வியாழன், 15 அக்டோபர், 2009

எம் . யுவன் (யுவன் சந்திரசேகர்) கவிதைகள்


பங்களிப்பு

இந்த வரியை
நான் எழுதும்போது
கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.
கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.
சில பேர் சத்தியத்துக்காக
சிலபேர் காரணமறியாமல்.
கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.
சிலபேர் சாவதற்காக
சிலபேர் கொல்லப்படுவதற்காக.
மீதிப்பேர் இடைவெளியை
நிரப்பவென்று ஏதேதேதோ
செய்து விட்டார்கள்
ஒருவருமே கவனிக்காது
கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு
என்னுடைய பங்களிப்பாய்
ஒரு பதினாறு வரிகள்.


விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்
அறையப்படாத சவப்பெட்டி
என்று என் கபாலத்தைச்
சொல்லலாம் நீங்கள்.
ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி
மொழியின் புதைமணலில்
கழுத்திறுக மூழ்கும்
முட்டாள் ஜென்மம் என்றும்.
இரவின் வைரம் விடிந்
ததும் காக்காப்பொன்னாக
மறுகும் லோபியாய்
தூண்டிமுள்ளில் மாட்டி
கூடைக்குச் சேரும் மடமீனென்று.
நழுவிப்போகும்
கணத்தின் சிலிர்ப்பை
ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்
வீணைத்தந்தி என்று.
அல்லது
இரா.சு.குப்புசாமி,
23 செக்கடித்தெரு,
மேலகரம்,
காறையூர் (வழி)
என்று.


கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.


தொலைந்தது எது

தொலைந்தது எதுவென்றே
தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.
தொலைந்ததின் ரூபம்
நிறம் மனம் எதுவும்
ஞாபகமில்லை.
மழையில் நனைந்த பறவையின்
ஈரச்சிறகாய் உதறித் துடிக்கும்
மனதுக்கு
தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை.
எனக்கோ பயமாயிருக்கிறது
தேடியது கிடைத்தபின்னும்
கிடைத்தது அறியாமல்
தேடித் தொலைப்பேனோ என்று.

( முதல் 74 கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம் )

10 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

இத்தொகுப்பை ரசித்திருக்கிறேன் யாத்ரா. பகிர்வுக்கு நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

Ashok D சொன்னது…

தேடியது கிடைத்தபின்னும்
கிடைத்தது அறியாமல்
தேடித் தொலைப்பேனோ என்று

Highlights pa..

நேசமித்ரன் சொன்னது…

அருமையான பகிர்வு நண்பா
யுவன் எங்கோ இருக்கிறார் !!!

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் சொன்னது…

அருமையான பதிவு.. பகிர்விற்கு நன்றி.. :)

anujanya சொன்னது…

வாவ், எல்லாமே அழகு. 'விலாசம்' மொழி பிடிக்கிறது.

//சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு// - Awesome.

பகிர்வுக்கு நன்றி யாத்ரா

அனுஜன்யா

velji சொன்னது…

நல்லாயிருக்குங்க..,தொடருங்கள்.காத்திருக்கிறோம்.

Kumky சொன்னது…

உடன்பாடில்லை..

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

அருமை. பகிர்விற்கு நன்றி யாத்ரா.

Karthikeyan G சொன்னது…

யுவனின் கவிதைகள் எனை அதிகம் ஈர்க்கவில்லை..
donno why. :)

விக்னேஷ்வரி சொன்னது…

கவிதைகள் அழகு.
பகிர்வுக்கு நன்றி.