புதன், 19 ஜனவரி, 2011

நரன் கவிதைகள்

பருத்திக்காடு

பருத்தி அறுவடை முடிந்த
கரிசல் வெளியில்
பாடல் காட்சியொன்றின்
படப்பிடிப்பு நடக்கிறது
பாடல் காட்சியில் நடனமாடும்
துணைநடிகையின்
கால்களுக்கிடையே பூத்திருக்கிறது
பருத்தியொன்று
காட்சியில் அவள் நடனமாடும்போது
தாள லயங்களுககு ஏற்றவாறு
அப்பருத்தியும் ஆடுகிறது
உணவு வேளை இடைவேளையின்போது
நனைந்த பருத்தியைப் பறித்துவிட்டு
வேறொன்றைப் பூக்கச் செய்கிறாள்
காலிடையில்

படப்பிடிப்பை முடித்துச் செல்லும் அவளோடு
பெயர்ந்து செல்கிறது
ஒரு பருத்திக்காடு


கானகம்

புத்தகத்தின்
73ம் பக்கம்
கிழிக்கப்பட்டிருக்கிறது
அதில் தான்
தம் கரும்புரவியை
மேய்ந்து வரும்படிக்கு
அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன்
கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்
வாசகன்
குதிரையும் வீரனும் ஒருவரையொருவர்
தேடி அலைகின்றனர்
கிழிந்து விழுந்த கானகத்தில்

உப்பளம்

உப்பளத்தில் அழுதுகொண்டிருந்தாள்
ஒருவன் அவள் அழுகையைப்
பிரித்து பிரித்து
பாத்தி கட்டிக்கொண்டிருந்தான்
சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்தன
அவள் அழுகையை
வெவ்வேறு ஊர்களுக்கு
ஏற்றிச் செல்லவிருக்கும்
லாரிகள் ...
லாரிகள் ...

முதலை

நீர்த்தாவரத்தின்
இலையின் அடியில் ஊரும்
நீர்ப்புழுவை விழுங்கும் மீனைச்
சற்றைக்கெல்லாம் கவ்விவிட்டது
அக்கொக்கு
கொக்கின் தொண்டைக்குள்
மீன் நீந்தி இறங்கிகொண்டிருக்கையில்
கொக்கின் கால்களைப்
பற்றி இழுக்கிறது ஏரி முதலையொன்று
ஒரு குறியில்
ஒரு பாய்ச்சலில்
ஒரு வாயில்
ஊர்வன நீந்துவன பறப்பன என
அம்முதலை மூன்று இரையை
கவ்விக்கொண்டிருக்கிறது
இப்போது

நிலைக்கண்ணாடி

எதிர்வீட்டில் நிலைக்கதவின் நேர் எதிர்புறம்
மாட்டிவைத்திருக்கும்
மிகப்பெரிய நிலைக்கண்ணாடியில்
தினமும் கதவைத் திறந்துகொண்டு
கண்ணாடிக்குள் சென்று மறைந்துவிடுகின்றனர்
யாரேனும் அழைப்புமணியை அழுத்தும்போது
கண்ணாடியைத் திறந்துகொண்டு
பார்க்கிறார்கள்
பின் மீண்டும் கண்ணாடிக்குள் சென்று
மறைந்துவிடுகிறார்க்ள்
ஒரு நாள் அவ்வீட்டைக் காலிசெய்து
சாமான்களையெல்லாம் எடுத்துப்போனார்கள்
வாகனமொன்றில் ஏற்றி.
மிகப் பெரிய அந்நிலைக்கண்ணாடியைப் பிடித்தபடி
அமர்ந்திருந்தான் வேலையாள்.
மெல்ல நகரும் வாகனத்தில் கண்ணாடிக்குள் சென்று
மறைந்துகொண்டிருந்தன
அவ்வீதியிலுள்ள வீடுகள் எல்லாம்

தார்ச்சாலைகள் வெண்நிறக்கோடுகள்

வனங்களின் நடுவே
போடப்பட்ட தார்ச்சாலைகள்
அவற்றின் நடுவே
வலப்புறத்தையும்
இடப்புறத்தையும்
பிரித்துச் செல்லும்
வெண்நிறக் கோடுகள்
எப்போதும் அவற்றின் மேலேறி நடந்து செல்கின்றன
சில வரிக்குதிரைகள்
வரிக்குதிரைகளின் மேலேறிச் செல்கின்றன சில
தார்ச்சாலைகள் சில வெண்நிறக் கோடுகள்



அபூர்வ நிகழ்வுகளின் நொடிப்பொழுதை வாழ்வின் பெரும்பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிறுத்துகின்றன இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைப்பொழுது சில சமயங்களில் தியான மனநிலையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன. ( பின்னட்டையில் )



உப்புநீர் முதலை
காலச்சுவடு பதிப்பகம்

புதன், 12 ஜனவரி, 2011

கலாப்ரியா கவிதைகள்

அவளின் பார்வைகள்

காயங்களுடன்
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும்
காக்கைகள்



தொலைவில் புணரும்
தண்டவாளங்கள்
அருகில் போனதும்
விலகிப் போயின



கைகள் காதலித்த
கண்ணாடி தம்ளர்
காதலை ஏற்காதென்
காலடியில்
நொறுங்கிச் சிதறியது
உடைந்த துகள்கள்
காலில் குத்தி
உறவாகி விட்டன
என் ரத்தத்தோடு



எச்சியிலைத் தொட்டியில்
ஏறிவிழும்
தெருநாயின்
லாவகம் எனக்கொரு
கவிதை தரப்பார்க்கிறது



கரித்துண்டொன்றை
தரையில் பைத்தியக்
கிறுக்கலாய்ப் படம்
போட்டுச் சாகடிக்கிறேன்
எரித்துக்கொள்வதைவிட இது
எவ்வளவோ மேல்



கூட்டிலிருந்து
தவறிவிழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை



அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை



என்ன செய்தும்
இவன் காலடியில்
தலைவைத்துப் பணிய
மறுக்கிறது நிழல்
இவனின் நிழல்



தூண்டில் மீனின்
துடிப்புகளைப் பாடுவதற்காய்
மட்டுமே நான்
ஆற்றோரம் காத்திருக்கிறேன்
அரை நிர்வாணிகளுக்காயில்லை



ஒப்பனைகளை
அழித்துவிட்டு
என்னுடைய
நாடகத்தை
நானே
என்று பார்க்க



ஒரு
தென்னம்பிள்ளையின்
கீழ்
சில கனகாம்பரம்
ஒரு செம்பருத்திச் செடி
எனத் தோட்டம் வளர்த்து
தண்ணீர் பாய்ச்சுகிற
தம்பியின்
மத்யான நிழல் மகிழ்ச்சிகளை
உன்னால்
அவனின் பரிமாணப் பிரக்ஞை
வெளித் தெரிய
கவிதையாக்க முடிகிறதா



எப்படியென்று
தெரியவில்லை
தாமரையிலையில்
நரகல்



அத்தனை
தூரம்
கடந்து
பார்க்க
வந்திறங்கினேன்
கூப்பிடும் தூரத்தில்
எதிர்த்திசையில்
பஸ் ஏறப்போகிறான்
கூப்பிடவில்லை



என் தலைக்குள் வலி

“தொடந்து மழை நாட்களில்
தொழுவம் விட்டகல
மறந்த பன்றிகளும்
காய்ந்து
மக்கிப்
போக முடியாத
மந்தை நரகல்களும்”
என்றொரு படிமம்
திணிந்து கொண்டு




கலாப்ரியா கவிதைகளைத் தேடித்தேடி வனம்புகுதல் தொகுப்பு மட்டுமே கிடைந்திருந்தது. அவரின் பழைய கவிதைத்தொகுப்புகள் கிடைக்காதிருந்தது. அவரின் மிகச்சில ஆரம்பகால கவிதைகளை அவரின் வலைத்தளத்தில் வாசித்திருந்தேன், அவரின் மொத்த கவிதைகளையும் வாசிக்க மிகுந்த ஆவலாயிருந்தது. தற்போது சந்தியா பதிப்பகத்தில் கலாப்ரியா கவிதைகள் மொத்த தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. இன்னும் முழுதாக வாசிக்கவில்லை, வாசித்தவரையில், சில கவிதைகளை பகிர்ந்திருக்கிறேன்

கலாப்ரியா பற்றி விக்ரமாதித்யன்

எழுபதுகளின் கவிஞரான கலாப்ரியாவின் கவிக்குரல் முழுக்கவும் தனியான ஒன்று, அன்றும் சரி, இன்றும் சரி, நவீன தமிழ்க் கவிதையிலேயே தனித்த ஒரு விசேஷமான வடிவம், நெகிழ்ச்சிகூடிய ஒரு அருமையான கட்டமைப்பு, ஆகச்சிறந்த ஒரு தனிக் கவிதைமொழி, அழகுபட்ட ஒரு கவிதைகூறல் ( பின்நாள்களில் இது கதைகூறல் போல இருக்கும் ) செய்நேர்த்தி, காட்சிகளாய் விரியும் உலகம் இவையெல்லாம் ஒன்று கூடித் திரண்டு சமைந்த புதுக்கவிதைகள் அவருடையவை, இந்த பண்புயல்புகளுககெல்லாம் மேலாய்ச் சொல்லவேண்டிய ஒரு பண்பியல்பு, மனவெழுச்சி கொண்ட கவிதைகள் அவை என்பது. எவ்வளவு பெரிய கவிதைக் கூட்டத்திலும் கலாப்ரியா கவிதையைத் தனியே அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதிலிருந்தே அருடைய தனித்தன்மையை கவி ஆளுமையைத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்க் கவிதை சரித்திரத்திலேயே கலாப்ரியா கவிதைகள் தனியானவை, இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க் கவிதையிலேயே காணக்கிடைக்காத உணர்வெழுச்சியும் துடியும் கட்டவிழ்ந்த மனவெளிப்பாடும் கொண்ட அபூர்வமான கவிதைகள், முற்றிலும மனத்தடைகளை உதிர்த்து உதறியெழந்து நிற்கும கவிதைகள். கலாப்ரியாவின் கவித்துவம் ஒப்பிட இயலாதது என்பது மட்டுமில்லை. ஒரு இனத்தில் / மொழியில் எப்பொழுதோ நிகழ்க்கூடியதுமாகும்.

நவீன கவிதை என்று மட்டுமில்லை, தமிழ்க் கவிதையிலேயே பிரமிள், நகுலன், ஞானக்கூத்தன், தேவதேவன், ஆகியோரின் பங்களிப்பும் ஸ்தானமும் எந்த அளவுக்கு முக்கியமானதும் நிச்சயமானதுமோ அதே அளவுக்குக் கலாப்ரியாவின் இடமும் கொடையும் உறுதியானதும் முதன்மையானதும் ஆகும், இந்த ஐந்து பேரையும் எந்தத் தயக்கமுமில்லாமல் மகாகவிகளாக வரித்துக் கொள்ளலாம். காலம் இப்படியே இவர்களை ஏற்றுக் கொள்ளும்.

கலாப்ரியா கவிதைகள்
சந்தியா பதிப்பகம்

புதன், 5 ஜனவரி, 2011

மயிரு கவிதைத்தொகுப்பு வெளியீட்டன்று " கவிஞர் ராஜசுந்தரராஜன் அவர்களின் உரை "

APRIL is the cruelest month, breeding
Lilacs out of the dead land, mixing
Memory and desire, stirring
Dull roots with spring rain.

இவை டி.எஸ்.எலியட்டின் The Waste Land கவிதையின் தொடக்க அடிகள்.


//கூட்டி விடவிடப்
படியும் புழுதியாய்
வாசல் கோலத்தின் பின்
அழிந்தும் அழியாத
நேற்றையக் கோலமாய்

புலம் பெயர்ந்த
சக ஆட்டக்காரிகளின்
பட்டப் பெயர்கள் நிழலாட

அவர்கள் இறங்கவேண்டிய
நிறுத்தத்தில் அதன் தாய்
அழ அழ அழைத்துச்சென்ற குரல்
இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது

தெய்வானைக்கு ஒரு மகன் இரண்டு மகளாம்
அடிக்கடி அவள் பேச்சில்
என் பெயர் வருமாம்.

அகவிழுதுகள் பிடித்தாடுகின்றன குரங்குகள்

காலத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாய்ப்
புரட்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

அறுபட்ட கோழியின்
தூவலாய் மிதக்கின்றன
கைவிடப்பட்ட பிரியங்கள்

மலக் கழிவென எஞ்சியிருக்கும் நினைவுகள்
இன்னும் இன்னபிற என
சூன்யக்காரனின் மூலப்பொருட்களையொத்த
சேகரங்களனைத்தையும்

நீர்த்திரை விழிகளுடன்
தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்
காய்ந்து உதிர்ந்த இலைச்
சருகுகளை விலக்கிப்
பார்க்கிறது காற்றுடன் மழை
கல்லறை எழுத்துகளை

கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாம்

இன்னும் இன்னும் எங்கெங்கிருந்தோ
முளைத்துக்கொண்டே இருக்கின்றன
அழிக்க அழிக்க சுவடுகள்

அகத்தின் அப்புறப்படுத்தவியலாத
சேகரங்கள் அழுகி நாறுகின்றன
உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதில்
தொடர்ந்த தோல்வி, இயலாமை, கழிவிரக்கம்

நினைவு பொல்லாதது//

இவை கவிஞர் யாத்ராவின் வரிகள். ஒற்றையொரு கவிதையொன்றின் வரிகள் அல்ல. இவரது ‘மயிரு’ என்னும் நூலில் உள்ள கவிதைகள் பலவற்றிலும் அங்கங்கே அழுந்திக் கிடப்பவை. நினைவின் நோவுகண்டு பிறந்தனவாக இருக்கின்றன யாத்ராவின் பெரும்பான்மையான கவிதைகள்.

இந் நூல் வருவதற்கு முன்பு ‘எப்படியிருக்கீங்க’ என்கிற கவிதை ஒன்றை மட்டுமே வாசித்திருந்தேன். அதில் கவிஞர் பயன்படுத்தி இருந்த விவரனைகள் என்னை மிகவும் பாதித்திருந்தன.

கவிதைக்கு உரிய கச்சாப் பொருள் அல்ல விவரணைகள். அது நாவலுக்கு உரியது. என்றாலும் கவிதையில் விவரணைகளைக் கொண்டுவந்த கவிஞர்களும் இருக்கிறார்கள். கலாப்ரியா, கல்யாண்ஜி முதலியோர். ஆனால் விவரணைகளைச் சொல்முறையாக அல்லாமல் உத்தியாகப் பயன்படுத்துகிற யாத்ரா அதுவழி நம் உள்ளத்தை அறுக்கிறார். எளிய கவிதைகளும் இவ் விவரணை வழி வேறு தளத்துக்கு உயரவும் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, //வள்ளி புதுக்கோட்டையில்// என்று தொடங்கி, பெயர் அறிந்த ஓரொருத்தியும் ஓரோர் ஊரில் இருப்பதாக விவரித்து, பெயர் அறியாத பெண்களைப் பற்றியும் கவலைப் பட்டு, //பார்கவி எந்த ஊருக்குப் போவாளோ?// என்று முடிகிற கவிதை, இந்தியப் பெண்களின் லாட்டரிச்சீட்டு நிலைமையை உணர்த்தி நம்மை அவமானத்துக்கு உள்ளாக்குகிறது.

எழுதியவர் எழுதிவைத்த படி அல்ல, கவிதை அதை வாசிக்கிறவர் புரிந்துகொள்கிற அளவில்தான் பரிமாணம் கொள்கிறது. ‘எப்படியிருக்கீங்க’, ‘இருப்பு’ முதலிய கவிதைகளை வாசித்த அளவில் யாருக்கும் பாராட்டத் தோன்றும். ஆனால், எளிமை வெளிப்பாட்டின் காரணமாக, அவ்வளவு முக்கியமில்லை என்று தள்ளிவிடக் கூடிய கவிதைகளும் உண்டு. அவற்றில் இரண்டு கவிதைகளை எடுத்துப் பேசி, ஏனைய கவிதைகளும் சாதாரணமானவை அல்ல என்று சுட்ட விரும்புகிறேன்.

தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா

இந்த எளிய கவிதையில், //தண்ணீரில்// என்னும் முதல் அடியை வாசித்த அளவில் தண்ணீருடைய அத்தனை குணங்களும் என் மண்டைக்குள் புரள்கின்றன. எந்தத் தண்ணீரில் என்றொரு குறுக்கு வினா எழுந்து, அந்தத் தண்ணீரைப் பற்றியும் சில அடிப்படை உண்மைகள் கணக்கில் வருகின்றன. அப்புறம், //தன் பிம்பம்// என்பது தனது சாயை என்றும் the image about one’s own self என்றும் தோன்றுகிறது. தண்ணீரில் பிரதிபலிக்கிற பிம்பம் என்றாலும் சரி, ‘தண்ணி’யடித்த மப்பில் தன்னைப் பற்றி உண்டாகிற தோற்றம் என்று கொண்டாலும் சரி, it’s an image of uncertainity. இப்பொழுது, //தழுவுதல்//. உறுதிப்பாடற்ற அந்தப் படிமத்தைத் தழுவுதல் அல்லது வரித்துக் கொள்ளுதல், இறுதி அடியில் வினவப் படுவது போல, //தற்கொலையா//? Is that a suicide? தண்ணீர்ப் பரப்பை ஈரத்தோடு கூடிய ஒரு stratum எனக் கொண்டால் அது அன்பின் குறியீடு ஆகிறது. அன்பில் பிரதிபலிக்கும் பிம்பத்தைத் தழுவுதல் தற்கொலை ஆகுமா? இதற்கிடையில் நாம் அறிந்த நார்சிசஸ், ஆத்மாநாம் என இவர்களும் நினைவுக்கு வந்தால்... இது அத்துணை சாதாரணமானதொரு கவிதையா?

//மன்னிக்கவும்
இன்றைக்கு
கவிதையேதுமில்லை
உங்களை வெறுமனே அனுப்புகிறேன்//

என்கிறார் இன்னொரு கவிதையில். ‘எதுவுமே நிகழவில்லை இன்று’ என்னும் தலைப்பின் கீழ் வருகின்றன இந்த வரிகள்:

//புன்னகை ஒட்டிய முகங்கள்
நெகிழவைத்த மேலாளர் நண்பர்கள்
காத்திருக்க வைக்காமல்
வந்துவிட்ட இவள்
காலியாய் இருந்த பேருந்து
ஆழ்ந்து யோசிக்கிறேன்
ஒரு அவமானம்
ஒரேயொரு ஏமாற்றம்
வன்சொல்
சாலை கடக்கையில் குறுக்கிட்ட
லாரிக்காரன் கூட
சாவுகிராக்கியெனவில்லை இன்று
இது ஒரு நாளா//

இப்படி எதுவுமே நிகழவில்லை என்று சொல்லிவிட்டு, //மன்னிக்கவும்/ இன்றைக்கு/ கவிதையேதுமில்லை/ உங்களை வெறுமனே அனுப்புகிறேன்// என்கிறார். கவிதை எழுதுவதற்கு ஏதாவது ஏடாகூடமாக நிகழ்ந்தாக வேண்டும் என்கிற கோமாளித்தனத்துக்கு ஒரு நக்கல் எதிர்வினையாக இது எனக்குப் படுகிறது., இயல்பான நேர்முறையான நிகழ்வே கவிதை என்றும் சுட்டுவதாக.

இப்படி யாத்ராவின் கவிதைகள் அத்தனையும், தமக்கென்று தேர்ந்துகொண்ட சொற்களால், பல்பொருட் தன்மை கூடியனவாக இருக்கின்றன. இது காரணம் இவை நிதானமாக வாசித்து உள்ளுணர வேண்டியவையாகவும் இருக்கின்றன. வலைத்தளத்தில் இந்தக் கவிதைகள் வாசிக்கக் கிடைக்கலாம். ஆனால் அவற்றைத் தேடிப்பிடித்து வாசிக்கிற மனநிலையும் சந்தர்ப்பமும் நமக்கு எண்ணியமட்டில் வந்துகூடி அமைவதில்லை. இப்படிப் புத்தகவடிவில் கிட்டுகையில், ஒரு நற்காலி அல்லது ஒரு தலையணையின் ஓய்வுப் பொழுதில் வாசிக்க முடிகிறது. இதற்காக இவற்றைப் புத்தகம் ஆக்கித் தந்த அகநாழிகைப் பதிப்பகத்தாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இனி நான் தொடங்கிய இடத்துக்கு வருகிறேன்:

//நினைவு பொல்லாதது//

//உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதில்
தொடர்ந்த தோல்வி, இயலாமை, கழிவிரக்கம்//

எனது ‘முகவீதி’ தொகுப்பில் ஒரு கவிதை இருக்கிறது. என் கல்யாணத்துக்கு முன்பு எழுதியது. என்னைக் கல்யாணம் செய்து, சிறிது காலம் வாழ்ந்து பிறகு என்னை உதற நேர்ந்த ஒரு கட்டத்தில் என் மனைவி, “நீங்கள் எழுதிய இந்தக் கவிதை எவ்வளவு சத்தியமாது!” என்று அதிலிருந்து சில வரிகளை ஞாபகப் படுத்திச் சொன்னாள்.

//பூத்த போது அடடா அழகு என்றேன்
காய்த்தபோது காலில் குத்தியது நெருஞ்சி

என்ன தந்தாய் நீ எனக்கு
சில நரைமுடிகளைத் தவிர?

இருக்கிறதா இன்னும் நினைவுகளில் ஈரம்?

மறப்பதற்கில்லை
நெருஞ்சிப் பரப்பின் மஞ்சள் வசீகரம்//

நான் கெட்டழிந்த கதை ‘தமிழினி’ வெளியீடாக வரும் எனது ‘நாடோடித் தடம்’ என்னும் நூலைப் பிறப்பித்தவள் இவள் என்று என் ஒரு காலத்திய மனைவியை, அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறேன்.

யாத்ராவின் கவிதைகள் நெடுகிலும் ‘இவள்’ என்றொரு குணவார்ப்பு வருகிறது. அந்த ‘இவள்’ இல்லையென்றால் இத்துணை செறிவான கவிதைகளை இவர் எழுதி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அந்த ‘இவள்’ நமக்குள் ஒரு க்ரியாசக்தியாக மாறி நின்று செயல்படவே தன்னைக் காவு கொடுத்தாள் என்றும் நம்புகிறேன்.

‘உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதற்கு’ அந்த இவளுடைய இருப்பு இன்றியமையாதது அல்லவா?

//நேசிக்கப் படுகிறேன்
மூடநம்பிக்கை//

என்றோர் இரு வரிக் கவிதையும் இந் நூலில் உண்டல்லவா? அது எவ்வளவு சத்தியமானது! ‘நேசிக்கிறேன்’ என்றால், அது நம்மைச் சார்ந்தது; நம் அறிவுக்குப் படுவது. ‘நேசிக்கப் படுகிறேன்’ என்றால் அது நம்பிக்கைதானே? மூடநம்பிக்கை என்றும் கொள்ளலாம். அப்படி, மூடநம்பிக்கை இருந்தால்தானே முக்தியை அடைய முடியும்? முக்தி என்பது பின் எதிலிருந்து?

இந்த உள்வெளியற்ற நானை நிமாணிப்பதற்கு, ஓரிடத்தில், யாத்ராவே விடை கண்டுபிடித்துத் தந்திருக்கிறார்:

//இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சாகடித்தேன்
அந்த நாயை//

//இருசக்கர வாகனத்தால் ஏறி// அல்ல, //இரு சக்கர வாகனத்தில் ஏற்றி//! அன்பை விடத் துல்லியமான கொலைக் கருவி வேறு உண்டா?

அன்பர்களே, ‘இரு சக்கர வாகனம்’ என்றால் என்ன? ‘நாய்’ என்றால் என்ன? ‘அனுமனவதாரம்’ என்றால் என்ன? ‘தாவணிப் பெண்’ என்றால் என்ன? ‘சிலுவை’ என்றால் என்ன? என்று நான் பேசிக்கொண்டே போக முடியும். இந்த உள்ளுறைகள் எல்லாம் வந்து வாய்க்கிற பொருத்தமான சொற்களைத் தேர்ந்து செய்யப்பட்ட கவிதைகள் இவை என்பது கிடக்க, ஒரு கவிதையில் வரும் வரிகளை எந்த இடத்தில் முடிக்க வேண்டும் என்னும் கலை அறியவும் இந்த நூலை வாங்கிக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று பரிந்துரைக்கிறேன்.


- ராஜசுந்தரராஜன்


ரொம்ப நன்றி சார்