வியாழன், 10 ஜூன், 2010

உமா மகேஸ்வரி கவிதைகள்

பூக்காத செடிகள்

ஏதாவது பேசு
துவைக்காத சட்டை, சுவைக்காத குழம்பு
இவற்றோடு இன்னும்
இலக்கியம் சினிமா என்றில்லாவிடினும்
இன்று கண்ட புதியமுகம், எதிர்பாராத
சம்பவம், வாகன நகர்த்தலில்
வடிவழகு கெடாத கோலம்
வந்து போன வியாபாரத் தந்திரம்
பூக்காத செடியின் யோசனை
புதிதான புத்தக வாசனை என்று
சொல்லேன் எதையாவது.
தினங்களின் கனத்தில்
நசுங்கிய ஞாபகங்களுக்கு
மூச்சு தா
ஜன்னல் வெளியின் பொன்தூசியையும்
நீர்க்கிண்ணத்திலாடும் நிலவையும்
அள்ள முனையும் எனை நோக்கி
முறுவல் செய்
அல்லது முட்டாளென்று சொல்
அடிவயிற்றுக் கருவின் அசைவை
அறிவிக்க உன் கை பற்றிப் பதிந்த போது
அவசரமாய் உதறிப் போனாயே
அதற்கு வருத்தம் தெரிவி உடனடியாக.
அவிர்த்து எறியுமுன்
புடவையடுக்குள் புதைந்த பூக்களையாவது
ரசித்துக் கவனி.
அடுத்த முறை எனை நீ
அழுத்தும் இரவுகளில்
வெளியிலசையும் தென்னையை
வெறிப்பதையாவது
விசாரி ஏன் என்று எப்போதாவது.

•••••

ஒன்றுமில்லை நான் தீர்ந்தேன்
கிடக்கட்டும் இந்த பிரச்சனைகள்
உறங்க வேண்டும் நான்
உரத்த பேச்சு
முடிவற்ற விவாதங்கள்
அலுத்த ஆலோசனைகள்
நைந்து விழுந்த இந்நாள்.
நடமாற்றங்களற்ற நதியொன்றின் கரையில்
என்னை இனியாவது
தனியாகத் தூங்கவிடு
வெல்வெட் மெத்தைகளில்
விரிகின்ற வலைகளில்
வியர்த்து சிறு பூச்சியானேன்.
பயணத்தின் திசை
தெரியப் பிரியமில்லை
இறப்பின் வரப்புகளில்
இன்றும் காத்தருந்த நம்பிக்கை
நகர்ந்து போவதை
நடுங்கிப் பார்க்கிறேன்.
கேள்விகளை சிக்கல்களை
தீராத குழப்பங்களைப்
பொட்டலமாக்கி
எடுத்துப் போ உன்னோடு.
நதிக்கரையில் புதர்மடியில்
நான்மட்டும் தனியாகத்
தூங்கவிடு.

••••••••

குழந்தைக்கால் நுனிகளென
ஆரம்ப மழைத்தடங்கள் என்
கார்த்திகைக் கோலத்தில்
நேர்த்தி தான் பார்ப்பதற்கு;
தீபங்களுக்குப் பதிலாக நீர்ச்சுடர்கள்
வலுத்துப் பெருத்ததில்
வர்ணப்பொடி கரைசல்
திரவ வானவில்லாக.
நின்றதும் மறுபடி வரைதல்.
முடித்துத் திரும்புமுன்
வெடித்துச் சாடும் மழையின் ஆக்கேராஷம்.
கனவின் சிதைவைக்
கண்ணுற்றேன் இம்முறை

•••••••••••••

சொல்லாதது

உரையாடல்களின் முற்றுப்புள்ளி
சுழன்று விரிகிறது வளைகிறது
சொல்லமற் போன ஏதோ ஒன்றின்
கேள்விக்குறியாக.
சொல்வதற்கான திட்டங்களோ
சொல்லாததற்குரிய சகஜமின்மையோ
இல்லை நம்மிடையே
இருந்தாலும்
இரைச்சல்கள் நெரிசல்களிடையே
நசுங்கி உப்பியபடியிருந்தது நாம்
பகிராத எதுவோ

பிரிவில் கையசைத்த பின்பும்
தேடிக் கொள்கிறேன் என்னுள்
ஆடையில் ஒட்டிய உதிராத புல்லென
அது எதுவென்று

•••••••••••••

நேற்று என்னுடையதாக இல்லை
என் சிதறிய அழுகை
எனினும் ஆராய்ந்தேன்
வேகமான உரையாடல்களில்
வெடித்து ஒரு கீறல்
உருவாகும் விதம் குறித்து.
கண்ணாடியில் போலவோ
காய்ந்த நிலத்தில் போலவோ
உலர்ந்த நதியில் போலவோ........

•••••••••••••

மேகம் கருத்திருக்கிறது
மழை வருமென்று
சொல்லிவிட்டேன் தெரியாத்தனமாய்
குழந்தை கேட்கிறாள்
எப்போது மழை வரும் ?
அங்கே கிளம்பினால்
இங்கே வந்துவிடுமென்று
சமாளித்தேன். அடுத்த வினா
எப்போது அங்கே கிளம்பும் ?
‘வரும் போது வரட்டும்’ என
மழுப்பி நகர முனைகையில்
குறுக்கிடும் மற்றொன்று.
‘வரும் போது எப்போ வரும்’
‘வரும் பொழுது, வரும் போது
தானே வருமென்றால்
அவளுக்குப் புரியவில்லை.
ஒருவேளை எப்படியோ
புரிந்ததோ என்னவோ.
விளையாட்டெல்லாம் துறந்து,
வாசல் வரைவில் தேய்படும் கன்னத்தோடு,
வரும் பொழுதிற்காக அவள்
காத்துக்கிடப்பது
என்னை வருத்துகிறது ஏதோ மாதிரியாய்.
நானும் அவளோடு
நின்று காத்திருத்தலன்றி
தெரியவில்லை வழியொன்றும்.

•••••••••••••••

நம்
மழலை பதிந்த ஒலிநாடாக்கள்
அழிபடவேயில்லை
சிறுமிப் பிராயத்தின் கூடாரங்கள்
திறந்தேயிருக்கின்றன.
மரச்செப்புகளில் வேகிற சாதம்
ஆடுகுதிரையில் என் முதுகைக்
கட்டிக் கொண்டிருக்கும் நீ.
மரணச் சுவடுகளை அனுமதிக்காது
நம் குழந்தைமையின் வெளி
அழிவல்ல உன் இறப்பில் நேர்ந்தது
அணுகிவிடக் கூடியதான
சிறு தொலைவும் பிரிவும்

••••••••••••••••••••

ஏனித்தக் குருவியை
இன்னும் காணோம்
எனக்கு மகா செல்லம் அது
பழுப்புக் கலரில் அழுக்குக் குஞ்சு.
சின்ன இறக்கைகளில்
கறுப்புப்கோடு தெரியும்.
கண் மட்டும்
கண்ணாடிக்கல் மாதிரி
வெளிச்சத் துறுதுறுக்கும்.
உரிமையாய் கூடத்தின்
உள்ளே நுழைந்து நடக்கும்.
புத்தகம் ஒதுக்கி
அதையே கவனிக்கும் என்னை
அலட்சியப்படுத்தும்.
மாடி வெயிலில்
வேட்டியில் காயும்
வடகத்தை அலகால் நெம்புதல்,
தோல் உரிக்காது
நெல்லை விழுங்குதல்,
துணிக்கொடியில் கால் பற்றிக்
காற்று வாங்குதல்,
அறைக் கண்ணாடியில்
தன்னைத் தானே
கொத்திக் கொள்ளுதல்
அதற்குப் படித்தம்.
நான் இறைக்கும்
தானியமணிகளை
அழகு பார்த்துத் தின்னும்
ரசனாவாதி.
ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்
அதுவரும் மாலை
மெதுவாய் நகருதே
கீழ்வானப் பரப்பில்
கண் விசிறித் தேடினும்
காணவில்லை, எங்கு போச்சோ
திடுமெனக் காதில்
தித்தித்தது அதன் கீச்சுக்குரல்
ஜன்னல் பிளவில்
உன்னிப் பார்த்தால்
அடுத்த வீட்டு முற்றத்தில்
இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி
அழகு பார்க்கும் என் குருவி
என் முகம் ஏறிடாது
திரும்பிக் குனியும் விழிகளை


( வெறும் பொழுது - உமா மகேஸ்வரி
தமிழினி பதிப்பகம் )

11 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

கவிதைகள் நன்று யாத்ரா

-ப்ரியமுடன்
சேரல்

அகநாழிகை சொன்னது…

மாப்ளே.. மீண்டு(ம்) வந்துட்டியா?

0

அருமையான கவிதைகள்.
ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.
மறுபடி வாசிக்க பகிர்ந்ததற்கு நன்றி.

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்துக் கவிதைகள்!

சென்ஷி சொன்னது…

நல்ல கவிதைகள் யாத்ரா..

பகிர்விற்கு நன்றி!

நேசமித்ரன் சொன்னது…

யாத்ரா..!

பகிர்விற்கு நன்றி

எங்க பாஸ் ஆளையே காணோம் :)

Ashok D சொன்னது…

நல்லாயிருந்தது யாத்ரா :)

மரா சொன்னது…

இக்கவிதைகள் சொல்லாமல் சொல்லும் விசயங்கள் நிறையா.நன்றி.

பா.ராஜாராம் சொன்னது…

மிக அருமையான கவிதைகள்.

பகிர்வுக்கு நன்றி யாத்ரா.

Unknown சொன்னது…

நல்ல கவிதைகள்.

பகிர்விற்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

hi,


subject: just show only post titles instead of showing both post title
and its content.

Bloggers don't know the mentality of readers. They are showing both
post title and its content. It must be avoided. Surely. Bloggers must
show only post titles as like s.ramakrishnan has in his blog.

Please not these 3 things:

1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் உள்ள
போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள்.
அதிலும் ஒரு 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக
இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே
இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே
fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின்
தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.

2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட
தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive side barல் உள்ளது. அதை
திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும்
பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.

3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி
பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு
கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது
அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த
பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள்
கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக
blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்
என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து
பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை.
நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள்
மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும்
பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி
கிடைத்திருக்கும்.

So, Please set your blog to show just post titles only instead of
showing both title and its content as in my blog
http://blufflink.blogspot.com/

A blogger followed my tips and she has changed her blog to show only
post title. Watche her blog http://livingsmile.blogspot.com/

For showing only post title instead of showing both title and its
content visit and follow steps mentioned here

http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

(If you decide to show only post title in your blog after changing it
so set you blog to show 50 post titles per page. It will enable the
reader to have very quick glance of your posts.

Sugirtha சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குப்பா எல்லா கவிதைகளும்!