஓடிப்போய்
சிவபாதம் அண்ணன் காணாமல் போய்
கண்ணன் பிரம்மச்சாரியாய்
கதை நீண்டு கொண்டேயிருந்தது
தெய்வானைக்கு ஒரு மகன் இரண்டு மகளாம்
அடிக்கடி அவள் பேச்சில்
என் பெயர் வருமாம்,

திங்கள், 2 மார்ச், 2009

வள்ளி புதுக்கோட்டையில்

வள்ளி புதுக்கோட்டையில்

கவிதா புல்லரம்பாக்கத்தில்
ஐந்தாம் வகுப்பில் பார்த்தது
செல்லம்மா ஆரணியில்
நாகம்மா பினேஸ்பாளையத்தில்
கீதா வில்லிவாக்கத்தில்
புவனா மயிலாப்பூரில்
ராதிகா பேர்னாம்பேட்டில்
தமிழ்வாணி சிங்கபெருமாள்கோயிலில்
கயல்விழி ஊத்துக்கோட்டையில்
பூர்ணிமா கோயம்புத்தூரில்
சுபாஷினி காசிமேட்டில்
மேனகா அடுத்ததற்கு அடுத்த தெருவில்
கல்யாணி இதே தெருவின் கடைசிவீட்டில்
தேவிகா அலுவலக சாலையிலுள்ள வீட்டில்
சாவித்ரி மேம்பாலத்தை ஒட்டிய குடிசைப்பகுதியில்
ஓவியா துளசி திரையரங்கு பக்கத்துதெருவில்
மங்கையர்க்கரசி திருநீர்மலையில்
இன்னும் பெயர் தெரியாத பெண்கள்
பெயர் தெரியாத ஊர்களில்
வாக்கப்பட்டு போக
இவர்களில் ஒருத்தியைக்கூட
மணக்க இயலாத துரதிஷ்டநிலை
பார்கவி எந்த ஊருக்கு போவாளோ

வீடு

வீடு

நெடுங்காலமாய்
அந்த சாலை வழியில்
பூட்டியே கிடக்கிறது
நிராதரவாய் ஒரு வீடு
சிகரெட் பற்ற வைத்து
படியில் அமர்ந்துவிட்டேன்
திண்ணையில் பிள்ளைகள்
கல்லாங்காய் விளையாடிக்கொணடு
வாசலில் நொண்டியாடி
வீட்டுப்பெண்கள் படிகளில் அமர்ந்து
வாசல் கோலம் பற்றி பேசி
வாசலில் பந்தல் கூட
பெண்பிள்ளை சமைந்திருக்கலாம்
தாத்தா தினசரியுடன்
பாட்டி பாக்கு தட்டிக்கொண்டு
மரண ஓலம் அடங்கி
கழுவப்பட்ட ஈரம் வாசலில்
சித்தப்பா இரவுப்பணி முடிந்து
புங்கமரத்தடியில்
கயிறு கட்டிலில்
தாயக்கட்டை சத்தம் கூட
தீபாவளி பட்டாசு ஒளி(லி)
பொங்கலோ பொங்கல் குரல்கள்
லயா குட்டி ஆட
தாணு பாட
மற்ற குழந்தைகள் கும்மாளமிட,,,,,,,,,,,,,
இப்படியெல்லாம்
மனதில் ஓடிக்கொண்டிருப்பதை
இந்த வீடு பார்த்திருக்கும்,

மயானம் செல்லும் வழி

மயானம் செல்லும் வழி

மயானம் எங்கு இருக்கிறது
நேரே சென்று
ஒன்று இரண்டு மூன்று
நான்காவது இடது நிழற்சாலை( நிழலின்றி ) வழிசென்று
பிரதானசாலையின் வலத்தில்
எல்லை முடியும் இடத்தில்
கீழிறங்கும் செம்மண் சாலையில்
அம்புக்குறியுடன் அமரத்தோட்டம்
எதுவும் எளிதில்
அடைந்துவிடுகிற தூரத்திலில்லை
கடும்வெம்மையின் இளைப்பாறுதலுக்கு
குளிர்பானம் அருந்திச்செல்ல உத்தேசம்
இறுதிப்பயணத்தை நடந்தே கடப்பது ஆறுதலளிக்கிறது
சகபயணியின் இறுதி ஊர்வலத்தில்
நாக்கை துருத்தி சீட்டியடித்து
பிரமாதமான அங்க அசைவுகளோடு ஆடி
சகபயணி சாக்கில்
எந்த குறையுமற்று
சகல சடங்குகளுடன்
மனநிறைவாய் அமைந்துவிட்டது
என் இறுதி ஊர்வலம்
தனிமை தன் ஒரு
துணையை இழந்தது,

பிறழ்வு

பிறழ்வு


என்னவென்று தெரியவில்லை
அழுத்தமாய் கனக்கிறது
சிகரெட்டின் தேவையைப் பற்றிய உணர்வு
ஏதேதோ துண்டுத்துண்டாய் நினைவில்
குடித்து வெகுநாளாயிற்று
தவறாக நினைத்திருப்பாள்
சற்று வெளிப்படையாகவே பார்த்துக்கொண்டிருந்தேன்
தேனீர்க்கடையில் காலை சுற்றிய நாயை துரத்த
அந்த பிச்சைக்காரர் ரொட்டித்துண்டு போட்டார்
வெகுநேர்த்தியான பின்னல்களுடனான
சிலந்தி வலையை கிழித்தெறியும்
மூர்க்க்ம் அலைக்கழிக்கிறது,
வாகன கைப்பிடியில்
சருகென கையிலெடுக்க ஓனான்
விடியாத அதிகாலை மங்கிய வெளிச்சத்தில்
வாகனத்திற்கு குறுக்கே
பாம்பை பின்தொடர்ந்து கீரி
படுக்கைக்கருகே பல்லியின் அறுந்த வால்
பாழாய்ப்போன தவளைச் சத்தம் வேறு
சாளரக்கம்பியில் நின்று
பார்த்துச் சென்றது
வழக்கமான அணில்
பரணில் உருளும் சப்தம்
எப்படியோ உறங்கிப்போனேன்
இன்று புகைப்பிடிக்கையில்
ரொட்டித்துண்டோடு காததிருந்தேன்
அந்த நாயின் வருகையை எதிர்நோக்கி