வியாழன், 28 மே, 2009

நினைக்கையில்...........................


பணி நிமித்தமான
இந்த நெடுந்தூர
இரவு இரயில் பயணத்தில்
கட்டிடங்கள்
மரங்கள்
குகைகள் மலைகளென
மாறி மாறி
பார்வை தடைபட
மறைத்துக் கொண்டிருக்க
திரைகளணைத்தும் நீங்கிய தருணம்
பெருமேகப் பொதியொன்று
கடக்கிறது கிரகணமாய்
ஊரும் மேகம் விலகக் காத்திருக்கையில்
பூத்த விழிகளைப்
போர்த்தியது இமைகள்
இரவெலாம் இந்த
யன்னல் கம்பி பிடித்து
மூச்சிறைக்க
ஓடி வந்திருக்கும்
ஊமை நிலவு
என்பதை
இந்த அதிகாலையில்
நினைக்கையில்...................

ஞாயிறு, 24 மே, 2009

திருவினை


திருவினையாகாத முயற்சிகளை நொந்து
கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன்
கடைசியாக
அதற்கு முன்பாக
மலங்கழித்து விடலாமென
கழிவறை போக
பீங்கானில் தேரைகளிருக்க
கழிக்காது திரும்பி
வரும் வழியில்
எறும்புகளின் ஊர்வலத்திற்கு
இடையூறின்றி கவனமாக
கடந்து வந்தேன் அறைக்குள்
கரிசனங்கள் பிறந்து விடுகிற
கடைசி தருணங்களின்
வினோதத்தில் புன்சிரித்தேன்
என்றுமில்லாமல் அதிகமாய் வியர்க்க
பொத்தானையழுத்தப் போகையில்
சிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை
பார்வையில் இடறியது
40000 உயிர்கள் மாண்டுபோன
செய்தி தாங்கிய
தினசரி அருகிருந்தது
விசிறயேதேனும் அகப்படுமாவெனத் தேடுகையில்
சாம்பல் கிண்ணத்தில்
பிணங்களென்றிருக்கும்
துண்டுக் குவியல்களைக் கண்டு
கடைசி சிகரெட் பிடிக்கும்
ஆசையையும் கைவிட வேண்டியதாயிற்று
சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு
காத்திருக்கும் கயிற்றிற்க்கிரையாக
கதவைச் சாற்ற
கதவிடுக்கில் நசுங்கியிரண்டான
பல்லியின் வாயிலிருந்து
தப்பிப் பறந்ததொரு பூச்சி

புதன், 20 மே, 2009

பிரசன்னம்



நாலுகால் பாய்ச்சலில் வந்தது
அருகருகில் ஆசுவாசமாய்
வெளிச்சமற்ற வேலிச்சுவர் ஓரத்தில்
முகர்தலுக்குப்பின் கடித்து
முத்த வேகம் மும்முரமாகி
வெறியோடு பாய்ந்து
யுத்தத்தையொத்திருந்த
முன்விளையாட்டுகள்
இடையில் இன்னொன்று வர
அதை விரட்டியது இவ்விரண்டில் ஒன்று
ஒன்று கிடந்தவாக்கிலிருக்க மற்றொன்று
நாவால் நக்கியபடி
பிணைந்த உருளுதலுக்குப் பின்
நின்றவாக்கில ஒன்று மற்றொன்றின் மேல்
அந்த கணத்தில் பிரசன்னமானார் கடவுள்
உச்சத் தருணத்தில் விசையுடன்
கல் பாய்ந்து விழ
தவம் கலைந்த அழுகுரலுடன் ஒன்றும்
உருவிய விறைப்படங்காத குறியுடன் மற்றொன்றும்
திசைக்கொன்றாய் சிதறியோட
கல்லெறியப்பட்ட திக்கில்
அனுமனவதாரமாய்
ஒரேயொரு குரங்கு மட்டுமிருந்தது.

சனி, 16 மே, 2009

நேசம்



ஜன்னலில் நீளும் பசுவின் வாயில்
இட்லி ஊட்டுவாள் அம்மா
பாலுண்ண மறுக்கும் கன்றிற்கு
புட்டிப்பாலூட்டுவார் அப்பா
அம்மு படித்துறை மீன்களுக்கு
பொரி போடுவாள்
பொட்டிப்பாம்பிற்கு பாலூற்றுவார்கள் தெருவில்
மதியம் காகத்திற்கு சோறு
தினம் வரும் குரங்கு
கடைக்காரரிடம் பழம் வாங்கிச்செல்லும்
பக்கத்து வீட்டு அக்கா
பூனையை மடியிலேயே வைத்திருப்பாள்
இணையமையத்தில் அவர் தோளைவிட்டு
இறங்கவேயிறங்காது கிளி
பிஸ்கட்டின் ஒரு முனையை வாயில் வைத்து
மறுமுனையை நாயுடன் பகிர்ந்துகொள்வாள்
எதிர்வீட்டு யுவதி
இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன்
அந்த நாயை

வெள்ளி, 15 மே, 2009

பரவசம்



மெதுவாய் ஊர்ந்து செல்ல
பிடியிலிருந்து நழுவி
அகப்பட்டும் படாமலும்
போக்குக்காட்டி
தவணையில் ஆடைவிலக்கி
மெல்ல மர்மங்கள் அவிழ்த்து
திரைவிலக்கி
தழுவி
ஒன்றாய் கலந்து
மல்லுக்கட்டி
உணர்வெழுச்சியில்
கணமொரு அனுபவமாய்
மின்னற்கீற்றுப் பொழுதில்
தாவும் நிச்சயமற்ற அர்த்தங்களில்
தரிசனமாகும் கவிதை தருணம்
புணர்ச்சியின் உச்சம்.

செவ்வாய், 12 மே, 2009

மோனவெளி



நின்ற மழை நினைவுகளாய்
திட்டுத் திட்டு தேக்கங்கள்
அலையுமென்னுருவம்
காத்திருந்தேன் அசைவடங்க
சலனம் மட்டுப்பட
கூடிவரும் பொழுதில்
கல்லெறிந்ததாய்
விழுந்ததொரு மழைத்துளி
தாரைகள் கூட
குட்டித்தேக்கத்திற்கு
குடை விரித்து
அமர்ந்திருக்கிறேன்
அசைவற்றயென் பிம்பம் தரிசிக்க

ஞாயிறு, 10 மே, 2009

நண்பர்களே தோழிகளே



அப்படியென்ன குற்றமிழைத்துவிட்டேன்
பழைய நேசமில்லை விழிகளில்
நண்பா நீ முகம் பார்த்துப் பேசி
எவ்வளவு நாளாயிற்று
தோழி மதிய உணவைப் பகிர
ஏன் அழைப்பதில்லை இப்பொழுதெல்லாம்
தோழி பார்வையிலேயே என்னை
பொறுக்கியென உணரச்செய்கிறாய்
மதுவருந்தவும் அழைப்பதில்லை
நண்பா நீ இப்பொழுதெல்லாம்
அரட்டைப்பெட்டியில் என்
நூறு offline செய்திகளுக்கும்
ஒரு மறுமொழியுமில்லை தோழிகளே
ஒரு குறுஞ்செய்தியில்லை
எப்போதும் நிராகரிக்கப்படுகிறது
என் அலைபேசி அழைப்புகள்
மின்மடல்களுக்கு பதிலுமில்லை
சந்திக்க வருவதாய் சொன்னபோது
வீட்டிலிருந்தே இல்லையென்றீர்
நரகலைக் கண்டதாய்
முகம் திருப்பிக் கடந்துவிடுகிறீர்
ஒரு கோப்பைத் தேனீரோடு
தனியாய் பேசி புகைத்து
சில நேரங்களில் இப்படியெழுதிக்கொண்டு
கைவிடுதலுக்கும் விலகலுக்கும்
குறைந்தபட்சம் காரணங்கள்
தெரிந்தாலாவது,,,,,,,,,,,,,,,,,
தொந்தரவு செய்யவில்லை இனி
மனத்தாங்கல்களுமில்லை
என்றேனும் என் மீதான
வெறுப்பும் கோபமும் விலகுமாயின்
குற்றவுணர்வின்றி தயங்காமல்
ஒரேயொரு குறுஞ்செய்தியனுப்புங்கள்
அடுத்த கணம் உங்கள்
அலைபேசியொலிக்கும்

புதன், 6 மே, 2009

எழுத்தாளர், மணல் வீடு சிற்றிதழ் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை



குண்டாம்புலக்காயனின் இங்கிலீஷ் பைட்
மு.ஹரிகிருஷ்ணன்


நானு, குண்டாம்புலக்காயன், ராக்கியூட்டு தம்பிராசு மூணுபேருந்தான் கூட்டாளிங்க. மாரியாநோம்பிக்கி பஞ்சாயத்துப்போர்டு ரேடியோச்செட்ல அம்மணப்படமோட்டி ஊருக்கவுண்டங்கிட்ட மாட்னதுக்கப்புறம் பெருஞ்செட்லயிருந்து நாங்க பிரிஞ்சிகிட்டம். எங்களுது சிறுஞ்செட்டு. தங்கறது,உங்கறது,படுக்கறது ஏம் பேழ்றதுக்கூட ஒரெ எடம். மூணுப்பேரும் ஒருத்தரவுட்டு ஒருத்தருப் பிரிஞ்சி இருக்கமாண்டம். எனக்கு கம்பிக்கட்ற சென்ரிங் வேல,தம்பிராசு போலிசிக்கு செலக்சனு ஆவியிருந்தான். குண்டாம்புலக்காயங்
கட்டட மேஸ்திரி. ஆளுதாங் கட்டையே ஒழிய மன்னந் தடிதாண்டவராயன். ஆளயே உருக்கி அவனோட ஆயுதத்துல கொண்டி வெச்சிருந்தான் ஆண்டவன்.
ஒரேவொரு சித்தாள வுடமாட்டான். அவனுக்கு வயசு-கியசு வித்தியாசங்கெடயாது. வத்தலு
தொத்தலுன்னுகூட பாக்கமாட்டான். ஆராயிருந்தாயென்ன? எவராயிருந்தாயென்ன? அவ பச்ச வாழமட்டையில அடுப்புப் பத்தவைக்கிற பத்தினித் தங்கமாயிருந்தாலுஞ்சேரிச் சிரிச்சிச் சிரிச்சிப் பேசியே சீலய அவுத்துப்புடுவான்.
சிறுவயசிலிருந்தே பையஞ் செரியான துண்ட்ரிகம். எங்கூர்ல அன்னிக்கியிருந்தது ஒரேவொரு பஞ்சாயத்து பள்ளியோடம். ஒண்ணாவதுக்கு பாவாய டீசரு. ரெண்டாவதுக்கும், நாலாவதுக்கும் நாமசாமி வாத்தியாரு. மூணுக்கும் அஞ்சிக்கும் பெரிய வாத்தியாரு. நாமசாமிக்கி ஆரியங், கம்புச், சோளம்னு பலப்பட்ற வேவாரம். ஏழுச்சாமத்துல எந்திரிச்சிப் போனாருன்னா மனுசன், எல்லகுட்டையூரு, கணக்குப்பட்டி, ஒருக்கோடியா வனவாசி முட்டும் சீமயச் சுத்தி தவிசி அளந்துவுட்டுட்டு அப்பிடியே கந்து வசூலும் பாத்துக்கிட்டு புதூரு நாலுரோட்டுக்கு வாரத்துக்குள்ள ஒம்போது மணி பெல்லு அடிச்சிப்புடும்.
ஓட்டமா, ஒடியாந்த வெசயில வாயிலிருக்கற பல்லுக்குச்சிய எடுத்தெறிஙஞ்சிப்புட்டு நேராப்போயி சேருமேல குக்க வெச்சிக் குந்திக்கிவான். வாயுங் கழுவமாண்டான், பொச்ச்ங் கழுவமாண்டான் சூர. அழிஞ்சிக்கண்ணன் ஆலிவாயன், மூணுத்தலயன், குண்டாம்புலக்காயங், கூலுச்சட்டி, பீச்சுத்தி, மொட்டப்பெருக்கான், கீரிப்பிள்ள, கிழிஞ்சஒதடி, வவுறின்னு புள்ளைங்க பேரக்கூப்புட்டானோ இல்லியோ பொய்தவம் தன்னப்பாலபோயி ஒருக்கடயில கெடப்புல வுழுந்துரும். அப்புறம் பாத்துக்க சண்டாளன் வுடுற கொறட்ட மொகுட்டோட பிரிச்சிக்கிட்டு மானத்துல காத்தா பறக்கும்.
பெரிய்ய வாத்தியா எட்டிப்பார்த்துட்டு கண்றோவி, கண்றோவி ன்னு தலத்தலயா அடிச்சிக்குவாரு. பாக்கற வரைக்கும் பார்த்துட்டு பசங்க அதுங்க பாட்டுக்கு,
“எம்பேத்தி ஒண்ண, எம்பேத்தி ரெண்டே’’ன்னு ஒண்ணு ரெண்டு எழுதிக்கிட்டு குந்தியிருக்கணும். ஏதாவொரு நாளைக்கி தப்படியா முழிச்சிருந்தா புள்ளைங்களுக்கு ஒரெழுத்து, ரெண்டெழுத்து படுப்புச்சொல்லிக்குடுப்பானா மவராசன் ஊ-கூம்.. பனங்காட்டு காமாண்டாருக்கு கும்மியடிக்கிறாப்ல பசங்கள கூப்ட்டு சுத்தியும் நிக்கவெச்சுருவான். சோத்தாங்கைவசம் ஆம்பள பசங்க, ஒரட்டாங் கைவசம் பொட்டப்புள்ளைங்க. மொள்ள ஒவ்வொருப்புள்ளயா கிட்டக்க கூப்புட்டு நிறுத்தி பாவாட நாடாவ அவுத்து கைப்பிடிச்சட்டத்துல அந்தண்ட இந்தண்ட நவரவொட்டாம வரிஞ்சிக்கட்டி மூங்கப்பெரம்ப தலவமாத்தி முத்துன அடிய புள்ளைங்க தொப்புள்ளுக்குள்ள வுட்டு ‘தொளுக்கு, தொளுக்கு’ன்னு இடிக்கிறது.
ங்சேரி அந்த வெளயாட்டு சலிச்சிப்போச்சா பசங்க டவுசருப்பொத்தான அவுத்துவுட்டுட்டு தலவுச்சுன்னியப் புடிச்சி பால் பீச்சறாப்ல இழுத்து இழுத்து நிமுட்டறது. வலசுப்பசங்களாயிந்தாலுந் தேவல வாட்டமாயிருக்கும். ஊமக்கருக்குஞ்சப்பிடிச்சி நசுக்கறதுல அந்தாளுக்கென்ன ருசனயோ! நொட்டுக்கைய வெச்சிருக்கமாண்டாம ஒருநாளு குண்டாம்புலக்காயங்குஞ்சயும் புடிச்சி கசக்க, பொறுக்கறமுட்டும் பொறுத்திருந்துட்டு வாத்தியாரு கையோட பையஞ் சிர்ர்ருனு ஒருப்பிடி முத்ரத்த வுட்டாட்டிப்புட்டான். இந்தாளு கோவந் தாங்காம அவன ரெண்டு குப்பாலு வெக்க அவம்போயி அவிங்க அப்பாயிக்கிட்ட நாயஞ்சொல்ல கெழவி பள்ளியோடத்து வாசல்ல வந்து நின்னுக்கிட்டு பேசுன பேச்சு காது குடுத்துக் கேட்க முடியல, ஒரே அமர்க்களம்.
இந்த வெவகாரம் நடந்தப்பொறவு வாத்தியாரு ஒரு கொஞ்ச நாளு கொலாய மூடிக்கிட்டிருந்தாங் கப்புனு. அதும்பொறவு மூணு நாலு மாசத்துக்கெல்லாம் மறுக்க பழய குருடி கதவ தொறடின்னு இன்னொரு புதுநாயம் போட ஆரம்பிச்சுட்டான். ஒவ்வொருத்தனயா பக்கம் கூப்புட்டு நிறுத்தி வெச்சுக்கிட்டு “ டேய் டேய் பையா பையா நேத்து நாத்திரி ங்கொப்பனும் ங்கோயாளும் எவுத்திக்காலிடா படுத்திருந்தங்க? என்னென்றா பண்டிக்கிட்டிருந்தாங்க’ன்னு கேட்கறது. இந்த அலப்பநாயி பொந்தியில கவடு வெச்சிருக்கிறத அதுங்க பாவம் என்னத்த கண்டுச்சிங்க சூது தெரியாயதுதுங்க. நோனி வாய கம்முனு வெச்சிருக்க மாண்டாம இந்த நாயத்த நாமசாமி குண்டாம்புலக்காயங்கிட்டயுங் கேட்க, அந்தக் கொலவாரி ஓடி அவங்காயாக்காரிக்கிட்ட கேட்க அவ, “கண்ணு கண்ணு நாளைக்கி மறுக்க உங்க வாத்தியாரு அந்த மாதர கேட்டா , நீ சாரு, சாரு உங்க மவளும், நொனயமூட்டு போடுவாசியும் எங்க படுத்திருந்தாங்களோ அங்க படுத்திருந்தாங்க, அவிங்க என்ன பண்டுனாங்களோ அதத்தாம் பண்டுனாங்கன்னு சொல்றா கண்ணு"ன்னு மவங்காரனுக்குச் சொல்லிக்குடுத்திட்டா.
சொன்னதத்தானச் சொல்லும் கிளிப்புள்ள. மக்யாநாளு நாமசாமி மானங் கப்பலேறிப்போச்சி.
அதுப்பொறவு குண்டாம்புலக்காயன் பெரிய்ய வாத்தியாரிண்ட படிக்ககுள்ள ஒருத்தக்கம், மேலுத்தெரு இச்சி மரத்தடிய ரட்சிமியூட்டு வேணம்பையன், கமலாயாவூட்டு சீனிப்பையன், பாக்கியமூட்டு சுந்தரம்பையன், பஞ்சவருணத்தூட்டு சூராம்பையன் இன்னும் ரெண்டு பசங்களோட ‘தண்ணிப்பட்ட’ வெளயாடிக்கிட்டிருந்தாம்பா.
அந்நேரம் அவுத்த இவங்கூட படிக்கிற கலாப்பிள்ளயும் அவிங்கச் சொந்தமோ, எரவலோ தெரியல ரெண்டு பொம்பளைங்க அண்டாவ எடுத்துக்கிட்டு தண்ணி மோக்க நல்லதண்னி கெணத்துக்கு போயிக்கிட்டிருந்தாங்க. அன்னிக்கிங்கிறப்பெட்டுக்கு இந்த கலாப்பிள்ள பள்ளியோடத்துக்கு வரல. குண்டாம்புலக்காயனிருந்துக்கிட்டு “ஏப்பிள்ள கலா! ஏப்பிள்ள இன்னிக்கி பள்ளியோடம் வரலைன்னு கேட்க அவளதுக்கு, “பையா, பையா, ஊருலந்து எங்க அப்பிச்சியும் அம்மாயியும் வந்திருக்காங்கடா, எங்கூட்ல உளுந்தவடச் சுட்டம். நானு வாழப்பழத்தையும் வடயயும் போட்டு நெய்யூத்தி பெசஞ்சி திண்னண்டாப்பையா’ன்னு அவப்பாவம் என்னம்மோ வூட்டுக்கு ஒரம்பற வந்த பெருமய பீத்திக்க இந்த திருட்டுக்கொறவமூட்டுது “ஓகோ வாழப்பழமும், உளுந்த வடயும் வேலப்பண்டிதான் உன்னப் பள்ளியோடத்துக்கு வர்ரத்துக்கில்லாமச் செஞ்சிப்புடுச்சா”ங்க, அவச்சொன்னாளோ, அதாருஞ்சொன்னாங்களோ தெரியல அந்த ஈனப்பானங்கெட்டதுங்க போயி அவிங்க அம்மாயிக்காரியிண்ட குசலஞ்சொல்ல, வெளயாடறமுட்டும் வெளயாண்டுப்புட்டு ஓடி வூட்டுக்கு அந்திப்பாலு வாங்க செம்மலையூட்டுக்கு போனவன வளைச்சிப்புடிச்சிக்கிட்டு அந்த வம்பேறிமுண்ட கள்ளுப்போதயில,
“ டேய் எவண்டா எம்பேத்தி வடயில வேல‌வுடுறனின்னது – அது சித்துவடடா, என்னுது இருக்கு வாடா எருமாமுட்டையாட்டமின்னு, சீலைக்குள்ள பையன வுட்டு அமுக்குறாளே சண்டாளி! பிதுமாருங்கெட்டு பையன் வர்ருவர்ருனு கத்த செம்மலப்பொண்டாட்டி பாக்கியந்தான் குறுக்கப்பூந்து
“அறியாப்பையன போட்டு இப்டி வாதிக்கிறியே ,ஏண்டி கெழுடி நீயி பொம்பளயா பேயாடி”ன்னு ரெண்டுப்பேசி விங்கிணிச்சியுட்டா பாவம்.
அதும்பொறவு ஒரு ஏழெட்டு வருசங்கழிச்சி பூமாத்தா கோயிலுக்கு பொங்க கொண்டுகிட்டு போன கலாப்பிள்ளய சாத்ரீகத்துல திருத்தாட்டமா தூக்கிக்கிட்டு போயி அழிங்சிப்பொதையில வுட்டு ரெண்டு ஈடு போட்டெறிங்சி ஹூக்குமின்னு முக்கனவக்கிட்ட பொறவுச் சொன்னானங் குண்டாம்புலக்காயன் “போடி ங்கோயா, ஒங்க பாட்டி கோயிலுட்டையேப் பாத்தவண்டி நானு”ன்னு. இப்பிடித்தான் சித்துராசு மவ ரட்சிமி, அவப்பொறந்தவ சரோசா ரெண்டுப்பேத்தயும் ஒருத்திக்கி தெரியாம இன்னோருத்திய வூடு பூந்து போனவாரந்தான் போட்டுத்தாட்டிப் பூசப்பண்டிப்புட்டு வந்தான்.
முந்தாநேத்தோ என்னமோ குட்டப்பட்டி அலமேல கூட்டிக்கிட்டுப்போயி, மலையாமூட்டுக் காட்டுல கம்பரசருக்கு பெட்டு கொட்டாயிக் கட்டிக்கிட்டிருந்திருகிறான். இந்த ரத்தனம் பிருசன் ஐயண்ணன் மாட்டுத்தாழிக்கி தண்ணி ஊத்த கெடாரத்த எடுத்து தோளுமேல வெச்சிக்கிட்டு பொடு பொடு’ன்னு அந்த கெணத்தாண்ட போயி, வெசவெசயா தோண்டிக்கவுத்த தொலக்குழ மேல நின்னு வீசுனானாம்பா.அந்நேரம்பார்த்து இந்த ரெண்டு கொலவாரிங்களும் நெற அம்மணமா நின்ன வாக்குலச் செஞ்சிக்கிட்டிருந்தாங்களாம். பாம்பு பொணயலப் பாத்தவனாட்டம் ஐயண்ணனும் பயந்து நடுங்கி உள்ற போட்ட தோண்டிக்கவுத்த “என்னமோ பொன்னு காலங்கெட்டு கெடக்கு’ன்னு வெளிய இழுத்துப்போட்டுட்டு, ‘தலயெழுத்துடா ஆண்டவனேன்னு வெறுங்கெடாரத்த எடுத்துக்கிட்டு திலும்ப போயிட்டானாம்.
அவன் ராவடி தாங்க முடியாம மயிலியுங் குருசாமியும் இந்த பையன் எலவ எத்தன நாளைக்கி எடுக்கறது? இப்பிடி தோளுமேல புடுக்க போட்டுக்கிட்டு எந்நேரமுந் சென்யேற அலையிறானே இனிமேட்டுஞ் சும்மாயிருந்தா மானம் மருவாதிய தொச்சம்வுடாம தொலைச்சிப் புடுவான்னு ஊரு ஊராப் பொண்ணு தேடனாங்க. அவங்கோளாறக் கண்டுக்கிட்டு ஒருத்தரும் பொண்ணு குடுக்க மாட்டேன்னுப்புட்டாங்க. கடைசியில அவங்கத்தயொருத்தி ஆந்தராவுல இருந்தா. அவ மவ சங்குபதிய பாத்து பேசி முடிச்சாங்க. ஊருமேஞ்ச மாட்ட மூக்கணாங்கவுறுப் போட்டு மொளக்குச்சி அடிச்சி அவுத்தயிவத்த நவறதுக்கில்லாம ஒருத்தாவுலக் கட்டி வெச்சாச்சி.
கண்ணால வேலைக்கி அலைஞ்சி பையங்காஞ்சி கருவாடாப் போயிட்டான். அவனோட சேந்து எங்களுக்குத்தான் அலைச்சலு சாஸ்தி.பொதங்கெழம நாளு கண்ணாலம். எப்பவுமே முகூர்த்தத்து அன்னிக்கி ராத்திரியே பையனையும், பிள்ளயயும் ஒரூட்ல வுடறதுதான் வாமுலு. ஆனா அவனிக்கிருந்த ரொணம் நேரஞ்செரியில்லைன்னுப்புட்டு மக்யாநாளு வெசால கெழ்மயன்னிக்கி சமாச்சாரத்த தள்ளி வெச்சுட்டாங்க. குண்டாம்புலக்காயன் பொசுக்குனுப் போயிட்டான். போன நாயம் வந்த நாயம் பேசிக்கிட்டு அவங்கவூட்ல ஓட்டமூட்ல ஓநாயி பூந்தாப்பிடி பேசிக்கிட்டு ஒரே ரவுசு.
ச்சேரி கூட்டத்துல ஏண்டாத் தடுமாறிக்கிட்டுக் கெடக்கறன்னு நானும், தம்பிராசும் அவன எங்கெயடத்துக்கு கூட்டியாந்துட்டம். வந்தவஞ் சும்மாயிருக்கனுமா வேண்டாமா? “டேய், டேய், தம்பிராசு கண்ணாலத்துக்கு எடுத்துக்கிட்டு வந்த டெக்கும், டி.வியுஞ் சும்மாதாண்டாக் கெடக்குது! ரெண்டு கேசட்டு பலானப்படம் போட்டு பாக்கலாம்டா’ன்னு ஆட்ட்ங்கட்னான். ச்சேரி புதுமாப்ள ஆசப்படறானேன்னுப்புட்டு அந்தக் கண்றோவிய விடிய,விடிய ஒக்காந்து மூணுபேரும் பாத்தம். மாப்ளைக்கி அதப் பாக்க பாக்க ஒண்ணுந்தாக்குப் பிடிக்க முடியல. அப்பிடியேச் சும்மா நெண்டறான், நெளியறான். காலுமேலக் காலத் தூக்கிப் போடறான், கட்டிப்பிடிக்கிறான் அடேயெங்கப்பா அவஞ்செஞ்ச சேட்டைக்கி அளவேயில்ல‌....
ஓங்கி ஒரு அப்பட்டக் குடுத்து “ மூடிக்கிட்டுத் தூங்குடா”ன்னு தம்பிராசு மெரட்டன அப்புறந்தான் நிம்மதியா கண்ணசர முடிஞ்சிது. விடிஞ்சி எந்திரிச்சி மாப்ளச் சீரு வாங்க சேலம் போயி பீரோ கட்லுன்னு ராரியில அள்ளிப்போட்டாந்து, எறக்கி அதது எடஞ்சேத்தி பையனச் சிங்காரிச்சி ஊட்டுக்குள்ள தள்ளிவுட்டம் ராவு மணிப்பத்து. நானும் தம்பிராசும் மானத்த பாத்து மல்லாந்துப் படுத்துக்கிட்டு குண்டாம்புலக்காயன் இன்னேரம் அத அவுத்துருப்பான் இதப் பண்டியிருப்பான்னு வெக்கங்கெட்டு போயி கோழி கூப்டற வரைக்கும் பேசிக்கிட்டிருந்துப்புட்டு எப்பத் தூங்கினமோ பொச்சியில வெயிலடிச்சப்பறந்தான் முழிச்சம். எழுந்திரிச்சி பல்லுவெளக்கிக்கிட்டே ஆயிருக்க கூள முருகனையுங் கூட்டிக்கிட்டு போலாம்னு அவங்கூட்டுக்கு போனா...........கருமாந்தரம் புடிச்ச எலவு அது கண்ணால ஊடா எலவு ஊடான்னு சந்தேவம் வந்திரிச்சி. “எம்மவளக் கொன்னுப்புட்டானே சண்டாளப் பாவி”ன்னு பொண்ணப் பெத்த ஆத்தாக்காரி ஊளைக்கரிச்சிக்கிட்டிருந்தா.
‘மாப்ளயும் பொண்ணும் எங்க’ன்னு கேட்டதுக்கு கீழ்மேட்டூரு பூமா ஆசுபத்திரிக்கி கொண்டுகிட்டுப் போயிட்டாங்கன்னு சொல்லும்பிடி எங்களுக்கு பகீர்னு ஆயிப்போச்சி. அரக்கபரக்க ரெண்டு பேருங்கெளம்பி பூமா ஆசுபத்திரிக்கி போனா வாசக்கால்ல குண்டாம்புலக்காயன் குனிஞ்சி நின்னுக்கிட்டிருந்தான். அந்த டாக்டரம்மா “ஏய்யா நீ மனுசனா மிருகமான்னு” ஏசிக்கிட்டிருந்திச்சி. எங்களப் பாத்ததும் பல்ல இளிச்சிக்கிட்டு வந்தாம் பையன். “என்றா ஆச்சி முடிச்சவிக்கி”ன்னு கேட்டா “மச்சான் இங்கிலீஸ் பைட்டுப்போட்டு மொதலுக்கு மோசம் வந்துட்டுதுடா, இப்ப பதனஞ்சாயிரம் பணமும் மூணுப்பாட்லு ரத்தமுங் கேட்கறாங்கடா”ன்னான். நாங்க தொறந்த வாய் மூடல.

செவ்வாய், 5 மே, 2009

இதுவும் கடந்து போகும்



அணிந்திருந்த புதுச்சுரிதார்
புருவச் செதுக்கல்கள்
கத்தரித்த கன்டிஷனர் சிகையலங்காரம்
அழகு நிலையத்திற்குப் பின்னான முகப்பொலிவு
தழையத் தழையச் சூடிவரும் மல்லிகைச்சரம்
கொலுசொலியுடன் கூடிய புடவைச் சரசரப்பு
குதிகாலுயர்ந்த பாதுகை
அலைபேசி சினுங்கல்களின் அழகு
ஓவியக் கையெழுத்து
மின்மடலின் சொற்பிரயோகங்கள்
புன்னகைகளின் அர்த்த அகராதி
உடல்மொழி புரிதல்கள்
மூன்று நாள் காலங்கள்
காதல் நட்பு உறவுகள்
கவிதை ஓவியம் இலக்கியம் தத்துவம்
விருப்பப் பட்டியல்கள்
Intellectual hypocrite pervert isms
இன்னும் பிற எழவுகளைப் பற்றியெல்லாம்
உரையாடிய ஒரு தருணத்திலாவது
பாவனையாகவேணும் அசௌகர்யமாக
உணர்வதாக அபிநயித்திருக்கிலாம்
புன்னகை தவிர்த்து
குறைந்தபட்சம் என்
பிறந்த நாள் பரிசுகளையாவது
நிராகரித்திருக்கலாம்
வசதியாக குற்றங்களையெல்லாம்
உன்மீதே நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
வாங்கித்தரச் சொன்ன மாத்திரைகளுக்காக
மருந்தகத்தில் நின்றிருக்கையில்

திங்கள், 4 மே, 2009

அறியாமை



அறியாமல் எய்திவிடுகிறீர்கள்
அம்புகளை
காகிதக்கத்தியென
விளையாட்டாய் செருகிவிடுகிறீர்கள்
தாகத்திற்கு குளிர்பானமாய்
அமிலம் அருந்தக்கொடுக்கிறீர்கள்
பீங்கான் வட்டில் கழிவறை பீங்கானென
மலம் பறிமாறுகிறீர்கள்
அறிவேன் அனைத்தும்
அறியாமையில் செய்யப்பட்டவைகளே
என் அறியாமையை மட்டுமேன்
அறிய மறுக்கிறீர்கள்.