வியாழன், 17 ஜூன், 2010

அபி கவிதைகள்

உள்பாடு


இந்தப் பழக்கம்
விட்டுவிடு

எங்காயினும்
வானிலேனும் மண்ணிலேனும்
புள்ளியொன்று கிடக்க்க் கண்டால்
சுற்றிச் சுற்றி
வட்டங்கள் வரைவதும்
சுழன்று சுழன்று
கோலங்கள் வரைவதும்

குறுக்கும் நெடுக்குமாய்ப்
புள்ளியின் வழியே
பரபரத்துத் திரிவதும்------

இந்தப் பழக்கம் விட்டுவிடு

முடிந்தால்

புள்ளியைத் தொட்டுத்தடவி
அதன் முடிதிறந்து
உள்நுழைந்து

விடு


அதுதான் சரி

எல்லாம் தெரிவதும்
ஏதும் அறியாததும்
ஒன்றேதானென்று
தெருவிலொரு பேச்சு
காதில் விழுந்த்து

எதும் அறியாமல்
இருப்பதுவே சரி
என்று தோன்றிற்று

இருந்தால்
இருப்பதை அறியாமல்
இருப்பது
எப்படி

அதனால்
இல்லாதிருப்பதே
சரியென்று பட்டது

இல்லாதிருந்தால்
ஒருவசதி
தெருப்பக்கம்
போகவேண்டியதில்லை
இல்லாதிருப்பதும்
இருப்பதும் ஒன்றே
என்றொரு பேச்சைக்
கேட்டுக் குழம்பும்
குழப்பம் இல்லை



அவர்

கொஞ்சம் கொஞ்சமாக
விலகி
விலகலில் நீடித்தாயெனில்
நீ வாழ்கிறாய்
என்றார்

முடிந்து போனதாய்ப்
போக்குக் காட்டும்
கணங்களில்
ஒட்டிக் கொண்டு சிதறினாய்
உன் சாவைச் சரிபார்த்துக் கொள் என்றார்

பின்னும்
நீ இருப்பதாக உணர்வது வழக்கமெனில்
வாழ்க்கை
எட்டி நின்று உன்னை
முறைப்பதை
சாவின் சஞ்சலத்தை
ஒருபோதும் நீ காணப் போவதில்லை
என்றார்

சொற்களின் கும்மாளத்திலும்
எண்ணங்களின் ஆடம்பரத்திலும்
உன் நிகழ் அனுபவம்
உயிர்ப்படங்கியது
அறியாய்

அறியாய் மேலும்
நிகழ்வில் நின்றே
நிகழ்வினின்றும் விலகும்
நெறி எது என்பதை

கூடவே நிகழ்ந்து வா
கொஞ்ச நேரத்தில் நீ
நிகழ்வுடன் அருகே
இணைகோட்டில் ஓடுவாய்

ஆச்சரியமாகவே உன் இருத்தல்
உனைவிட்டு விலகி உன்னுடன்
ஓடிவரக் காண்பாய்

என்றார்

இன்னும் சொன்னார்


கோடு

கோடு வரைவதெனின்
சரி
வரைந்து கொள்

இப்புறம் அப்புறம்
எதையேனும் ஒன்றை
எடுத்துக்கொள்

எடுத்துக் கொள்ளாதது
எதிர்ப்புறம் என்பாய்

இப்போதைக்கு
அப்படியே வைத்துக்கொள்

முதலிலேயே
மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்

மாறி மாறி
எதிர்ப்புறக் குழப்பம்

இருபுறமும் உனது ?
இருபுறமும் எதிர்ப்புறம் ?

எதுவும்
எவ்வாறும்
இல்லை என்று
சலிப்பாய்

களைத்து உறங்கும் உலகம்

ஆரம்பத்திலேயே
முடிவைத் தடவியெடுக்க
நின்றாய்

இதுஎன்றோ அதுஎன்றோ
இரண்டும் இல்லையென்றோ
வருகிறது
உன்முடிவு

அதனால்
கோடு வரைவதெனின்
வரைந்து கொள்



இடைவெளிகள்

யாரும் கவனியாதிருந்தபோது
இடைவெளிகள்
விழித்துக்கொண்டு
விரிவடைந்தன

நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும்
அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும்
உனக்கும் எனக்கும்
விநாடிக்கும் விநாடிக்கும்
இடைவெளிக்கும் இடைவெளிக்கும்.....
என்று

இடைவெளிகள் விரிவடைந்தன

வெறியூறி வியாபித்தன

வியாபகத்தின் உச்சத்தில்
மற்றெல்லாம் சுருங்கிப்போயின

ஆங்காங்கிருந்து
இடைவெளிகள் ஒருங்கு திரண்டு
அண்டவட்டமாயின

வட்டத்தின் விளிம்பைச் சுற்றிலும்
சிற்றெரும்புகளாய்
வாழ்க்கைக் துகள்

வட்டத்தின் சுழற்சியில்
நடுவே தோன்றி வளர்ந்த்து
பேரொளி

அதற்குப் பேச்சு வரவில்லை
சைகைகளும் இல்லை
எனினும் அதனிடம்
அடக்கமாய் வீற்றிருந்தது
நோக்கமற்று ஒரு
மகத்துவம்



எதன் முடிவிலும்

நினைக்க நினைக்க
நா ஊறிற்று
பறிக்கப் போகையில்

ஓ அதற்கே எவ்வளவு முயற்சி
இரண்டு சிறகுகள்
இங்கே கொண்டுவந்துவிட
யார்யாரோ கொடுத்த
கண்களைக் கொண்டு வழிதேடி
இடையிடையே காணாமல்போய்
என்னை நானே
கண்டுபிடித்துக் கொண்டு
கடைசியில்
மங்கலான ஒரு வழியில்
நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து
முண்டுமுண்டாய்ச்
சுளுக்கிக் கொண்டு நிற்கும்
அந்த மரத்தில் என்னை ஏற்றி
அதை பறிக்கச் செய்து

ஏறிய நானும்
கீழ்நின்ற நானும்
நாவில் வைத்த போது
குடலைக் கசக்கும் கசப்பு

கீழே எறிந்துவிட்டு
மறுபடி நினைத்தால்
நினைக்க நினைக்க
நா ஊறுகிறது

வியாழன், 10 ஜூன், 2010

உமா மகேஸ்வரி கவிதைகள்

பூக்காத செடிகள்

ஏதாவது பேசு
துவைக்காத சட்டை, சுவைக்காத குழம்பு
இவற்றோடு இன்னும்
இலக்கியம் சினிமா என்றில்லாவிடினும்
இன்று கண்ட புதியமுகம், எதிர்பாராத
சம்பவம், வாகன நகர்த்தலில்
வடிவழகு கெடாத கோலம்
வந்து போன வியாபாரத் தந்திரம்
பூக்காத செடியின் யோசனை
புதிதான புத்தக வாசனை என்று
சொல்லேன் எதையாவது.
தினங்களின் கனத்தில்
நசுங்கிய ஞாபகங்களுக்கு
மூச்சு தா
ஜன்னல் வெளியின் பொன்தூசியையும்
நீர்க்கிண்ணத்திலாடும் நிலவையும்
அள்ள முனையும் எனை நோக்கி
முறுவல் செய்
அல்லது முட்டாளென்று சொல்
அடிவயிற்றுக் கருவின் அசைவை
அறிவிக்க உன் கை பற்றிப் பதிந்த போது
அவசரமாய் உதறிப் போனாயே
அதற்கு வருத்தம் தெரிவி உடனடியாக.
அவிர்த்து எறியுமுன்
புடவையடுக்குள் புதைந்த பூக்களையாவது
ரசித்துக் கவனி.
அடுத்த முறை எனை நீ
அழுத்தும் இரவுகளில்
வெளியிலசையும் தென்னையை
வெறிப்பதையாவது
விசாரி ஏன் என்று எப்போதாவது.

•••••

ஒன்றுமில்லை நான் தீர்ந்தேன்
கிடக்கட்டும் இந்த பிரச்சனைகள்
உறங்க வேண்டும் நான்
உரத்த பேச்சு
முடிவற்ற விவாதங்கள்
அலுத்த ஆலோசனைகள்
நைந்து விழுந்த இந்நாள்.
நடமாற்றங்களற்ற நதியொன்றின் கரையில்
என்னை இனியாவது
தனியாகத் தூங்கவிடு
வெல்வெட் மெத்தைகளில்
விரிகின்ற வலைகளில்
வியர்த்து சிறு பூச்சியானேன்.
பயணத்தின் திசை
தெரியப் பிரியமில்லை
இறப்பின் வரப்புகளில்
இன்றும் காத்தருந்த நம்பிக்கை
நகர்ந்து போவதை
நடுங்கிப் பார்க்கிறேன்.
கேள்விகளை சிக்கல்களை
தீராத குழப்பங்களைப்
பொட்டலமாக்கி
எடுத்துப் போ உன்னோடு.
நதிக்கரையில் புதர்மடியில்
நான்மட்டும் தனியாகத்
தூங்கவிடு.

••••••••

குழந்தைக்கால் நுனிகளென
ஆரம்ப மழைத்தடங்கள் என்
கார்த்திகைக் கோலத்தில்
நேர்த்தி தான் பார்ப்பதற்கு;
தீபங்களுக்குப் பதிலாக நீர்ச்சுடர்கள்
வலுத்துப் பெருத்ததில்
வர்ணப்பொடி கரைசல்
திரவ வானவில்லாக.
நின்றதும் மறுபடி வரைதல்.
முடித்துத் திரும்புமுன்
வெடித்துச் சாடும் மழையின் ஆக்கேராஷம்.
கனவின் சிதைவைக்
கண்ணுற்றேன் இம்முறை

•••••••••••••

சொல்லாதது

உரையாடல்களின் முற்றுப்புள்ளி
சுழன்று விரிகிறது வளைகிறது
சொல்லமற் போன ஏதோ ஒன்றின்
கேள்விக்குறியாக.
சொல்வதற்கான திட்டங்களோ
சொல்லாததற்குரிய சகஜமின்மையோ
இல்லை நம்மிடையே
இருந்தாலும்
இரைச்சல்கள் நெரிசல்களிடையே
நசுங்கி உப்பியபடியிருந்தது நாம்
பகிராத எதுவோ

பிரிவில் கையசைத்த பின்பும்
தேடிக் கொள்கிறேன் என்னுள்
ஆடையில் ஒட்டிய உதிராத புல்லென
அது எதுவென்று

•••••••••••••

நேற்று என்னுடையதாக இல்லை
என் சிதறிய அழுகை
எனினும் ஆராய்ந்தேன்
வேகமான உரையாடல்களில்
வெடித்து ஒரு கீறல்
உருவாகும் விதம் குறித்து.
கண்ணாடியில் போலவோ
காய்ந்த நிலத்தில் போலவோ
உலர்ந்த நதியில் போலவோ........

•••••••••••••

மேகம் கருத்திருக்கிறது
மழை வருமென்று
சொல்லிவிட்டேன் தெரியாத்தனமாய்
குழந்தை கேட்கிறாள்
எப்போது மழை வரும் ?
அங்கே கிளம்பினால்
இங்கே வந்துவிடுமென்று
சமாளித்தேன். அடுத்த வினா
எப்போது அங்கே கிளம்பும் ?
‘வரும் போது வரட்டும்’ என
மழுப்பி நகர முனைகையில்
குறுக்கிடும் மற்றொன்று.
‘வரும் போது எப்போ வரும்’
‘வரும் பொழுது, வரும் போது
தானே வருமென்றால்
அவளுக்குப் புரியவில்லை.
ஒருவேளை எப்படியோ
புரிந்ததோ என்னவோ.
விளையாட்டெல்லாம் துறந்து,
வாசல் வரைவில் தேய்படும் கன்னத்தோடு,
வரும் பொழுதிற்காக அவள்
காத்துக்கிடப்பது
என்னை வருத்துகிறது ஏதோ மாதிரியாய்.
நானும் அவளோடு
நின்று காத்திருத்தலன்றி
தெரியவில்லை வழியொன்றும்.

•••••••••••••••

நம்
மழலை பதிந்த ஒலிநாடாக்கள்
அழிபடவேயில்லை
சிறுமிப் பிராயத்தின் கூடாரங்கள்
திறந்தேயிருக்கின்றன.
மரச்செப்புகளில் வேகிற சாதம்
ஆடுகுதிரையில் என் முதுகைக்
கட்டிக் கொண்டிருக்கும் நீ.
மரணச் சுவடுகளை அனுமதிக்காது
நம் குழந்தைமையின் வெளி
அழிவல்ல உன் இறப்பில் நேர்ந்தது
அணுகிவிடக் கூடியதான
சிறு தொலைவும் பிரிவும்

••••••••••••••••••••

ஏனித்தக் குருவியை
இன்னும் காணோம்
எனக்கு மகா செல்லம் அது
பழுப்புக் கலரில் அழுக்குக் குஞ்சு.
சின்ன இறக்கைகளில்
கறுப்புப்கோடு தெரியும்.
கண் மட்டும்
கண்ணாடிக்கல் மாதிரி
வெளிச்சத் துறுதுறுக்கும்.
உரிமையாய் கூடத்தின்
உள்ளே நுழைந்து நடக்கும்.
புத்தகம் ஒதுக்கி
அதையே கவனிக்கும் என்னை
அலட்சியப்படுத்தும்.
மாடி வெயிலில்
வேட்டியில் காயும்
வடகத்தை அலகால் நெம்புதல்,
தோல் உரிக்காது
நெல்லை விழுங்குதல்,
துணிக்கொடியில் கால் பற்றிக்
காற்று வாங்குதல்,
அறைக் கண்ணாடியில்
தன்னைத் தானே
கொத்திக் கொள்ளுதல்
அதற்குப் படித்தம்.
நான் இறைக்கும்
தானியமணிகளை
அழகு பார்த்துத் தின்னும்
ரசனாவாதி.
ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்
அதுவரும் மாலை
மெதுவாய் நகருதே
கீழ்வானப் பரப்பில்
கண் விசிறித் தேடினும்
காணவில்லை, எங்கு போச்சோ
திடுமெனக் காதில்
தித்தித்தது அதன் கீச்சுக்குரல்
ஜன்னல் பிளவில்
உன்னிப் பார்த்தால்
அடுத்த வீட்டு முற்றத்தில்
இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி
அழகு பார்க்கும் என் குருவி
என் முகம் ஏறிடாது
திரும்பிக் குனியும் விழிகளை


( வெறும் பொழுது - உமா மகேஸ்வரி
தமிழினி பதிப்பகம் )