ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

ஊமைப் பிரியம்

வீசியெறிய மனமின்றி
மீண்டும் மீண்டும்
ஓட்டுகிறாள்
பலநாள் நெற்றியிலிருந்த
அந்த ஸ்டிக்கர் பொட்டை

தான் பாரமாயிருப்பதாய் எண்ணி
கூந்தல் சூடிய சரத்தினின்று
தன்னை உதிர்த்துக் கொள்ளும்
மலர்களைப் போல
உதிர்ந்து வீழ்கிறது
அந்தப் பொட்டு
ஒட்ட வைக்கப்படும்
ஒவ்வொரு முறையும்

காலத்தால் பசை தீர்ந்த அதை
கைவிடுவதைத் தவிர
வேறு வழியிருக்கவில்லை

அதன் இருப்பின்
வெள்ளைத்தடம் மறையாத
அந்த நெற்றியில்
வீற்றிருக்கிறது
மற்றொரு பொட்டு
தன் எதிர்காலத்தையுணராது

வீட்டைக் கூட்டுகையில்
தட்டுப்பட்ட அதைப்பார்த்து
அப்படியே அமர
அவள் விழியோரத்திலிருந்து
ஒரு சொட்டு
நனைக்கிறது
அந்த உதிர்ந்த பொட்டை

22 கருத்துகள்:

Ashok D சொன்னது…

பிரமாதம்... மாதம் ஒன்று போயினும் சரியாகதான் வந்து அமர்ந்தி இருக்கிறாய் உன் சிம்மாசனத்தில் ’ஊமைப் பிரியம்’ மூலம் கவிஞனே. சற்றேரக்குரிய இதே பொருள்படும் கவிதை ஒன்றை நானும் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் :)

Thamira சொன்னது…

நன்று.

Unknown சொன்னது…

உணர்வுகள்..

superb..

Sugirtha சொன்னது…

Welcome Back! :-)
கவிதை நல்லாயிருக்குப்பா!!

மரா சொன்னது…

அருமை. கண்ணாலம் கட்டுனவுடனே என்ன அருமையா வரிகள் விழுது. திருமண வாழ்க்கை இன்புற வாழ்த்துக்கள்.

Vidhoosh சொன்னது…

lighter sense::
குங்குமம் வைச்சு விட்டுடுங்க :))


கவிதை அருமை. :)

ஜெனோவா சொன்னது…

எனக்கு மிகப் பிடித்திருக்கிறது !

பா.ராஜாராம் சொன்னது…

Vidhoosh கூறியது...
lighter sense::
குங்குமம் வைச்சு விட்டுடுங்க :))//

என்ன அருமையான டைமிங் கவிதையும்,பின்னூட்டமும் செந்தி,வித்யா!

அகநாழிகை சொன்னது…

மாப்ளை, அருமை.

பெயரில்லா சொன்னது…

\தான் பாரமாயிருப்பதாய் எண்ணி\
அவனுக்கா? தனக்கு தானேவா?

\காலத்தால் பசை தீர்ந்த அதை\
அவளுக்கு அவன் மேலா? அவனுக்கு அவள் மேலா?

\அதன் இருப்பின்
வெள்ளைத்தடம் மறையாத
அந்த நெற்றியில்
வீற்றிருக்கிறது
மற்றொரு பொட்டு
தன் எதிர்காலத்தையுணராது\
அப்போ அவனுக்கு அவள் மேலிருந்ததுதான்....

\அவள் விழியோரத்திலிருந்து
ஒரு சொட்டு
நனைக்கிறது
அந்த உதிர்ந்த பொட்டை\
பலகீனம்? பிடிச்ச நெத்திய தேடிப் போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான? அது என்ன ஊமை பிரியமா? இல்ல அடிமையின் மடத்தனமா?
.
.
.
இல்ல கவிதை வாசிக்க தெரியாத என் மடத்தனமா? :-)

யாத்ரா சொன்னது…

பெயரில்லா

யாருங்க நீங்க :)

இங்கே சொல்ல விருப்பமில்லையெனில் மின்னஞ்சல் அனுப்பவும் ssenthilqa@gmail.com

ரொம்ப நாள் பிறகு இந்தப் பக்கம் வந்திருக்கேன், நண்பர்கள் வந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிங்க.

KarthigaVasudevan சொன்னது…

கவிதை நல்லா இருக்கு யாத்ரா.(அட ஒரு ஸ்டிக்கர் பொட்டுக்கு இவ்ளோ உருக்கமா! )
:)

பெயரில்லா சொன்னது…

\\பெயரில்லா

யாருங்க நீங்க :) \\
மறைத்துக் கொள்ள வேண்டிய மறுபக்கமெல்லாம் இல்லை. நேசிக்கிற, அதீத (கொஞ்சம் கலந்து)மரியாதையுடன் பழகுகிற சிலபேரிடம், சில நேரங்களில் கொஞ்சம் குறும்பு செய்யத் தோன்றும், கொஞ்சம் கோபிக்கத் தோன்றும், முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு முரண்டு பிடிக்கும் குழந்தை போல எதிர்கேள்வி கேட்கத் தோன்றும். அந்த அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியாத தகுதியோடுதான் நான் இருக்கிறேன் என்பது என் ஊகம். அது என் கூச்சமாகவோ ஒருவேளை தாழ்மை உணர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனால் அப்படித்தான் நான் இருக்கிறேன். அதே நேரம் அந்த சேட்டைகளையும் செய்யாமல் இருக்க முடியவில்லை. அதற்காகத்தான் இந்த அடையாள மறைப்பு. அவர்களும் யாரோதானே என்கிற சுதந்திரதில் என் செய்கைகளை அல்லது "யார்ரா இவன்?" என்கிற சின்ன புன்னகையோடோ கடந்து சென்றுவிடுவார்கள். மற்றபடி காயப்படுத்துகிற,கெட்டவார்த்தையில் திட்டுகிற நோக்கமெல்லாம் இல்லை. தங்களின் அடர்த்தியான வரிகளையும்,புருவம் உயர்த்த வைக்கிற கற்பனைகளையும் தொடர்ந்து வாசிக்கிறேன். ஊமைப்பாசம்(??) கேள்வி கேட்க தூண்டியது. எனவேதான். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
தொடர்வேன், தொடர்வோம்.

யாத்ரா சொன்னது…

அன்பு பெயரில்லா,

மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கிறேன். யாருங்க நீங்க, நான் யோசித்து யோசித்து மண்டை காய்ந்து கொண்டிருக்கிறேன். நாம் சந்தித்திருக்கிறோமா, அல்லது இணையம் மூலம் மட்டும் தான் பரிச்சயமா, நாம் பேசியிருக்கிறோமா எதுவுமே தெரியலங்க. எழுத்து நடையை வைத்து நீங்கள் யாரென்று கண்டுபிடிக்கலாம் என்று முயற்சித்துப் பார்த்தேன், முடியவில்லை, நண்பர்கள் யாராவது இவர் யாராக இருக்கும் என யூகித்துச் சொன்னால் நன்றாக இருக்கும். பாருங்க, நல்ல விளையாட்டுங்க இது. ஏங்க இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம், அனானி கமண்ட் போடுங்க, ஆனா எனக்கு மெயில் பண்ணி நீங்க யாருன்னு சொல்லுங்க ப்ளீஸ், எனக்கு சஸ்பென்ஸ் தாங்கல :)

மறுபடியும் மறுபடியும் படிச்சி பாத்ததுல நீங்க யாருன்னு ஓரளவுக்கு யூகிக்க முடியுதுங்க, இன்னும ரெண்டு நாள்ள கண்டுபிடிச்சிடுவேன் நீங்க யாருன்னு :)

ரௌத்ரன் சொன்னது…

அழகான கவிதை :))

தரங்கிணி சொன்னது…

சும்மா ஒரு எட்டு பார்க்கலாமேன்னு வந்தா, புதுசா ஒரு கவிதை போட்டிருக்கீங்க! அழகான கவிதை செந்தில் :) ரசிச்சு படிச்சேன். விரிவா அப்புறம் எழுதறேன். சண்டையும் சந்தோஷமுமா முதல் மாதம் கடந்திருக்கும் :) என்ற நம்பிக்கையில்,

தரங்கிணி.

Tharangini சொன்னது…

I must be the first person in history to translate 'fortnight' into 'maatham'. Stupid me! :D

Gowripriya சொன்னது…

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

நல்ல கவிதை .

உயிரோடை சொன்னது…

கவிதை நல்லா இருக்கு. நிறைய எழுதுங்க யாத்ரா.

இரசிகை சொன்னது…

nallaayirukke........!

Rajesh V சொன்னது…

கவிதை மிக அருமை...