வியாழன், 30 ஏப்ரல், 2009

ஓட்டை



ஊற்றப்படுவது நின்றதும்
வடிந்து வெற்றிடமாகிறது
மிச்சமாய் ஈரம்
சில கணங்கள்
ஒப்புக்கொள்கிறேன் குறையை
ஓட்டையை அடைக்காது
புலம்புவதில் அர்த்தமில்லை
துளையெங்கேயெனத் தெரியவில்லை
அடைக்கவும் விருப்பில்லையோ
தேங்கியிருப்பதை விடவும்
வந்து கடந்து போகட்டுமே நீர்
என இருக்கிறேனோ
நீரின்றி போனாலும்
நிரப்புவதற்கு என்றென்றைக்குமாய்
வெறுமை இருக்கிறதென்கிற
திமிரோ.

புதன், 29 ஏப்ரல், 2009

வைதீஸ்வரன் கவிதைகள்



கண்ணாடியை துடைக்கத் துடைக்க
என் முகத்தின் அழுக்கு
மேலும் தெளிவாகத் தெரிகிறது

தன் கூட்டுக்கும்
வானுக்கும்
பாலம் தெரிகிறது
பறவைகளுக்கு மட்டும்

எழுத நினைக்காத தருணம்
எழுத நேருகிறது
மிகத்தெரிந்தது போல்
தெரியாததை எழுதிக்
கொண்டிருக்கிறேன்
எழுதி முடித்தவுடன் தான்
எனக்கு வெளிச்சமாகிறது
இதைத்தான் நான்
தெரிந்து கொள்ள வேண்டிக்
காத்திருந்தேனென்று



புதிர்

இருட்டை வரைந்திருக்கிறேன்
பார் என்கிறான்
தெரியவில்லையே என்கிறேன்
அது தான் இருட்டு என்கிறான்
இன்னும் தெரியவில்லை என்கிறேன்
மேலும் உற்றுப் பார்த்து
அதுவே அதனால் இருட்டு என்கிறான்
இவன் இருட்டு
எனக்கு எப்போது
வெளிச்சமாகும்

மேலே

வெள்ளைச் சுவரில்
மெல்லிய நிழல்கள்
சிலந்தியின் கலைக்கு
செலவற்ற விளம்பரங்கள்


உபதேசம் நமக்கு

அடுத்த வீட்டுக் காரனிடம்
அன்பாய் இருந்து தொலைத்து விடு
வம்பில்லை

பல்தேய்த்துக் கொண்டிருக்கும் போது
பக்கத்து வீட்டுக் காரனிடம்
வெள்ளையாய் சிரித்துவிடு
தொல்லையில்லை

என்றாவது
உன்வீட்டில்
மழை பெய்யும் போது
அவன் வீட்டில்
குடை இருக்கும்
என்றாவது உன் செடியை
ஆடு கடிக்கும் போது
அவன் கையில் ஆளுயரக்
கம்பு இருக்கும்
உன் வீட்டுக் குழந்தைகள்
ஓடியாட
அவன் வீட்டுத் தாழ்வாரம்
நீளமாயிருக்கும்

எதற்கும்
ஒரு விதமான தவமாக
தினந்தினம்
வேலியோரம் சற்றே
கால் சொறிந்து நில்லு

உளுந்தூரில் அவன் பாட்டி செத்ததால்
உனக்குப் போன தூக்கம்
ஊருக்குள் திருட்டு கற்பழிப்பு
உணவுத்தட்டு கருப்பு மார்க்கெட்டு
யாருக்கோ தவறிவிட்ட
லாட்டரிச் சீட்டு
எவனுக்கோ பிறந்து விட்ட
இரண்டு தலைப் பிள்ளை
இன்னும்
கிரஸின் விலை ஊசி விலை
கழுதை விலை காக்காய் விலை
எல்லா நிலையும் பந்தமுடன்
பல் திறந்து பேசிவிட்டு
வாய்க் கொப்பளித்து வந்துவிடு
தொந்தரவில்லை

என்றாவது நின்று போகும்
உன் சுவர் கடிகாரம் கூட
அவன் வீட்டில் அடிக்கும் மணியை
ஒட்டுக் கேட்கட்டும்

ஏசுவும் புத்தனும்
எதற்கு சொன்னான் பின்னே
அடுத்தவனை நேசி என்று
அவனால் உபகாரம்
ஆயிரங்கள் உனக்கு இருக்கும்

அதை மட்டும் யோசி
நீ ஒரு நகரவாசி.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

இன்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் குரல்



மொழியற்ற பிராந்தியத்தில்
அர்த்தமற்ற புனிதச் சிரிப்புடன்
வெற்றுவெளியில் காலுதைத்து
காற்றில் கரங்களைத் துழாவி
முலையென விரல் சுப்பி
தவழ்தலின் முன்வைப்பாய் கவிழ்ந்து
என்னைப் பார்த்து சிரித்தபடியிருக்கும்
இப்பிஞ்சை அள்ளியெடுத்து
உச்சிமுகர்ந்து முத்தி கொஞ்சவே ஆசை
முன்பொரு கால ரயில் பயணத்தில்
மூன்று மணி நேர அன்னியோன்ய
சகவாசத்தின் இறுதியில்
என் சுட்டுவிரல் அழுந்தப் பற்றிய அந்தக்
குட்டிக்கடவுளின் தளிர்க்கரம் விலக்கி
அவர்கள் இறங்க வேண்டிய
நிறுத்தத்தில் அதன் தாய்
அழ அழ அழைத்துச் சென்ற குரல்
இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது
தளிர்க்கரத் தடம் இன்னமும்
என் சுட்டு விரலில்...........


( மாதவராஜ் சார் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, சந்தோஷக் கவிதை எழுத முயற்சித்தேன். இது சந்தோஷக் கவிதையா என்பது தான் தெரியவில்லை.)

திங்கள், 27 ஏப்ரல், 2009

நிறைவேறாத ஆசைகள்



நிறைவேறாத ஆசைகளுடன்
மரித்த ஆத்மா இது
சுருக்குக் கயிற்றில் சங்கிறுக
விழிவெறிக்க நாத்தள்ள
குறிவிறைத்து உயிர்த்துளி கசிய
பூச்சி மருந்தருந்தி நுரைத்தள்ளி
குடல் வெளிவரும் அனுபவமாகி
நீரில் மூழ்கி வெகு ஆழத்தில்
கடைசி ஸ்வாசமற்றுப்
போகும் கணத்தை தரிசித்து
தண்டவாளத்தில் தலை கொடுத்துப் படுத்து
சக்கரத்தின் ஏறுவதற்கு முந்தைய
கணத்தின் ஓசையை உற்றுக்கேட்டு
தலை துண்டிக்கப்பட்டபின்
விழி எதைப்பார்க்கிறது
வாய் என்ன முணுமுணுக்கிறது
கை கால்களின் செய்கையென்ன
என்பதறிந்து இறக்கவுமே ஆசைப்பட்டேன்
இது எதுவுமே நிறைவேறாது
மரணம் சம்பவித்தது துரதிஷ்டவசமானது
சில உடல்களைத் தேர்ந்திருக்கிறேன்
ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள
தன்னிறைவடையாவிடில்
மேலும் சில உடல்களையும்,,,,,,,,,
தயவுசெய்து தாங்கள்
மறுப்பின்றி சம்மதிக்கவேண்டும்
சங்கடப்படாதீர்கள்
நீங்களும் சில உடல்களில் புகுந்து
தீர்த்துக்கொள்ளலாம் உங்கள்
நிறைவேறாத ஆசைகளையும்...

சனி, 25 ஏப்ரல், 2009

கலைந்த உறக்கம்



விட்ட மின் விசிறியில்
காயமுற்று
சரிவிகித உதிர உயிர்த்துளி
வெள்ளத்தில் உடல் மிதக்க
கான்கிரீட் விதானம்
துளைத்து விறைத்து
நிலவைப் புணர்கிறது
திடுக்கிட்டு விழித்து
யாருமற்ற அறையை
உற்று நோக்கி
பால்கனி வந்து
வெறுமை வானம்
வெறித்துப் புகைத்து
கதவடைத்து உறங்கப்போனேன்
கனவையும் விழிப்பையும் சபித்தபடி.

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்



ஸ்ரீநேசன் கவிதை

கொலை விண்ணப்பம்


நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்
முதலில் என்னைத் திட்டுங்கள் மோசமான
காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளால்
தவறாமல் அம்மாவுடனான எனது உறவை
அதில் கொச்சைப் படுத்துங்கள்
எதிர்வினையே புரியாத என்னைக்
கண்டு இப்போது எரிச்சலடையுங்கள்
அதன் நிமித்தமாக என்னைச் சபியுங்கள்
நான் லாரியில் மாட்டிக்கொண்டு சாக வேண்டுமென்று
இல்லையெனில் நள்ளிரவில் நான் வந்து திறக்கும்
என் வீட்டுப் பூட்டில் மின்சாரத்தைப் பாய்த்து வையுங்கள்
அல்லது நான் பருகும் மதுவில் விஷம் கலந்து கொடுங்கள்
முடியாத பட்சத்தில் மலையுச்சியை நேசிக்கும் என் சபலமறிந்து
அழைத்துச் சென்று அங்கிருந்து தள்ளி விடுங்கள்
அது அநாவசியமான வேலை என நினைத்தால்
என் முதுகிலேனும் பிச்சிவா கத்தியால் குத்துங்கள்
நீங்கள் தைரியம் கொஞ்சம் குறைவானவரெனில்
ஆள் வைத்துச் செய்யுங்கள்
தடயமே தெரிய வரக்கூடாது என்றால்
பில்லி சூன்யமாவது வையுங்கள்
இதுவெதுவும் பொருந்தவில்லையெனில்
ஆற்றில் மூழ்கடிக்கலாம்......
தூக்கேற்றிக் கொல்லலாம்.....
பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தலாம்......
இவற்றையெல்லாம் முயற்சித்துப் பாருங்கள்
ஒன்றினாலும் பலனில்லாத பட்சத்தில்
என் மனைவியை வன்புணர்ச்சி செய்யுங்கள்
அல்லது என் குழந்தைகள் தூங்கும் போது
பாறாங்கல்லால் தலை நசுக்குங்கள்
அப்படியும் நான் உயிரோடு தொடர்ந்திருந்தால்
தயவுசெய்து இறுதியிலும் இறுதியாக
அன்பையாவது செலுத்துங்கள்.

( ஸ்ரீநேசன் அவர்களுக்கும் தக்கை காலாண்டிதழுக்கும் நன்றி )

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

சாசனம்



கிடத்தி கிடந்து புலம்பியழாதீர்கள்
ஊதுபத்திக்கு பதில் சிகரெட்
இன்னும் கஞ்சா உசிதம்
பன்னீருக்கு மாற்றாக பிராந்தி
பயம் பூக்களின் மென்மையில்
தவிர்த்திடுங்கள் மாலைகளை
குளிர் நீரில் முற்றிலும்
நிர்வாணமாய் குளிப்பதே வழமை
பரவாயில்லை
ஆடைகளோடே குளிப்பாட்டுங்கள்
மீரா ஷிக்காய் அமாம் சோப்
சாவுக்கூத்தும் பறையோசையும் கொண்டாட்டம்
நண்பர்கள் ஆடினால் ம்கிழ்வேன்
மரணகானா விஜியை எப்பாடுபட்டாவது
அழைத்து வந்துவிடுங்கள்
சங்கு மணி அவசியம்
வெள்ளை தவிர்த்து கறுப்புத்துணி போர்த்துங்கள்
மூங்கில் கொம்பு தென்னையோலை சணல் இதுபோதும்
உடல் மட்டுமே இது
கொள்கைகள் சிலதில் சமரசம் செய்கிறேன்
தங்கள் விருப்பச் சடங்குகளில் குறுக்கிடவில்லை
ஆடுபவர் அடிப்பவர் அடக்கம் செய்பவர்
போதைக்கு மறக்காமல் கவனியுங்கள்
மனிதனை மனிதன் சுமப்பதில்
உடன்பாடில்லை ஊர்தி அவசியம்
விதிவிலக்களித்து தாய்க்குலங்கள்
இடுகாட்டில் வாய்க்கரிசியிட அனுமதியளிக்குமாறு
தாழ்மையுட்ன் வேண்டுகிறேன்
விருப்பப்பட்டால் முகத்தில்
விழிக்கவேண்டாமென்றவர்களும்
முகம் பார்த்துக்கொள்ளலாம் கடைசியாய்
இரக்கமற்ற மின்தகனம் வேண்டாமே
இவள் வந்து கொள்ளி வைக்க அனுமதிக்கவும்
விருந்தினர் சிரமம் கருதி
உடன் பால் நல்லது
அஸ்தியை சாக்கடையில் கரைக்கவும்
3 5 8 10 15 30 ல்லாம் எதற்கு சிரமம்
திதி ஞாபகமிருந்தால் பார்த்துக்கொள்ளலாம்
நினைவு பொல்லாதது
எதையும் வைக்காதீர்கள் நினைவில்

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

பொய்யாய் பழங்கனவாய்

நெடுங்காலமாய் பாதுகாத்திருந்த
மைதீர்ந்த எழுதுகோல்
கண்மையும் நீரும் உதட்டுச்சாயமும் ஒட்டிய
துவைக்காத கைக்குட்டை
முத்தங்களுடன் முடியும் கடிதங்கள்
சிரிக்கும் சாவிக்கொத்து பொம்மை
உடைந்த வளையல் துண்டுகள்
உதிர்ந்த மோதிர ஒற்றைக்கல்
பரிசளித்த புத்தக பக்கங்களுக்கிடையில் சேமித்த
நீள ஒற்றைக்கற்றை அருகே
அழுந்தியபடியிருக்கும் ஒற்றைப்பூ
மேலே ஒரு பொட்டு
உணவகத்தில் இதழ் துடைத்த தாள்
குறுஞ்செய்திகள் நிரம்பிய அலைபேசி
கொலுசின் உதிர்ந்த ஒற்றைப்பரல்
அறியாது அபகரித்த
மாதவிடாய்க் கறை படிந்த துணி
மலக்கழிவென எஞ்சியிருக்கும் நினைவுகள்
இன்னும் இன்னபிற என
சூன்யக்காரனின் மூலப்பொருட்களையொத்த
சேகரங்களனைத்தையும்
கீழ் உள்ளாடைக்குள் மூட்டைக்கட்டி
வீசிவிட்டு வந்தேன் கடலுக்குள்
வந்ததாகவே நினைவு
எங்ஙனம் உறுதிபடுத்திக்கொள்ள
என் இருப்பை
இந்தச் சூன்யவெளியில்.

புதன், 15 ஏப்ரல், 2009

சில நாட்குறிப்புகள்

காதல்
கடிதத்தில்
காற்றாடி

இலட்சியம் என்ன
என்னவாகப்
போகிறாய்
சாகப்போகிறேன்

நீயின்றி நானும்
நானின்றி நீயும்
சத்தியங்கள்
வாழ்க
ஒழிக

தனியாய் உணர்வதாகவும்
தன்னுடனிருக்கச் சொல்லியும் தனிமை
நெருங்கிப் பழகியதில்
தனிமையுடனான உறவில்
விரிசல்

தண்ணீர் போத்தலின்
அடியாழத்திலிருக்க
வெறுமை
வலியறிந்து
தாகமடக்கினேன்

காமாட்சியம்மன் விளக்கின்
தீநாக்கு பசியில் தவிக்க
தின்னக்கொடுக்கிறேன்
விரலை

உன் திருமண நிழற்படம்
ஒன்றில் புன்னகை
ஒன்றில் தவிப்பு
எது நிஜம்
எது பாவனை
எது எதுவாகவிருக்க
விரும்புகிறேன்

பார்க்க நேர்கையில்
பார்த்துச்செல்லவா
பார்த்தும்
பார்க்காதது போல் செல்லவா

( எது உன் விருப்பம் )

பார்த்தாய்
பார்த்தேன்
பார்த்தோம்
சென்றாய்
சென்றேன்
திரும்பிப் பார்த்தாய்
திரும்பிப் பார்த்தேன்
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒருவேளை
நீயும்,,,,,,,,,,,,,,,

பொட்டு வைக்கவில்லையா என்றேன்
மலர்ந்த இதழுடன்
நெற்றியை என் இதழருகே
காட்டி நிற்கிறாள்

காசியென்று
நினைத்திருக்கும்
நின்மேனியை கொசு
நடக்குமா
ஜீவகாருண்யளாயிற்றே நீ

நன்றாக தூங்குகிறாள்
அருகில் படுத்தபடி
வாசித்துக்கொண்டு
நெகிழும் வரிகளில்
அவளறியாமல்
தலைநீவி முத்தமிடுகிறேன்

கோழி மிதித்து குஞ்சுக்கும்
குஞ்சு மிதித்து கோழிக்கும்
ஒன்றும் ஆகாது
மத்தீசமென வந்து
கறியாக்காதீர்கள் எங்களை

புணரும் தருணத்தில்
நிழலாடும்
பிரசவ வலி

கண்ணீரில்
காகிதக்கப்பல் விடும் நீ
மழலையா

நேசிக்கப்படுகிறேன்
மூடநம்பிக்கை

காகம் அறிந்திருக்குமோ
தேர்ந்திருக்கிறது
எச்சமிட

கட்டணம் வசூலிக்காத காற்று
உழைக்காமல் பிழைத்திருக்கும் தாவரம்
பாழாய்ப்போகும் நான்

வசிக்கும் உடலிற்கு
வாடகை வசூலிக்க
வருவார் எவர்

பாதை
பயணம்
எது இருப்பதால்
எது நீள்கிறது

நிலைக்கண்ணாடியில்
எங்கேயென் பிம்பம்
பார்வையிழந்து விட்டேனோ
இறந்து விட்டேனோ

கும்பிடப் போன இடத்து
கொடுமையாய்
ஆலோசனை கேட்கும்
கடவுளர்கள்
நாத்தீகர்களாவதற்கு

எது
இருக்கையில் இருப்பது
இறக்கையில் இறப்பது

மரண வாக்குமூலம்
நேசம் நேசமன்றி
வேறொன்றுமில்லை

அலங்கார வசீகரங்களுடன்
புணர அழைக்கும்
வேசியாய்
மரணம்


இரக்கமும் கருணையும்
அதிகம்
மரணத்திற்கு

சுட்டும் விழிச்சுடர்
சுடுகாட்டில் வைத்தது
கொள்ளி

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

காலத்தால்,,,,,,,,,,,



வாதைகளிலிருந்து விடுபட
காயங்களில் மருந்திட
உள்ளிழுக்கும் புதைகுழியிலிருந்து
மீள புதைய
அரிப்புகளை சொரிந்து புண்ணாக்கிக் கொள்ள
குலைத்துக் கொண்டிருக்கும்
குற்றவுணர்வின் நாக்கையறுக்க
ரகசியமாய் எதிரிகளை
வஞ்சம் தீர்த்துக் கொள்ள
புழுக்கத்திற்கு சாமரமாக
துரோகிகளோடு கைக்குலுக்க
கண்ணாடிக் குவளையென
உடைந்த உறவை ஒட்ட வைக்க
அவளின் புகைப்படத்தை
இவளறியாமல் பார்த்துக் கொள்வதாய்
நாசூக்காய் குற்றங்களை நியாயப்படுத்த
பிறழ்வடைந்தவன் அற்றவனென உறுதிபடுத்த
ஆசை பிம்பத்தை வரித்து சுயபோகிப்பதாய்
என்னிலிருந்து என்னை தற்காத்துக்கொள்ள
தனிமையை நிரப்ப
நிரப்பியதை வெறுமையாக்க
இருக்க இல்லாமலிருக்க
ஒவ்வொரு முறையும் நான்
கொலை செய்யப்படுவதின் நேரலையாய்
இவைகளைப் போல்
இவைகளின் மாயை போலிருக்கும்
இந்த எழுத்தும் இதன் உள்ளீடுகளும்
காலத்தால் அழியுமெனினும்
எழுதிக்கொண்டிருக்கிறேன்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

கட வுளே



எதுவுமே
ஏதோவொன்றாய் தெரிந்தது
அதது அததுவாகயில்லாமல்
வேறெதுவாகவோ தெரிவதை
எழுதிப்பார்த்தேன்
ஒவ்வொரு மாதிரி
தெரிவதாகச் சொன்னார்கள்
ஒவ்வொருத்தரும்
நல்ல மருத்துவரை அணுக வேண்டும்
முற்றிவிட்டதென முடிவு செய்தேன்

எல்லாவற்றிலும்
ஒன்றே தெரியவாரம்பித்தது
பார்வையையும் பரிசோதனை
செய்ய வேண்டிய நிர்பந்தம்

அந்ததந்த கணத்திலிருக்கும் படி
பணித்தார் ஒருவர்
அகத்திலிருந்த ஒளிப்பதிவுக்கருவி
நிலைக்கண்ணாடி
உடைத்தேன் அனைத்தையும்
ஒன்று பலவாக
பல பலப்பலவாகத் தெரிந்தது
தொடர்ந்த கணங்களால் பிணைக்கப்பட்டு
சபிக்கப்பட்டிருப்பதை
அப்போது தான் உணர்ந்தேன்

சூழ்வான பூமியில்
எது எல்லையற்ற வெளி
வலைப்பின்னல்கள் தெரிகிறது
என் இருப்பு
வலைக்குள்ளிருக்கிறதா வெளியிலிருக்கிறதா
எது உள் எது வெளி
வலை உண்மையா மாயையா

இருப்பது மாயை
இன்மை சாஸ்வதம் என்பவர்களே
இருப்பதை இல்லையென்பது
பிரமையன்றி வேறென்ன

எதுவுமே இல்லாமலிருப்பதெப்படி
எதையுமே ஏன்
புரிய முயற்சிக்கிறேன் என்கிறீர்களே
அறிவைக்கடந்ததென்கிறீர்கள்
அறிவற்ற வெளியில் சஞ்சரிப்பதென்கிறீர்கள்
அறிவற்ற வெளியெனில் அறியாமையிலா
அறிவென்பது அறியாமையா

இருப்பு இன்மை மாயை
இதெல்லாம்
இருப்பதா
இருப்பது போலிருப்பதா
கட வுளே காப்பாற்று,,,,,,,,,,,,,,

சனி, 11 ஏப்ரல், 2009

புகைப்படக் கவிதை




எதிர்முனையில்

எவருமில்லையென்பதறியாது

அந்த ஒற்றைச் செருப்பு

அலைபேசியின் காதில்

தன் எஜமானன் கேளாத

மெல்லிய குரலில்

புலம்பியபடியிருக்கிறது

காலமெலாம்

நடந்து நடந்து

தேய்ந்த கதையை

(அகநாழிகை அவர்களின் வலைப்பக்கத்தில்,அவர் சமீபமாய் நடந்த பதிவர் சந்திப்பில் எடுத்து வெளியிட்டிருந்த புகைப்படங்களில் ஒன்று இது, எனக்கு இந்தப் புகைப்படம் மிகவும் பிடித்திருந்தது, பலரும் இதற்கு பொருத்தமாக ஏதாவது எழுதினால் நன்றாயிருக்குமென குறிப்பிட்டிருந்தார்கள் பின்னூட்டத்தில். இநத புகைப்படத்திற்குள் இன்னும் நிறைய ஒளிந்திருக்கிறது, அதில் சிறுதுளி இது,) அகநாழிகை அவர்களின் புகைப்படத்திற்கு மிக்க நன்றி.

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மு. சுயம்புலிங்கம் கவிதைகள்



சரிசெய்

நீ கவனிக்கறதே இல்லை
உன்னுடைய சாட்டையில்
வார் இல்லை
முள் இல்லை
சரி செய் பிரயோகம் பண்ணு
அப்போது தான்
வசத்துக்கு வரும்
அதுகள்
உன் வசத்துக்கு வரும்.


சுய வேலைவாய்ப்பு

காலையில் எழும்ப வேண்டியது
ஒரு கோணியோடு
ஒரு தெருவு நடந்தால் போதும்
கோணி நிறைந்து விடும்
காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன
தலை நிமிர்ந்து வாழலாம்.


பஞ்சனை

எதுக்கு
நாக்கத் துருத்திக்கிட்டு வாரிய.......
அடிக்கிற சோலியெல்லாம
வச்சிக்கிடாதிங்க.........

ஏங்கிட்ட
என்ன குத்தம் கண்டுட்டிய.......
ஒங்களுக்கு
நான் என்ன பணிவிட செய்யல
சொல்லுங்க.........

நீங்க தேடுன சம்பாத்யத்த
தின்னு அழிச்சிட்டனா..........
ஒங்களுக்கு தெரியாம்
எவனையும் கூட்டி வச்சிக்கிட்டு
வீட்டுக்குள்ள ஒறங்குதனா.........

ஒங்களுக்கு வாக்கப்பட்டு
ரொம்பத்தான்
நான் சொகத்த கண்டுட்டேன்...........
பஞ்சனைல
உக்கார வெச்சித்தான
எனக்கு நீங்க
சோறு போடுதிய.........

எஞ்சதுரத்த
சாறாப் பிழிஞ்சிதான
ஒரு வா தண்ணி குடிக்கறேன்...........
ஒங்க மருவாதிய
நீங்களாக் கெடுத்துக்கிடாதீக..........
எடுங்க கைய
மயித்த விடுதியளா என்ன......

அவள் வார்த்தைகளில்
ஆவேசம் பொங்கி
கரை புரண்டு வந்தது
அவள் வார்த்தைகளில்
நேர்மையும் சத்தியமும் இருந்தது

அவன் பிடி தளர்ந்தது
திருணைல கெடக்கான் அவன்
குடிச்சது
தின்னது
எல்லாத்தையும் கக்கிக்கிடடுக் கெடக்கான்

அவா
புருசனக் கழுவி
வீட்டக் கழுவி
எல்லாத்தையும்
சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்



முந்தித்தவம்

நீ ஒரு ஆம்பள
உனக்கு ஒரு பொண்டாட்டி......

புள்ளைகளுக்கு
கலைக்டர் வேல வேண்டாம்.......
ஒரு எடுபிடி வேல
வாங்கிக் கொடுக்க முடியாது
உன்னால.......

வீடு வித்து
வாயில போட்டாச்சி.......
தாலிநூல் வித்துத் தின்னாச்சி......
கம்மல் இருக்கா.....
மூக்குத்தி இருக்கா.....

வீட்டு வாடகைக்கு
பொம்பள ஜவாப் சொல்லணும்

விடிஞ்சாப் போற
அடஞ்சா வாற

மண்ணெண்ண அடுப்பில் சமச்சி
வீடு பூராவும் கரி

ஒரு பாவாடைக்கு
மாத்துப் பாவாட கெடையாது
முகத்துக்குப் பூச
செத்தியங்காணு
மஞ்சத்துண்டு இல்ல
நல்லாப் பொழைக்கறவா
சிரிக்கறா

ஒனக்கு
ஆக்கி அவிச்சி
ருசியா கொட்டணும்

கால் பெருவிரலை நீட்டி
ஒத்தச் செருப்பை
மெள்ள இழுத்தேன்
பாழாய்ப் போன ரப்பர்
வார் அறுந்திருக்கிறது

அவள் பின்கழுத்தில்
என் கண்கள்
செல்லமாய் விழுந்தன

அந்த மஞ்சக்கயிற்றில்
ஒரு ஊக்கு இருக்கு
கேக்கலாம்
கேளாமலேகூட
தென்னி எடுக்கலாம்

அவள் அழுவதைப் பார்க்க
இஷ்டம் இல்லை
செருப்பை விட்டுவிட்டு
நடக்கிறேன்.

தளபதி

என் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா
எங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி

மக்கள் கடல்

தூண்டில் போட்டும் கொல்கிறார்கள்
வலை போட்டும் பிடிக்கிறார்கள்

( உயிர்மை வெளியீட்டில் நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள் தொகுப்பிலிருந்து )

வியாழன், 9 ஏப்ரல், 2009

என். டி. ராஜ்குமார் கவிதைகள்



லேட்டி பொன்னுமக்கா
முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ...
அயித்தம் பாப்பாங்க
நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ.
ஏமாத்திம்மா..... அடியேன் வந்திருக்கேன்
கும்பிகாந்துகு ஏதெங்கிலும் தரக்கூடாதா
கஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும்
கிட்டியாலே போதும்
மனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி
கொண்டு தட்டுவா
விரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ
கிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம்.
சட்டிப்பான கழுவணுமெங்கிலும்
எல்லாத்துக்கும் வாற வழியதுதான்
ஏமான் வீட்டிலயிருந்தாரெங்கி
ஏமாத்தியோ பெண்டுபிள்ளையோ
சத்தமிட்டு சிரிக்கப்பிடாது.
ஏமான தொடப்பிடாது
தண்ணிகொண்டு கொடுக்கணுமெங்கிகூட
கொடுத்துட்டு ஓடிப்போய் சொவரு பக்கம் மறஞ்சி நிக்கணும்
அன்யோன்யமா நெருங்கி நின்னு பேசக்கூட வரப்பிடாது
எப்படி இந்த ஏமாத்திமாரெல்லாம் ஏமாம்மார
கெட்டி ஆளுதோன்னு தோணும்.
செலச் சமயம் காட்டுக்கு ஆனமேய்க்க போறயேமான்
வெளுப்பிலபோய் அந்தியில வரும்
இத அறிஞ்சி வச்சிகிட்டுதான்
ஏமாத்திக ஆசைய தீத்துவைக்க
ஆரங்கிலும் வருவானுக.
நம்ம பௌப்பு
பிச்சயெடுத்திட்டு கண்டும் காணாம போறது
நமக்கு அறியாதுண்ணு ஏமாத்தி நெனப்பா.
நம்மளும் உரியாடாத போய்கிட்டு
நாலஞ்சி தெவசம் கழிச்சி பிச்சயெடுக்க வாறப்ப
ஏமாத்திய பாத்து மொகக்குறி சொல்லுறது
அம்மையிட மொகத்துல ஒரு கலக்கம் தெரியுதல்லோ
மனசின்ற அகத்து ஒரு வல்லாத்த சலனம் ஒண்டல்லோ
ஏமான் அறியாத அம்மைக்கும் வேறொருத்தனுக்கும் ஒரு
தொடர்பு ஒண்டல்லோ
பாவமல்லா எந்நாலுமிதொரு பாவமாணு
தொஸமில்லா எந்நாலுமிதொரு தொஸமாணு
அம்மைக்கு பகவதி தொணையொண்டு
கொளவி குறி சொல்லி முடிக்க
ஆருட்டையும் இதப்பத்தி மிண்டப்பிடாது
என்று சொல்லிவிட்டு
சூடுசோறும் கறியும் கொடுத்து
புதுத்துணியும் கொடுத்தனுப்புவா ஏமாத்தி
இப்படியே ஆறும் இருவர் பசியும்.




தம்பிய பெத்தெடுத்த பச்ச ஒடம்போடு கெடக்க
வயிறு நெறய கள்ளும் மோந்திக்கிட்டு
வாய் நெறய விளித்துக்கொண்டே
நல்லமொளகு, கொடமஞ்ச, நால்பா மரப்பட்ட.
ராமச்சம்வேரு,
ஒணங்கிபோன காட்டு நெல்லிக்காயிட்டு
கொதிக்க வைத்த வென்னீரில் துணியை முக்கி
அடிவயிற்றில் ஒத்தடமிட்டுக் கொடுத்துவிட்டு
ஒடக்கு எடுக்கும் அப்பா
அம்மாவின் கூந்தலுக்கு

( எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் தொகுத்த ராஜ்குமார் அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு ( கல் விளக்குகள் ). காலச்சுவடு பதிப்பக வெளியீடு.)

புதன், 8 ஏப்ரல், 2009

ஞானக்கூத்தன் கவிதைகள்



பார்க்கப் படுதலின்றி வாழ்க்கை பிறிதென்ன ?

யார் யார் என்னை பார்க்கிறார்கள் ?
பார்க்கிறார்கள் என்ற உயர்திணை
முடிவு கூடத் தவறு தான்.

எது எவரால் பார்க்கப் படுகிறேன் என்பதே சரி.
வீதியில் நடந்தால் கல்லாப் பெட்டிக்
கிண்ணத்து வழவழப்பைத் துழாவிக்கொண்டு
கடைக்காரர் என்னைப் பார்க்கிறார்.

தெருமாறிச் செல்லும் நாய் பார்க்கிறது
அதைத் தொடரும் மற்றொரு நாயும் பார்க்கிறது
ஒரு சிறுவன் ஒரு சிறுமி அவர்களிடம் நானொரு
காதல் கடிதத்தை இன்னாளிடம்
கொடுக்கச் சொல்வேனோ என்று பார்க்கின்றனர்.

பெருமாள் மாட்டுடன் எதிரில் வந்தவன்
ஒன்றும் கேட்காமல் என்னைப் பார்க்கிறான்.
அவனது மாடும் என்னைப் பார்க்கிறது.
வெள்ளைப் புள்ளிகள் மேவிய ஆடுகள்
கிளுவை இலைகளைப் புசித்துக் கொண்டு
என்னைப் பார்க்கின்றன.
தபால்காரர் கையில் அடுக்கிக் கொண்ட
கடிதக் கடடுகளை விரல்களால் பிரித்து
எனக்கு கடிதம் இல்லை என்று
சொல்லாமலே என்னைப் பார்க்கிறார்.

குட்டிகள் பின்பற்ற தெருவின் ஓரத்தில்
குறுங்கால்களோடு நடக்கும்
பெரிய பன்றி என்னைப் பார்த்தது.
ஆனால் குட்டிகள் என்னைப் பார்க்கவில்லை
தாயைத் தவிர யாரையும் பார்க்கத்
தெரியாதவை. மேலும் இன்னும் வயதாகவில்லை

வரிசையாய் மின்சாரக் கம்பிமேல்
உட்கார்ந்திருக்கும் காக்கைக் கூட்டத்தில்
ஒன்றாவதென்னைப் பார்க்காமலா இருந்திருக்கும் ?

எல்லாம் எல்லோரும் என்னைப் பார்ப்பது
போலப் பிரமை எனக்கேன் வந்தது
ஞானாட்சரி நீ சொல்வாயா
எப்போதும் என்னை விமர்சிக்கும் உன் வாயால் ?


ஒரு பையன் சொன்ன கதை

ஓட்டுக் கூரைமேல் ஒரு காக்கை தனது
கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு
எதையோ தின்றதாம் ஆர்வமாகவும்
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும்

தெருவெல்லாம் பசியோடு பறந்து
எங்கே என்ன கிடைத்ததோ
இப்போது தின்கிறது காக்கையென்று
நினைத்துக் கொண்டனாம்
ஒரு வேளை தன் வீட்டுக் கொல்லையில்
உலர்த்தி வைத்ததாய் இருக்குமோ
என்று நினைப்பு வரவே
விட்டானாம் ஒரு கல் காக்கை மேலே
என்னவோ கவலையில் நான் இருந்த போது
ஒரு பையன் சொன்னான் இந்தக் கதையை எனக்கு

களத்திரம்

சொன்னார். சொன்னார். முச்சுவிடாமல்
சொன்னார். அப்புறம் கேட்கிறேன் என்றேன்.
இன்னும் கொஞ்சம் கேளென்று சொன்னார்
உறங்குவது போல பாவனை செய்யலாம். ஆனால்
எவ்வளவு கஷ்டம் கேட்பது போல
நீண்ட நேரம் பாவனை செய்வது ?
கோட்டுவாய் விட்டேன். அவரோ இன்னமும்
சொன்னார். முக்கியமான கட்டத்தை
அடையவில்லை இன்னமும் என்றார்.
ஓயாமல் சொன்னார். மூன்றாம் மனிதன்
ஒருவன் வந்தென்னை மீட்க
மாட்டானா என்று நான் ஏங்கும் சமயம்
அவரே ஓய்ந்து போய் அடுத்த சந்திப்பில்
மீதியைச் சொல்வதாய் என்னை நீங்கினார்.
அவர் சொன்ன கதைகளை எல்லாம்
உம்மிடம் சொன்னால் நீரும் என்போல்
ஆகிவிடுவீர்.
மனைவியைக் கனவில் காணும்
வாழ்க்கை போல் கொடுமை உண்டோ ?


(விருட்சம் வெளியீட்டில் ஞானக்கூத்தன் அவர்களின் பென்சில் படங்கள் தொகுப்பிலிருந்து)

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

அவிழ்க்கவியலாத முடிச்சுகள்



கொசுவர்த்திச்சுருள் தீரப்போகிறது
நாவரள பிரக்ஞையின்றி
தேக்கிய எச்சிலை விழுங்கியிருக்கிறேன்
கழுத்து வலிக்க சற்று நிமிர்ந்து படுத்திருக்கிறேன்
மூத்திரம் அடக்கவியலாது கழித்து வந்தேன்
வேர்க்கடலையும் தீரப்போகிறது
இவனின் வருகை ஒவ்வாததோ
சாளர நிழல் வரையறுத்திருந்த
இடத்தையும் தாண்டி நகரப்போகிறது
இவ்விளம்பரம் வரக்கூடாதென நினைத்திருந்தேன்
இந்த வர்ணனையாளரும் கூட
பதட்டமாயிருக்கிறது
சேவாக் ஆட்டமிழந்துவிடுவாரென

திங்கள், 6 ஏப்ரல், 2009

ஏழாம் உலகம்



அம்மா தாயே
அய்யா பிச்சை போடுங்க
உங்க காலைப் பிடிச்சி கேக்கறேன்
தர்மம் தலைகாக்கும்
நீங்க நல்லாயிருப்பீங்க
காக்குமென்று நினைத்த தர்மமெல்லாம்
காலை வாறிவிட்டது
நல்லாயிருப்பீங்களாம்
என்னமோ
இவனுக்கு பிச்சையிட்டால்
ஈழத்தில் அமைதி நிலவும்
பொருளாதாரச் சரிவு சீராகும்
சுனாமி வராது
விலைவாசி குறையும்
காவிரித்தண்ணீர் வரும்
பப்பில் மதுவருந்தும்
எம் குலப்பெண்கள் தாக்கப்படமாட்டார்கள்
ஐடி யில் மறுபடியும்
பணிக்கு அழைத்துவிடுவார்கள்
என்பது போல
வந்துவிட்டான்(ள்)கள்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

நிழல்கள்

மின்தடை
சாளர விளிம்பிலிருந்த
மெழுகேற்றி படுக்க
மெழுகின் நிழல் கரைகிறது
அறை விதானத்தில் நிழல்கள்
உறைந்த மின்விசிறி
கொடில் கயிறின் உள்ளாடை
மின்கம்பி பறவையாய்
குழல்விளக்கின் விறைத்த குறி
குண்டுபல்ப்பின் பருத்த முலை
ஊஞ்சல் கம்பியின் நிழல்
தொங்கும் தூக்குக்கயிறாய்
பரண்பொருள் நிழலில்
கணமொரு உருவம்
சுவரில்
என் நிழலை உற்று நோக்கினேன்
வராமலிருந்திருக்கலாம் மின்சாரம்
தடங்கலுக்கு வருந்துகிறேன்

புதன், 1 ஏப்ரல், 2009

எதுவுமே நினைவிலிருப்பதில்லை எல்லாமே நினைவிலிருக்கிறது



எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே நினைவிலிருக்கிறது
எதுவும் செய்வதற்கில்லை
மறப்பதற்கும்
நினைவிலிருத்துவதற்கும்
பிரயத்தனங்களேதுமில்லை
புனித நதிக்கும்
நரகல் மிதக்கும் சாக்கடைக்கும்
கிளிக்கும் கழுகிற்கும்
நாய்க்கும் நரிக்கும்
திறந்தே கிடக்கிறது
உணர்கொம்புகளை வெட்டி
எரியூட்டியாகிவிட்டது
புலன்களை மழுங்க
காயடித்தாகிவிட்டது
நிகழ்வுகள் சொற்களாய் பதிவதற்குள்
துரத்தி விழுங்குகிறது சர்ப்பம்
நீங்கள் காறி உமிழலாம்
சங்கிலியில் பிணைத்து
சாட்டையில் விளாசலாம்
முகத்தில் சிறுநீர் கழிக்கலாம்
மலம் பூசலாம்
எதிர்ப்பேதுமில்லை
எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே தேவையாயிருக்கிறது
எதற்கும் தகுதியுடையவனே
ஏனெனில்
எல்லாமே நினைவிலிருக்கிறது