வியாழன், 12 மார்ச், 2009

தலைப்பூ சூடாத கவிதா

தலைப்பூ சூடாத கவிதா

புத்தரின் போதனைகள்
புத்தகத்தை வாசித்து மூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
ஒரு எறும்பு.

வாசலில்
சொற்களின் யாசகம்
கவிதையில் இடம் கேட்டு
பார்க்காதது மாதிரி
கடந்துவிடுகிறேன்.

எட்டிப்பிடிக்க முயல
ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த
முயல உயர்த்த முயல
எவ்வளவு குரூரம்
நாயாயிருக்கவே சும்மா விட்டது.

மாமரக்கிளையில்
அளவளாவியபடியிருந்த சிட்டுக்குருவி
கிளம்புகிறேன் என்பதாய் தலையசைக்க
எப்போது பார்க்கலாம் என்றதற்கு
தெரியாதென தலையசைத்து பறந்தது.

விழி எழு
கழி போ வா
வாழ்வெனும் புனைவு பழகு
புணர் வளர்
பொருளற்ற பொருளீட்டு
மாண்டுபோ

17 கருத்துகள்:

ச.முத்துவேல் சொன்னது…

/ உயர்த்த
முயல உயர்த்த முயல/

ரொம்ப நல்லா வந்திருக்கு. நிறைய கவித்துவம்.

மாதவராஜ் சொன்னது…

//புத்தரின் போதனைகள்
புத்தகத்தை வாசித்து மூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
ஒரு எறும்பு//

யாத்ரா இந்த வரியிலியே கொஞ்ச நேரம் நின்று, பிறகுதான் முழுவதையும் வாசிக்க முடிந்தது. அருமை.

பெயரில்லா சொன்னது…

யாத்ரா... எனக்கு கவிதையை விடவும் இந்த தலைப்பு மிகப் பிடித்திருக்கிறது...


//தலைப்பூ சூடாத கவிதா//

எத்தனையோ அர்த்தங்கள் இதில் காணமுடிகிறது..

கவிதையில் பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்த எறும்பு.. புத்தனின் போதனைகள் புத்தகம்..

அழகிய முரண்!

வாழ்த்துக்கள்!

யாத்ரா சொன்னது…

முத்துவேல், மாதவராஜ், ஷீ நிசி
தங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது

இப்னு ஹம்துன் சொன்னது…

எனக்கு அந்த சிட்டுக்குருவி பிடித்திருக்கிறது

யாத்ரா சொன்னது…

நன்றி இப்னு அவர்களே, தங்களின் கவிதையை உயிரோசையில் வாசித்தேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

ஆதவா சொன்னது…

உங்களிடம் பிடித்ததே வித்தியாசமான எண்ணங்கள்தான் யாத்ரா..

தலைப்பு அதிலொன்று!! வித்தியாசமான கோணம்..

முதல் வரிமுதல் இறுதி வரிகள் வரை!!!!!

கலக்கல்

யாத்ரா சொன்னது…

ஆதவா தங்களின் மனந்திறந்த பாராட்டுகளுக்கு நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நல்லா வந்திருக்கு கவிதை.

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. இன்னும் கொஞ்சம் சிக்கனம் வேண்டும் வார்த்தைகளில். உதா :

புத்தரின் போதனைகள்
(புத்தகத்தை) வாசித்துமூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
ஒரு எறும்பு

இதில் புத்தகம் அதிகப்படியான வார்த்தை. ஒரு என்பதுகூட!

எட்டிப்பிடிக்க முயல சரி... உயர்த்த முயல? சரியாகப் படவில்லை எனக்கு. உயர்த்துவோமோ உயர்த்த முயலுவோமா...

யாத்ரா சொன்னது…

சுந்தர் சார் தங்களின் கருத்துக்களுக்கு நன்றி, எழுத்து எல்லாராலும் விமர்சிக்கப்படனும், அப்ப தான் கூர்மையடையும், தொடர்ந்து குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். கவிதை தொழில்நுட்பம் பழகும் பருவத்தில் எனக்கு இதுபோன்ற கருத்துரைகள் constructive ஆக இருக்கிறது

யாத்ரா சொன்னது…

//ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த
முயல உயர்த்த முயல//

எட்டிப்பிடிக்க முயல சரி... உயர்த்த முயல? சரியாகப் படவில்லை எனக்கு. உயர்த்துவோமோ உயர்த்த முயலுவோமா

சுந்தர் சார் இதை எப்படி புரிந்து கொண்டீர்கள் தெரியவில்லை,

நான் எழுதிய கோணம், நான் உயர்த்த, அது முயல, நான் இன்னும் உயர்த்த, அது மறுபடியும் முயல,,,,
இந்த அர்த்தத்தில் தான்

ச.முத்துவேல் சொன்னது…

சுந்தர்ஜி யின் ஆலோசனைகளும், அதற்கான யாத்ராவின் வரவேற்பும் (சுந்தர்ஜிக்கான யாத்ராவின் முதல் பின்னூட்டம்)ஊக்கப்படுத்தப்பட
வேண்டியவை.
இருவரையும் பாராட்டுகிறேன்.
சுந்தர்ஜி..,
அப்படியே நம்மப்பக்கமும் வந்து கொஞ்சம் செதுக்குங்களேன்..

யாத்ரா சொன்னது…

முத்துவேல் தங்களின் பாராட்டுதலுக்கு நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஓஹ்.. சரி..

முயல / உயர்த்த / முயல

எனத் தனித் தனி வரியாக இருந்திருந்தால் புரிந்திருக்கும் :)

யாத்ரா சொன்னது…

மிக்க சரி சுந்தர் சார், நான் கூட அப்படி நினைத்தேன், உங்களுக்கு பின்னூட்டமிட்ட பிறகு,

thamizhparavai சொன்னது…

தலைப்பைப் பார்த்து விட்டு ரொமான்ஸை எதிர்பார்த்து வந்தேன். வந்தால் முகத்திலறைகிறது நிகழ் யதார்த்தங்களின் உண்மை....
நாலாவது பத்தி மட்டும் இக்கவிதையில் odd man out ஆக இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.
நன்று....

யாத்ரா சொன்னது…

நன்றி தமிழ்ப்பறவை, வருகைக்கும் பகிர்வுக்கும்