செவ்வாய், 13 அக்டோபர், 2009

ஆனந்த் கவிதைகள்



அந்த நாள்
எனக்கு நன்றாக
நினைவில் இருக்கிறது

அன்று என்ன
நடந்தது என்பதுதான்
ஞாபகமில்லை




மாடிப்படியில்
ஏறிக்கொண்டும்
இறங்கிக்கொண்டும்
இருக்கிறார்கள் அனைவரும்

ஏறிக்கொண்டும்
இறங்கிக் கொண்டும்
இருக்கிறது மாடிப்படி



படுகை

பறக்கும் பறவையில்
பறக்காமல் இருப்பது
எது

ஓடும் ரயிலில்
ஓடாது நிற்கிறது
ஜன்னல்

எங்கும் போகாமல்
எங்கும் போய்க் கொண்டிருக்கிறது
சாலை

எப்போதும் போய்க் கொண்டே
எங்கேயும் போகாமல் இருக்கும்
நதி
எங்கும் போகாமல் இருக்கும்
படுகையின்மேல்
எப்போதும் போய்க் கொண்டிருக்கிறது



சுவருக்கு வெளியில் இருந்து
சுவர்களைப் பார்த்து இருந்தேன்
உள்ளும் புறமும் தெரிந்தது

பின் சுவரானேன்
உள்ளும் புறமும்
ஒன்றெனத் தெரிந்தது

இப்போது
சுவருக்குள் என்ன இருக்கிறது
என்பதைத்தான்
பார்க்கவேண்டும்

சுவர் தன்னைப் பார்க்கும்போது
சுவர் இல்லாமல் போகிறது

( அளவில்லா மலர் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம். இவரும் தேவதச்சனும் இணைந்து அவரவர் கைமணல் எனும் தங்கள் முதல் கவிதைத் தொகுதியை கொண்டுவந்தார்கள் என அறிகிறேன். )

7 கருத்துகள்:

பா.ராஜாராம் சொன்னது…

நல்ல பகிர்வு யாத்ரா...நன்றி!

இரா. சுந்தரேஸ்வரன் சொன்னது…

//
சுவர் தன்னைப் பார்க்கும்போது
சுவர் இல்லாமல் போகிறது
//

நான் ஆனந்த்-ஐ கண்டறிந்தது இந்த வரிகளில் தான்.

Ashok D சொன்னது…

ஆனந்த் கவிதைகள் ஆனந்தம்.
கடைசியில் பரமானந்தம்.
நன்றி யாத்ரா..

Karthikeyan G சொன்னது…

//எங்கும் போகாமல்
எங்கும் போய்க் கொண்டிருக்கிறது
சாலை

எப்போதும் போய்க் கொண்டே
எங்கேயும் போகாமல் இருக்கும்
நதி//

Superb, thanks for sharing..

Kumky சொன்னது…

ஏ யப்பா....

எங்கிட்டோ கொண்டு போறாருப்பா....

Kumky சொன்னது…

அற்புதம் யாத்ரா..
திரும்ப திரும்ப வாசித்துப்பார்க்கிறேன்..
வேறு வேறு அர்த்தங்களை தர வல்லதாயிருக்கிறது.....இந்த கவிதைகள்.

லா.ச.ரா வின் கதை என்று நினைக்கின்றேன்.ரொம்ப காலம் ஆகிவிட்டது.
ஒரு தேவியை பற்றின வர்னனை.வர்னனை என்று கூட சொல்ல முடியாது.அனுபவம் போலிருக்கும்.அப்படியே வார்த்தைகளில் முங்கிப்போய் மயிர்காலகளெல்லாம் குத்திட்டு கண்களில் நீர் தளும்ப ஒரு உச்சத்திற்க்கு போய்வந்தாகிவிட்டது.
திரும்ப படித்தாலும் அது போன்றதொரு நுட்பமான உணர்வு வருமாவென தெரியவில்லை.
அதில் பாதியளவாவது முங்கவைக்கின்றது இந்த வரிகள்.

எனக்கு மிகப்பிடித்தமான கவிஞர் மலையாளக்கவி குஞ்ஞுண்ணி மாஸ்டர்...
இந்த கவிதைகள் கூட மாஸ்டரின் வரிகளுக்கொத்ததாக இருக்கிறது.

(பேச்சுக்கும் எழுத்திற்க்குமான இடைவெளிகளை எப்போதுமே இட்டு நிரப்ப இயாலாதென தோன்றுகிறது...யாத்ரா....ஏன் இன்னும் இரவல் என்றுதான் கேட்க நினைத்தேன் ஆனாலும் இந்த ரசனை மிக்க வரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கொலைகாரப்பட்டியலில் இன்னுமொரு நபரை சேர்க்கவேண்டியதாகிறது.)

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

மனதை புரட்டிப் போடும் கவிதைகள்.. அருமை.. பகிர்வுக்கு நன்றி நண்பா..