புதன், 20 மே, 2009

பிரசன்னம்



நாலுகால் பாய்ச்சலில் வந்தது
அருகருகில் ஆசுவாசமாய்
வெளிச்சமற்ற வேலிச்சுவர் ஓரத்தில்
முகர்தலுக்குப்பின் கடித்து
முத்த வேகம் மும்முரமாகி
வெறியோடு பாய்ந்து
யுத்தத்தையொத்திருந்த
முன்விளையாட்டுகள்
இடையில் இன்னொன்று வர
அதை விரட்டியது இவ்விரண்டில் ஒன்று
ஒன்று கிடந்தவாக்கிலிருக்க மற்றொன்று
நாவால் நக்கியபடி
பிணைந்த உருளுதலுக்குப் பின்
நின்றவாக்கில ஒன்று மற்றொன்றின் மேல்
அந்த கணத்தில் பிரசன்னமானார் கடவுள்
உச்சத் தருணத்தில் விசையுடன்
கல் பாய்ந்து விழ
தவம் கலைந்த அழுகுரலுடன் ஒன்றும்
உருவிய விறைப்படங்காத குறியுடன் மற்றொன்றும்
திசைக்கொன்றாய் சிதறியோட
கல்லெறியப்பட்ட திக்கில்
அனுமனவதாரமாய்
ஒரேயொரு குரங்கு மட்டுமிருந்தது.

19 கருத்துகள்:

thamizhparavai சொன்னது…

மனித மன வக்கிரங்களின் செயலுருவத்தைக் காட்டியிருக்கிறீர்கள்.
நன்றாக இருக்கிறது யாத்ரா...

Venkatesh Kumaravel சொன்னது…

இப்ப தாங்க 'நான் கடவுள்' பார்த்து முடிச்சேன். (நான் முதல் தடவை பார்த்தது இப்போது தான்) அதே அதிர்ச்சி!

மாதவராஜ் சொன்னது…

மீண்டும் ஒரு நுட்பமான கவிதை உங்களிடமிருந்து. சரி.’அனுமன் அவதாரமாய்’ என்ற பிரயோகம் எதற்கு?

பெயரில்லா சொன்னது…

மாதவராஜ் கருத்துத்தான் என்னுடையதும்.

//ஒரேயொரு குரங்கு// போதுமே. அனுமன் எதற்கு?

அகநாழிகை சொன்னது…

யாத்ரா,
கவிதை நன்றாக வந்துள்ளது.
கவிதையுள் கூறப்படுவது நாயைப்பற்றி என்பது போலவே கடைசியில் அனுமன், குரங்கு என்ற பெயர்களை தவிர்த்திருக்கலாம்.

அதேபோல
//கல்லெறியப்பட்ட திக்கில்//

என்பதை

திசைக்கொன்றாய் சிதறியோடின
கல்லெறியப்பட்டதற்கு எதிர்த்திக்கில்“

என்பதாக கவிதையை முடித்திருக்கலாம்.

//அனுமனவதாரமாய்
ஒரேயொரு குரங்கு மட்டுமிருந்தது//

என்ற வரிகள் அவசியமில்லையென்றே கருதுகிறேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

அகநாழிகை சொன்னது…

நாலுகால் பாய்ச்சலில் வந்தது
அருகருகில் ஆசுவாசமாய்
வெளிச்சமற்ற வேலிச்சுவர் ஓரத்தில்
முகர்தலுக்குப்பின் கடித்து
முத்த வேகம் மும்முரமாகி
வெறியோடு பாய்ந்து
யுத்தத்தையொத்திருந்த
முன்விளையாட்டுகள்
இடையில் இன்னொன்று வர
அதை விரட்டியது இவ்விரண்டில் ஒன்று
ஒன்று கிடந்தவாக்கிலிருக்க மற்றொன்று
நாவால் நக்கியபடி
பிணைந்த உருளுதலுக்குப் பின்
நின்றவாக்கில ஒன்று மற்றொன்றின் மேல்
அந்த கணத்தில் பிரசன்னமானார் கடவுள்
உச்சத் தருணத்தில் விசையுடன்
கல் பாய்ந்து விழ
தவம் கலைந்த அழுகுரலுடன் ஒன்றும்
உருவிய விறைப்படங்காத குறியுடன் மற்றொன்றும்
திசைக்கொன்றாய் சிதறியோடின
கல்லெறியப்பட்ட யெதிர்த்திக்கில்.

-----------------------------
இப்படி வாசித்தால் கவிதையின் பரிமாணம் மிகவும் கூடியிருப்பதாக உணர்கிறேன்.

(அனுமதியின்றி மாற்றம் செய்ததற்கு மன்னிக்கவும்)


/அகநாழிகை/
பொன்.வாசுதேவன்

Karthikeyan G சொன்னது…

Super!!

மண்குதிரை சொன்னது…

நல்லா இருக்கு நண்பா

பிரவின்ஸ்கா சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ஆதவா சொன்னது…

நாய் என்றே நினைத்து வந்தேன்... ரொம்ப நுட்பமான விவரிப்பு.. இப்படியோரு கருவில் நான் முன்பு கவிதை எழுதிய ஞாபகம் இருக்கிறது.

நான் இதுவரையிலும் நாய்கள் புணர்வதை மட்டுமே நேரில் கண்டிருக்கிறேன். நாய்கள் மேல் குரோதம் இருந்தாலும் இதுவரை கெடுத்ததில்லை, புணர்வினை!

ஆ.சுதா சொன்னது…

நுட்பமாக இருக்கு கவிதை.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க கவிதை.

நந்தாகுமாரன் சொன்னது…

கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது

நந்தாகுமாரன் சொன்னது…

ஆனாலும் அனுமாரைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது ...

Ashok D சொன்னது…

அதிவேகமாக ஓடி மறைகிறது கவிதை

பெயரில்லா சொன்னது…

//கல்லெறியப்பட்ட திக்கில்
அனுமனவதாரமாய்
ஒரேயொரு குரங்கு மட்டுமிருந்தது.//


சரியாதானே சொல்லியிருக்கிறார். ஏன் எல்லாரும் வேண்டாம் என்கிறார்கள்?

M.Rishan Shareef சொன்னது…

கவிதை நன்று யாத்ரா..ஆனால் குரங்குகளைச் சாடுவதுதான் நன்றாக இல்லை..அவை கூட இப்படிச் செய்யாது..மனிதன் மட்டும்தான் :(

யாத்ரா சொன்னது…

தமிழ்ப்பறவை,வெங்கிராஜா, மாதவராஜ், வடகரை வேலன், அகநாழிகை( நண்பர்கள் கருத்துப்படி தங்களுடைய திருத்தப்பட்ட கவிதையும் மிகப் பிடித்திருந்தது), கார்த்திகேயன், மண்குதிரை, பிரவின்ஸ்கா, ஆதவா, முத்து, சுந்தர், நந்தா, அசோக், பெயரிலி அனைவருக்கும் நன்றிகள் பல.

TKB காந்தி சொன்னது…

மிகவும் நுட்பமான கவிதை, நல்லா இருந்தது :)