புதன், 12 ஜனவரி, 2011

கலாப்ரியா கவிதைகள்

அவளின் பார்வைகள்

காயங்களுடன்
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும்
காக்கைகள்



தொலைவில் புணரும்
தண்டவாளங்கள்
அருகில் போனதும்
விலகிப் போயின



கைகள் காதலித்த
கண்ணாடி தம்ளர்
காதலை ஏற்காதென்
காலடியில்
நொறுங்கிச் சிதறியது
உடைந்த துகள்கள்
காலில் குத்தி
உறவாகி விட்டன
என் ரத்தத்தோடு



எச்சியிலைத் தொட்டியில்
ஏறிவிழும்
தெருநாயின்
லாவகம் எனக்கொரு
கவிதை தரப்பார்க்கிறது



கரித்துண்டொன்றை
தரையில் பைத்தியக்
கிறுக்கலாய்ப் படம்
போட்டுச் சாகடிக்கிறேன்
எரித்துக்கொள்வதைவிட இது
எவ்வளவோ மேல்



கூட்டிலிருந்து
தவறிவிழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை



அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை



என்ன செய்தும்
இவன் காலடியில்
தலைவைத்துப் பணிய
மறுக்கிறது நிழல்
இவனின் நிழல்



தூண்டில் மீனின்
துடிப்புகளைப் பாடுவதற்காய்
மட்டுமே நான்
ஆற்றோரம் காத்திருக்கிறேன்
அரை நிர்வாணிகளுக்காயில்லை



ஒப்பனைகளை
அழித்துவிட்டு
என்னுடைய
நாடகத்தை
நானே
என்று பார்க்க



ஒரு
தென்னம்பிள்ளையின்
கீழ்
சில கனகாம்பரம்
ஒரு செம்பருத்திச் செடி
எனத் தோட்டம் வளர்த்து
தண்ணீர் பாய்ச்சுகிற
தம்பியின்
மத்யான நிழல் மகிழ்ச்சிகளை
உன்னால்
அவனின் பரிமாணப் பிரக்ஞை
வெளித் தெரிய
கவிதையாக்க முடிகிறதா



எப்படியென்று
தெரியவில்லை
தாமரையிலையில்
நரகல்



அத்தனை
தூரம்
கடந்து
பார்க்க
வந்திறங்கினேன்
கூப்பிடும் தூரத்தில்
எதிர்த்திசையில்
பஸ் ஏறப்போகிறான்
கூப்பிடவில்லை



என் தலைக்குள் வலி

“தொடந்து மழை நாட்களில்
தொழுவம் விட்டகல
மறந்த பன்றிகளும்
காய்ந்து
மக்கிப்
போக முடியாத
மந்தை நரகல்களும்”
என்றொரு படிமம்
திணிந்து கொண்டு




கலாப்ரியா கவிதைகளைத் தேடித்தேடி வனம்புகுதல் தொகுப்பு மட்டுமே கிடைந்திருந்தது. அவரின் பழைய கவிதைத்தொகுப்புகள் கிடைக்காதிருந்தது. அவரின் மிகச்சில ஆரம்பகால கவிதைகளை அவரின் வலைத்தளத்தில் வாசித்திருந்தேன், அவரின் மொத்த கவிதைகளையும் வாசிக்க மிகுந்த ஆவலாயிருந்தது. தற்போது சந்தியா பதிப்பகத்தில் கலாப்ரியா கவிதைகள் மொத்த தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. இன்னும் முழுதாக வாசிக்கவில்லை, வாசித்தவரையில், சில கவிதைகளை பகிர்ந்திருக்கிறேன்

கலாப்ரியா பற்றி விக்ரமாதித்யன்

எழுபதுகளின் கவிஞரான கலாப்ரியாவின் கவிக்குரல் முழுக்கவும் தனியான ஒன்று, அன்றும் சரி, இன்றும் சரி, நவீன தமிழ்க் கவிதையிலேயே தனித்த ஒரு விசேஷமான வடிவம், நெகிழ்ச்சிகூடிய ஒரு அருமையான கட்டமைப்பு, ஆகச்சிறந்த ஒரு தனிக் கவிதைமொழி, அழகுபட்ட ஒரு கவிதைகூறல் ( பின்நாள்களில் இது கதைகூறல் போல இருக்கும் ) செய்நேர்த்தி, காட்சிகளாய் விரியும் உலகம் இவையெல்லாம் ஒன்று கூடித் திரண்டு சமைந்த புதுக்கவிதைகள் அவருடையவை, இந்த பண்புயல்புகளுககெல்லாம் மேலாய்ச் சொல்லவேண்டிய ஒரு பண்பியல்பு, மனவெழுச்சி கொண்ட கவிதைகள் அவை என்பது. எவ்வளவு பெரிய கவிதைக் கூட்டத்திலும் கலாப்ரியா கவிதையைத் தனியே அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதிலிருந்தே அருடைய தனித்தன்மையை கவி ஆளுமையைத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்க் கவிதை சரித்திரத்திலேயே கலாப்ரியா கவிதைகள் தனியானவை, இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க் கவிதையிலேயே காணக்கிடைக்காத உணர்வெழுச்சியும் துடியும் கட்டவிழ்ந்த மனவெளிப்பாடும் கொண்ட அபூர்வமான கவிதைகள், முற்றிலும மனத்தடைகளை உதிர்த்து உதறியெழந்து நிற்கும கவிதைகள். கலாப்ரியாவின் கவித்துவம் ஒப்பிட இயலாதது என்பது மட்டுமில்லை. ஒரு இனத்தில் / மொழியில் எப்பொழுதோ நிகழ்க்கூடியதுமாகும்.

நவீன கவிதை என்று மட்டுமில்லை, தமிழ்க் கவிதையிலேயே பிரமிள், நகுலன், ஞானக்கூத்தன், தேவதேவன், ஆகியோரின் பங்களிப்பும் ஸ்தானமும் எந்த அளவுக்கு முக்கியமானதும் நிச்சயமானதுமோ அதே அளவுக்குக் கலாப்ரியாவின் இடமும் கொடையும் உறுதியானதும் முதன்மையானதும் ஆகும், இந்த ஐந்து பேரையும் எந்தத் தயக்கமுமில்லாமல் மகாகவிகளாக வரித்துக் கொள்ளலாம். காலம் இப்படியே இவர்களை ஏற்றுக் கொள்ளும்.

கலாப்ரியா கவிதைகள்
சந்தியா பதிப்பகம்

6 கருத்துகள்:

ஆதவா சொன்னது…

எனது இஷ்ட கவிஞர்... மிக அருமையான் கவிதைகள்... சிலவற்றை வாசிக்கும்பொழுது ஒருநிமிடம் நின்று வாசிப்போம்!!

ஆதவா சொன்னது…

பகிர்ந்த ஒவ்வொரு கவிதைகளையும் வாசிக்கும் பொழுது மனது சந்தோசமடைகிறது

பத்மா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பத்மா சொன்னது…

நன்றி பகிர்தலுக்கு ..
என் சிறு முயற்சி ..இதுவும் வனம் புகுதல் தொகுப்பிலிருந்து
http://kakithaoodam.blogspot.com/2010/07/blog-post_20.html

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

என்ன சொல்ல ?அருமை .பகிர்வுக்கு நன்றி யாத்ரா.

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி யாத்ரா.