வெள்ளி, 17 ஏப்ரல், 2009

பொய்யாய் பழங்கனவாய்

நெடுங்காலமாய் பாதுகாத்திருந்த
மைதீர்ந்த எழுதுகோல்
கண்மையும் நீரும் உதட்டுச்சாயமும் ஒட்டிய
துவைக்காத கைக்குட்டை
முத்தங்களுடன் முடியும் கடிதங்கள்
சிரிக்கும் சாவிக்கொத்து பொம்மை
உடைந்த வளையல் துண்டுகள்
உதிர்ந்த மோதிர ஒற்றைக்கல்
பரிசளித்த புத்தக பக்கங்களுக்கிடையில் சேமித்த
நீள ஒற்றைக்கற்றை அருகே
அழுந்தியபடியிருக்கும் ஒற்றைப்பூ
மேலே ஒரு பொட்டு
உணவகத்தில் இதழ் துடைத்த தாள்
குறுஞ்செய்திகள் நிரம்பிய அலைபேசி
கொலுசின் உதிர்ந்த ஒற்றைப்பரல்
அறியாது அபகரித்த
மாதவிடாய்க் கறை படிந்த துணி
மலக்கழிவென எஞ்சியிருக்கும் நினைவுகள்
இன்னும் இன்னபிற என
சூன்யக்காரனின் மூலப்பொருட்களையொத்த
சேகரங்களனைத்தையும்
கீழ் உள்ளாடைக்குள் மூட்டைக்கட்டி
வீசிவிட்டு வந்தேன் கடலுக்குள்
வந்ததாகவே நினைவு
எங்ஙனம் உறுதிபடுத்திக்கொள்ள
என் இருப்பை
இந்தச் சூன்யவெளியில்.

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு செந்தில்.
அடுக்கடுக்கான விவரிப்பு பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

மாதவராஜ் சொன்னது…

//அடுக்கடுக்கான விவரிப்பு பிரமிக்க வைக்கிறது. //
எனக்கும்தான்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

நீங்கள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள், அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

ஆ.சுதா சொன்னது…

கவிதை நல்லா இருக்கு.
உங்கள் கவிதையின் வரிகள்
எப்பவுமே ஒரு தனிதண்மையுடன் அருமையாக உள்ளது. யாத்ரா

மண்குதிரை சொன்னது…

யாத்ரா உங்கள் மொழி அருமையாக இருக்கிறது.

Sugirtha சொன்னது…

நல்ல கவிதை. இப்படி உடன் வரக்கூடாத எல்லா நினைவுகளையும் வீசியெறிவது சாத்தியமானால் எவ்வளவு நன்றாய் இருக்கும்

Venkatesh Kumaravel சொன்னது…

உங்களது சொல் தேர்வும், அணுகுமுறையும் அற்புதம்.
இந்த முறை எடுத்துக்கொண்டிருக்கும் கருவே கொஞ்சம் கரடுமுரடாக இருப்பதால் கவிதையின் உத்தி இன்னமும் அழகாக தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஓஹ்.. ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை!

நந்தாகுமாரன் சொன்னது…

சும்மா சொல்லக் கூடாது ... There is some magic (black ? :)) in this poetry ... மொழிவளம் பிரம்மிப்பூட்டுகிறது ...

யாத்ரா சொன்னது…

வடகரை வேலன், மாதவராஜ், சேரல், முத்து, மண்குதிரை, சுகிர்தா, வெங்கிராஜா, சுந்தர், நந்தா நன்றிங்க அனைவருக்கும்.